Home>>ஆன்மீகம்>>தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி – 2 )

“பெரியாரியம்” என்பது என்ன? – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


தமிழின எதிர்ப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு, திராவிடத் திணிப்பு போன்ற பெரியார் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முற்போக்கான கருத்துகள் அவரிடம் இருக்கின்றன.

பிராமணியம், வர்ணாசிரமம், ஆரியம், சமற்கிருதம், சாதி முதலியவற்றைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இவற்றை நீக்கிவிட்ட – மாற்று சமூக இயங்கியலைப் பெரியார் முன்வைக்கவில்லை. அவரால், மாற்று சமூகவியலை சொந்தமாகச் சிந்திக்க முடியவில்லை. அதனால் பல கேடுகள் நிறைந்த ஆங்கிலேய சமூகத்தை மாற்றுச் சமூக அமைப்பாகப் பெரியார் முன்வைத்தார்.

ஐரோப்பிய சமூகம் அறிவியல் கண்டுபிடிப்பில் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்த்து 50 ஆண்டுகளுக்குப் பின் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னென்ன வரும் என்று நூல் எழுதினார். மாற்றுச் சமூக அமைப்பை அவர் முன்வைக்கவில்லை. அவரே சொல்லிக் கொண்டபடி அவர் அழிவு வேலைக்காரரே தவிர, ஆக்க வேலைக்காரர் அல்லர்!

காரல் மார்க்ஸ், முதலாளிய ஒழிப்பை முன்வைத்தார்; மாற்றாக நிகரமைச் சமூக அமைப்பை (Socialist Society) முன்வைத்தார். கம்யூனிஸ்ட்டுகளின் முதற்பெரும் இலக்கு நிகரமைச் சமூகம் அமைப்பதுதான். உழவன் நெல் சாகுபடிக்கு உழும்போது களைகள் அழிக்கப்படுவதுபோல், முதலாளிய சமூக அமைப்பு ஒழிப்பு என்பது அவர்களின் நிகரமை (சோசலிச) திட்டத்தின் ஒரு பகுதி.

பல நாடுகளில் நிகரமைப் புரட்சிகள் வென்றன. செயல்பட்டன. 72 ஆண்டு கழித்து சோவியத் ஒன்றியம் வீழ்ந்தது. ஆனால் இன்றும் பொதுத்துறைத் தொழிற்சாலைகள் பல நாடுகளில் முகாமையான பங்கு வகிக்கின்றன. சீனம், கியூபா, வியட்நாம் நாடுகளில் நீண்டகாலமாக கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆட்சியே தொடர்கிறது.

காந்தியடிகள் மேற்கத்திய ஏகபோக முதலாளிய உற்பத்தி முறையை எதிர்த்தார். ஆனால், அவர் முதன்மைப்படுத்தியது, சிறுசிறு தற்சார்புப் பொருள் உற்பத்தி, மரபுவழி வேளாண் முறை, கைத் தொழில்கள், கதர் உற்பத்தி போன்றவை.

காந்தியடிகள் தொடங்கி வைத்த சிறு ஊரகக் கைத்தொழில்கள், சிறு உற்பத்தி முறைகள் இன்றும் செயல்படுகின்றன. சர்வோதயம் என்ற பெயர் உள்ளிட்ட பெயர்களில் காந்தியடிகளைப் பின்பற்றும் பொருள் உற்பத்தியும், விற்பனையும் வணிக இலாபத்தோடு நடக்கின்றன. இன்றும் கதர் உற்பத்தியும் கதராடை அணிதலும் தொடர்கின்றன. நம்மாழ்வார் வலியுறுத்திய, கொணர்ந்த மரபுவழி வேளாண் முறைக் காப்பிற்கும் மூலவராகக் காந்தியே விளங்குகிறார்.

மார்க்சியத்தில் இன்றும் காலத்துக்கேற்ற புதுப்புது சிந்தனைகளும் வளர்ச்சிகளும் அறிஞர் பெருமக்களால் தொடர்கின்றன. அதேபோல் காந்தியடிகளின் ஊரக – ஆதாரப் பொருளியல் கொள்கையைப் பலபேர் ஜே.சி. குமரப்பா தொடங்கி இன்றைக்கும் ஆய்வு செய்கின்றனர். புதுப்புது கருத்தியல்களை உருவாக்குகின்றனர்.
பெரியாரியச் சிந்தனைகளின் அடிப்படையில் புதிய வடிவில் சமூகச் செயல்திட்டங்கள் பெரியார் காலத்திலும் இல்லை. இப்போதும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் பிராமணப் புரோகிதரும், சமற்கிருதமும் நீக்கப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள், நீத்தார் நினைவு நாட்கள் ஆகியவற்றைப் பெரியார் சிந்தனைகளின் பங்களிப்பாகப் பாராட்டலாம். அப்போக்கின் விகிதம், சமூகச் செயல்பாடுகளில் குறைந்து வந்தாலும், அவற்றிற்கான பெருமை பெரியாருக்கும், தொடக்ககாலத் தி.மு.க.வினருக்கும் உரியவை.

பெரியார் சிந்தனைகள் ஒரு தத்துவமாக இருந்தால், அதில் வளர்ச்சிகளும், புதிய புதிய சிந்தனைப் பிரிவுகளும் அடுத்த தலைமுறை அறிவாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும். மார்க்சியத்தில் புதிய மார்க்சியம் (Neo Marxism) என்ற சிந்தனைப் பள்ளி வளர்ந்து கொண்டுள்ளது. காந்தியத்தில் காந்திய நிகரமை (Gandhian Socialism) என்ற சிந்தனைப் பள்ளி வளர்ந்து கொண்டுள்ளது. ஜே.சி. குமரப்பா தொடங்கி இன்றைய காந்திய ஆய்வாளர் பேராசிரியர் பழனிதுரை வரை காந்தியத்தை மேலும் மேலும் சமகாலப்படுத்தினர்.

