Home>>அரசியல்>>இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
ஐயா மணியரசன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

“கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்!

#MakeIndiaFullFederation

தஞ்சை – காவேரி திருமண மண்டபத்தில் 10.05.2025 அன்று நடைபெற்ற “கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:


தீர்மானம் – 1:


இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேசிய இனத் தாயகங்களின் முழுமையான கூட்டரசாக இந்திய ஒன்றியத்தை மாற்றியமைக்க வேண்டும்.

நாட்டுப் பாதுகாப்பு, நாணய அச்சடிப்பு, வெளியுறவு, அனைத்திந்திய தன்மை வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த அதிகாரம் மட்டுமே கூட்டாட்சி அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.

இனத்தாயகங்களுக்கு வகுக்கப்படும் அதிகாரத்தில் கூட்டாட்சி அரசு குறுக்கிடும் அதிகாரம் கூடாது. அந்தந்த அதிகார மட்டத்தில், அந்தந்த அரசமைப்பு உறுப்பும் இறைமை கொண்டதாக இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசுக்கும் இனத்தாயக அரசுக்கும் பொது அதிகாரம் எனக் கூறும் ஒத்திசைவு அதிகாரப்பட்டியல் இருக்கவே கூடாது.


தீர்மானம் – 2:


குடியுரிமை வழங்கும் அதிகாரம்

தேசிய இனத்தாயக அரசுக்கு இருக்க வேண்டும்!

தேசிய இனத்தாயக அரசுகளுக்கு, தங்கள்தங்கள் எல்லையில் குடியுரிமை (Citizenship Right) வழங்கும் அதிகாரம் இருக்க வேண்டும்.

தேசிய இனத்தாயக குடிமக்கள் என்ற வகையிலேயே, இந்தியக் கூட்டரசின் குடிமக்களாகவும் அவர்கள் ஏற்கப்பட வேண்டும்.


தீர்மானம் – 3:


இனத்தாயகங்களின் சமநிலை மன்றமாக நாடாளுமன்றம்

இனத்தாயகங்களின் சமநிலை மன்றமாக கூட்டரசு நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். அனைத்து மொழிவழித் தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட சமநிலை மன்றமாக, இந்திய நாடாளுமன்றம் அமைய வேண்டும்.

கூட்டரசு நாடாளுமன்றத்திற்கு ஒரு அவை போதும். இரு அவைகள் தேவையில்லை!


தீர்மானம் – 4:


ஆளுநர் பதவி கூடாது!

தேசிய இனத்தாயக அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு மேலதிகாரம் உள்ள ஆளுநர் என்ற பதவி கூடவே கூடாது.

கூட்டரசின் முகவராகவோ, இனத்தாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலதிகாரம் உள்ளவராகவோ ஆளுநர் என்பவர் கூடாது.

இனத்தாயகப் பேரவையில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரை அமைச்சரவை அமைக்க அழைத்தல், பதவியேற்பு செய்வித்தல் தற்காலிகப் பொறுப்பு ஆட்சி நிறுவுதல் போன்ற பணிகளைச் செய்ய இனத் தாயக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் வழங்கிடலாம்.


தீர்மானம் – 5:


ஆட்சிக் கலைப்பு அதிகாரம் கூடாது!

தேசிய இனத்தாயக அரசு, தாயகப் பேரவையில் பெரும்பான்மை ஆதரவை இழக்குமானால், வேறு பெரும்பான்மை ஆதரவுள்ள கட்சியோ, கூட்டணியோ தன்னை முன்மொழிந்து, மெய்ப்பித்துவிட்டு அம்மன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றலாம்.

எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில், தேர்தல் அறிவித்துவிட்டு நடப்பில் உள்ள அரசையே பொறுப்பு அரசாக (Caretaker government) தலைமை நீதிபதி அறிவிக்கலாம்.

அமைச்சரவையைக் கலைக்கும் அதிகாரம் யாருக்கும் இருக்கக் கூடாது. எப்படி இருப்பினும் இனத்தாயகத்தில் அமைச்சரவை இல்லாத ஒரு காலமோ, இந்தியக் கூட்டரசு இனத்தாயகத்தின் நேரடி ஆட்சி மேற்கொள்ளும் அதிகாரமோ கூடவே கூடாது.


தீர்மானம் – 6:


தேசிய இன மொழிகள் அனைத்தும் கூட்டரசின் ஆட்சி மொழிகளே!
இந்தியக் கூட்டரசுக்கு எந்த ஒரு மொழியும் ஒற்றை ஆட்சிமொழியாக அல்லது இணைப்பு மொழியாக இருக்கவே கூடாது. தேசிய இனத் தாயகங்களின் ஆட்சி மொழிகள் அனைத்தும் கூட்டரசின் ஆட்சி மொழிகளாக விளங்க வேண்டும்.

இனத்தாயக அரசுகளும், அவ்வரசின் குடிமக்களும் கூட்டரசு துறைகளோடு தங்கள்தங்கள் தாயக ஆட்சி மொழியில் தொடர்பு கொள்ளவும் விடைகள் பெறவும் உரிமை இருக்க வேண்டும்.
தேசிய இனத்தாயக அரசுகள் தங்கள் அரசின் ஆட்சிமொழியைத் தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும்.


தீர்மானம் – 7:


வரி அதிகாரம் அனைத்தும் இனத்தாயக அரசுகளுக்கே!
வரிவிதித்துத் திரட்டும் அதிகாரம் முழுவதும் தேசிய இனத்தாயக அரசுகளுக்கே இருக்க வேண்டும். கூட்டரசுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் கூடாது.

கூட்டரசுக்குத் தேவையான நிதியை தேசிய இனத்தாயக அரசுகள் வழங்க வேண்டும்.
இந்த நிதிப் பங்கீட்டு அளவை முடிவு செய்வதற்கு, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை, இனத்தாயக அரசுகளின் நிதிப்பகிர்வு மன்றம் (Finance Sharing Council) நிறுவப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் நிதிப்பகிர்வைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.


தீர்மானம் – 8:


இனத் தாயக உச்ச நீதிமன்றங்களும் கூட்டரசு நீதிமன்றங்களும் ஒவ்வொரு தேசிய இனத்தாயகத்திற்கும் அந்தந்த அரசமைப்புச் சட்டங்களின் படியான இறுதிநிலை அதிகாரம் பெற்ற உச்ச நீதிமன்றம் (Supreme Court) அமைக்கப்பட வேண்டும்.

இனத்தாயகத்திற்கும் இறுதி அதிகாரம் பெற்ற நீதிமன்றமாக அந்த உச்சநீதி மன்றமே விளங்கும். அத்தாயகத்தின் தேவைக்கேற்ப, இந்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வுகள் அல்லது கிளைகள் நிறுவிக் கொள்ளலாம்.

அரசமைப்புச் சட்டம் குறித்து விளக்கமளிக்கவும், வெவ்வேறு இனத் தாயக அரசுகளுக்கிடையிலோ, அல்லது தாயக அரசுகளுக்கும் கூட்டரசுக்கும் இடையிலோ எழும் சிக்கல்களை விசாரித்து, தீர்வு காணவும் மட்டுமே அதிகாரம் பெற்றதாக கூட்டரசு நீதிமன்றம் (Federal Court) நிறுவப்பட வேண்டும்.
இனத்தாயக அரசுகளின் குற்றவியல், உரிமையியல், மற்றும் தொழிலாளர், அரசு அலுவலர் நலச் சட்டங்கள் தொடர்பான உச்சநிலை மேல்முறையீட்டு மன்றமாக, அந்தந்தத் தாயக உச்ச நீதிமன்றங்களே திகழ வேண்டும். இவற்றில் கூட்டரசு நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டு அதிகாரம் கூடாது.


தீர்மானம் – 9:


தமிழ்நாட்டின் ஆட்சிமொழி, கல்வி மொழி, வழிபாட்டு மொழி தமிழே!

தேசிய இனத் தாயகங்களின் ஆட்சி, கல்வி, வழிபாடு, பண்பாட்டு மொழியாக அந்தந்தத் தாயகத்தின் தேசிய மொழிகளே இருக்க வேண்டும்.

தமிழே, தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகம், உச்ச நீதிமன்றம் தொட்டு அனைத்து மட்ட நீதிமன்றங்களிலும் அலுவல் மொழியாக விளங்க வேண்டும்.

தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை, அனைத்து மட்டங்களிலும், தமிழே பயிற்று மொழியாக விளங்க வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகத் தொடரலாம். வேறு எந்த மொழியையும் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு – புதுவை ஆலயங்களில் வழிபாட்டு மொழியாக தமிழே விளங்க வேண்டும்.
இனத்தாயகங்களில், அந்தந்த இனத்தின் அறம் சார்ந்த பன்முகக் கலை, பண்பாடுகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு கல்வித்துறையில் தமிழர் மரபு சார்ந்த வேளாண்மை, அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம் போன்றவற்றிற்குச் சிறப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.


தீர்மானம் – 10:


ஆற்று நீர் அதிகாரம் – ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலை அதிகாரங்கள் அனைத்தும் இனத்தாயக அரசுகளுக்கே இருக்க வேண்டும். கடல் எல்லையைப் பொறுத்த அளவில், குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் உள்ள படை பாதுகாப்பு அதிகாரம் கூட்டாட்சி அரசுக்கும், கடலோரக் காவல்படை அதிகாரம் இனத்தாயக அரசுக்கும் இருக்க வேண்டும்.

வெவ்வேறு இனத்தாயகங்களுக்கு இடையில் ஓடும் ஆற்று நீர் தொடர்பான அதிகாரம் எதுவும் கூட்டாட்சி அரசுக்கு இருக்கக் கூடாது.

இரண்டு இனத் தாயகங்களை அல்லது பல தாயகங்களைக் கடந்து ஓடும் ஆற்று நீர் பகிர்வு தொடர்பான சிக்கல்கள் நேரடி பேச்சு வார்த்தை அடிப்படையில் தீர்க்கப்பட முடியாமல் போனால், கூட்டரசு நீதிமன்றத்தை அணுகி, தீர்ப்பு பெறவேண்டும். அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவு கூட்டரசு நீதிமன்றத்தின் மேற்பார்வையிலேயே அமைய வேண்டும்.


தீர்மானம் – 11:


தொழில், வேளாண்மை, வணிகத்துறை அதிகாரங்கள் இனத்தாயக அரசுகளுக்கே வேளாண்மை, தொழில்துறை, வணிகம் சார்ந்த அனைத்து அதிகாரங்களும் இருக்க வேண்டும்.

இத்துறைகளில், வெளிநாடுகளோடு செய்து கொள்ளும் கூட்டுறவு, கூட்டு முயற்சி, வணிகங்கள் போன்றவற்றைத் தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரங்கள் அனைத்தும் இனத்தாயக அரசுகளுக்கே இருக்க வேண்டும். இவ்வாறான வெளிநாடுகளுடன் தொழில், வணிக உறவு ஏதாகிலும் நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று கருதினால், அவ்வாறான சூழ்நிலையில் மட்டும் கூட்டரசு தலையிட்டு தொடர்புடைய இனத்தாயக அரசுக்கு வழிகாட்ட வேண்டும்.


தீர்மானம் – 12:


இந்தியாவைப் பாரதம் என அழைக்கக் கூடாது! ஆரியத்துவ, பிராமணிய, மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், சமற்கிருத வேதப் பண்பாட்டை இந்தியாவின் பொதுப்பண்பாடு என்பதையும், ஆரியத்துவ அடையாளங்களை இந்திய மரபு என்று வலியுறுத்துவதையும், அதற்கேற்ப இந்தியாவைப் பாரதம் (Bharath) என அழைப்பதையும் முற்றிலும் கைவிட வேண்டும்.

பன்முக தேசிய இனப் பண்பாடுகள், மத இனக்குழுப் பண்பாடுகள் ஆகியவற்றுக்கு இடமளிக்கும் வகையில், புவியியல் அரசியல் (Geo-political) பெயரான “இந்தியா” என்ற பெயரில் மட்டுமே இந்த நாடும் இதன் கூட்டரசும் அழைக்கப்பட வேண்டும்.


தீர்மானம் – 13:


தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இனத் தாயக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்!

அனைத்திந்திய தகவல்தொடர்பு அதிகாரம் மட்டுமே கூட்டாட்சி அரசிடம் இருக்க வேண்டும். இனத் தாயக தகவல் தொடர்பு அதிகாரங்கள் அந்தந்த இனத் தாயகங்களிடம் இருக்க வேண்டும்.
அனைத்திந்திய மற்றும் பன்னாட்டுத் தகவல் தொடர்புகளை ஒழுங்கு செய்யும் அதிகாரங்கள் மட்டுமே கூட்டரசுக்கு இருக்க வேண்டும்.


தீர்மானம் – 14:


தன்னாட்சி பெற்ற தேர்தல் ஆணையம்
தேசிய இனத் தாயகங்களின் தேர்தல் நடத்தும் அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையங்களை தொடர்புடைய தாயகத்தின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அத் தாயகத்தின் தலைமை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழுவே தேர்ந்தெடுக்க வேண்டும்.
தாயகத் தேர்தல் ஆணையங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவையாக உள்ளூர் மட்டம் வரையிலும் தனக்கென்று தனியாகப் பணியாளர்களைக் கொண்ட தனித்த அமைப்பாக விளங்கவேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் அயல் பணி என்ற வகையில் அரசுப் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூட்டரசு நாடாளுமன்றத்திற்கு இதேபோல் தன்னாட்சி பெற்ற தேர்தல் ஆணையம் நிறுவப்பட வேண்டும். கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி, கூட்டரசின் முதன்மை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு தேர்தல் ஆணையர்களை அமர்த்தி ஆணையத்தை நிறுவ வேண்டும்.


தீர்மானம் – 15:


உள்ளாட்சியில் தன்னாட்சி – நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவான தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் அதன் அதிகார வரம்பில் தன்னாட்சி பெற்றதாகவும், நிதி அதிகாரம் கொண்டதாகவும் விளங்க வேண்டும். இதற்குரிய சட்ட உறுதிப்பாடு உருவாக்கப்பட வேண்டும்.


தீர்மானம் – 16:


தமிழ்நாடு அரசே! உள்ளாட்சித் தேர்தல்களை உடனே நடத்துக!

தமிழ்நாட்டில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், பதவிக்காலம் முடிந்த பின் அத்தேர்தலை நடத்த வேண்டிய தமிழ்நாடு அரசு, அத்தேர்தல்களை நடத்தாமல், ஓராண்டிற்குத் தள்ளி வைத்து, மேற்படி உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து அதன் நிர்வாகத்தைத் தானே எடுத்துக் கொண்டது சனநாயகப் பறிப்பு மற்றும் மக்கள் விரோதச் செயலாகும்.

மாநிலத் தன்னாட்சி பேசும் தி.மு.க. ஆட்சியாளர்கள், உள்ளாட்சி உரிமைகளைப் பறிப்பது என்ன நீதி? ஏன் இந்த முரண்பாடு? இது அதிகார ஆக்கிரமிப்பு இல்லையா?

அடுத்து இந்த ஊராட்சிகள் செயல்பட்ட காலத்தில் கூட மாவட்ட ஆட்சியாளர்களின் வழியாக ஆளுங்கட்சிக்கு சார்பான செயல்பாடுகள் மட்டுமே ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
எடுத்துக்காட்டாக, இந்திய அரசு ஊராட்சிகளுக்கு அனுப்பும் நிதியை மாவட்ட ஆட்சியர் மூலம் – ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஒப்புதல் கையெழுத்துகள் வாங்கி வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடும் சனநாயக விரோதச் செயல்கள் தாராளமாக நடந்தன.

ஆளுங்கட்சிப் பொறுப்பாளர்களின் தன்னல அதிகார அத்து மீறல்களுக்கு ஊராட்சி அமைப்புகள் உட்பட ஒட்டு மொத்த உள்ளாட்சி அமைப்புகளும் உட்படுத்தப்படுகின்றன. இவ்வாறான மக்கள் அதிகார மறுப்பு செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். உள்ளாட்சிகளுக்கு முழு தன்னாட்சி வழங்க வேண்டும். கொல்லைப் புற வழிகளில் ஆளுங்கட்சித் தலையீடுகள் கூடாது. ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டை விடச் சிறப்பாக – மக்கள்மயமாகக் கேரளம் தெலுங்கானா மாநிலங்களில் உள்ளாட்சி செயல்படுவதாதக் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி சனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி அவற்றைத் தொகுத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் உள்ளாட்சித் தேர்தல் நடந்து – ஒரு வேளை அதில் வெற்றி வாய்ப்புகள் குறைந்தால் – பின்னர் வரும் பொதுத் தேர்தலில் அதன் தாக்கம் இருக்கும் என்ற அச்சத்துடன், தமிழ்நாடு ஆட்சியாளர்கள் – உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து இருப்பது – மக்களுக்கான அதிகாரத்தை ஆளுங்கட்சி சர்வாதிகாரத்திற்கும் – தன்னலத்திற்கும் பயன்படுத்தியதாகும் என்று இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

உடனடியாகத் தமிழ்நாட்டில் முழுமையாக ஊராட்சி – பேரூராட்சி தேர்தல்களை நடத்துமாறு தமிழ்நாடு ஆட்சியாளர்களை இம்மாநாடு கோருகிறது.


தீர்மானம் – 17:


தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் போல் பொதுக் கொடி வேண்டும்!
கர்நாடகத்தில் கட்சி வேறுபாடின்றி – இந்தியத் தேசியக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் கன்னட அமைப்புகள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு பொதுவான மாநிலக் கொடியை ஏற்றிருக்கிறார்கள்.

முக்கியமான விழா நாட்களிலும் சாதாரண நாட்களிலும் அக்கொடியை தங்கள் வணிக நிறுவனங்கள் அலுவலகங்கள் – வீடுகள் வீதிகள் எனப் பல இடங்களிலும் ஏற்றி வருகிறார்கள்.

இப்போது கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சராக உள்ள சித்தராமையா – இதற்கு முன் முதல்வராக இருந்த போது இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரி தலைமையில் வல்லுநர் குழு அமைத்து, அரசின் திட்டமாகவே ஒரு மாநிலக் கொடியை உருவாக்கி இந்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பினார். இந்திய அரசு ஏற்கவில்லை. அதனால் மாநிலக் கொடி உரிமையை சித்தராமையா கைவிடவில்லை. நடைமுறையில் இப்போதுள்ள மாநிலக் கொடியைக் காங்கிரசார் உட்பட அனைவரும் அங்கு ஏற்றி வருகிறார்கள்.

அதேபோல் தமிழ்நாட்டிற்கும் தனிச்சிறப்பான ஒரு பொதுக் கொடியைத் தமிழ்நாடு அரசு முன் வந்து – அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாநிலக் கொடி தனியே – சட்டப்படி அரசு அலுவலகங்களில் ஏற்றப்படுகிறது. இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அதைப் பார்த்தாவது தேசிய இனங்களை மதிக்க வேண்டும்!


தீர்மானம் – 18:


காவிரி நீர்ப்பகிர்வில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் இந்திய அரசுக்குக் கண்டனம்!

பல்லாண்டுகளாகத் தொடர்நது வந்த காவிரிச் சிக்கலில் 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு இறுதித் தீர்ப்பளித்துள்ளது. அது காவிரித் தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பைவிடக் குறைவாகவே தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் ஒதுக்கியது. காவிரித் தீர்ப்பாயம் 2007 இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறக்க வேண்டும் என்றது. உச்ச நீதிமன்றமோ அதையையும் குறைத்து 2018இல் 177.25 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறக்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பளித்துள்ளது. அதையும் செயல்படுத்த மறுக்கிறது. கர்நாடகம்!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மட்டுமல்ல – உச்ச நீதிமன்றம் அமைத்த காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுக்கள் அளிக்கும் மிகக் குறைந்