மதங்களில் கூட புதிய புதிய வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. புத்தத்தில் மகாயானம், ஹீனயானம் என்பவை பழைய பிரிவுகள். இப்போது, சப்பானிய புத்தத்திற்கும் தாய்லாந்து புத்தத்திற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. புத்த சிந்தனைகளைக் காலத்திற்கேற்ப வளர்த்துக் கொண்டுள்ளார்கள். சிவனியம், மாலியம் ஆகிய சமயச் சிந்தனைகள் புதிய புதிய விளக்கங்களுடன் வளர்கின்றன. கிறித்தவத்தில் பழைய காலத்தில் ஆர்.சி, புராட்டஸ்ட்டண்டு பிரிவுகள் தோன்றின. இசுலாத்தில் சன்னி, சியா பிரிவுகள் மட்டுமல்ல மற்றும் பல சிந்தனைப் பள்ளிகளும் உருவாகியுள்ளன.

பெரியாரியத்தில் எந்தப் புதிய வளர்ச்சியும் ஏற்படவில்லை. காரணம், அது எதிர்ப்பு வேலைத் திட்டங்களையே முதன்மைப்படுத்தியது. ஆக்க வழிப்பட்ட மாற்றுச் சமூகத் திட்டங்களைச் சொந்தமாக முன்வைக்கவில்லை.
இடஒதுக்கீடு, சமூகநீதி பெரியாரால்தான் கொண்டு வரப்பட்டன என்று பிழையான பிம்பத்தைக் கட்டமைத்துள்ளனர் திராவிடவாதிகள். ஆங்கிலேய அதிகாரிகளால் தொடங்கப்பட்டது அச்சிந்தனை!
பனகல் அரசரின் நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி ஒதுக்கீடு ஆணை போட்டார்கள். செயல்படுத்தவில்லை.

புதிய வகுப்புவாரி ஆணை பிறப்பித்து முதல் முதலாக 1927இல் இடஒதுக்கீட்டை செயல்படுத்தியது தமிழர் சுப்பராயன் அமைச்சரவை. அப்போது செயல்படுத்திய துறையின் அமைச்சர் தமிழர் முத்தையா முதலியார். பின்னர் காங்கிரசு முதல்வர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார் இடஒதுக்கீட்டு விகிதத்தை மேம்படுத்தினார்.
இவ்வளவையும் நான் பேசுவதற்குக் காரணம், இந்து மத ஒழிப்பை முன்வைத்த பெரியார், அதற்கு மாற்றாக வேறொரு பண்பாட்டுத் திட்டத்தை முன்வைத்துச் செயல்படுத்தவில்லை. அதற்கு முதல் தேவை இந்து மதத்தை விட்டு வெளியேறுவதாகும். பெரியாரும் இந்து மதத்தை விட்டு வெளியேறவில்லை; பெரியாரியர்களும் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை.

இந்து மதத்தைவிட்டு வெளியேறாததற்குப் பெரியார் சொன்ன காரணம் மிகவும் விந்தையானது. “இந்து மதத்திற்குள் நான் இருந்தால்தான், அதைக் கண்டித்து, எதிர்த்து என்னால் பேச முடியும். வெளியேறிவிட்டால் இப்போதுபோல் பேச முடியாது”. இந்து மதத்தை எதிர்த்துப் பேசுவதுதான் அவரது வேலைத் திட்டம்; இந்து மதத்திற்கு மாற்றாக – புதிய சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது அவரது வேலை அல்ல என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி என்றால், என்ன பொருள்? மாமூல் நிலையைத் (Status quo) தொடர்பவர் என்று பொருள்!

எதுவும் அப்படியே இருக்காது; வளரும் அல்லது தேயும் என்பது இயற்கையின் இயக்க விதி! சமூகவியல் விதியும் அதுவே!

இப்பொழுதுள்ள இந்து சமூகத்தின் மாமூல் நிலை அப்படியே இல்லை. பெரியார் காலத்தைவிட இந்து மதப்பற்று தமிழர்களிடையே அதிகம் வளர்ந்துள்ளது. கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவோர் விகிதம் பெரியார் காலத்தைவிட மிக அதிகமாகியுள்ளது.

திராவிடர் கழகத்தார் வீடுகளில் 100க்கு 90 வீடுகளில் வீட்டுக்குள் சாமி கும்பிடுகிறார்கள். திராவிடர் கழகச் செயல்பாட்டாளர்கள் ஆணோ, பெண்ணோ சாமி கும்பிடாமல் இருக்கலாம். இதரக் குடும்ப உறுப்பினர்கள் சாமி கும்பிடுகிறார்கள்.

திராவிடத்தின் இன்றைய அசல் வாரிசாக வலம் வரும் திரு. மு.க. ஸ்டாலின் அண்மையில் சொன்னார் : “தி.மு.க.வில் 100க்கு 90 பேர் இந்துக்கள்!”. திராவிடத்தின் – பெரியாரின் இந்து மத ஒழிப்பு என்னாயிற்று?

(தொடரும்)

பகுதி – 1


கட்டுரை உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


கட்டுரை சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply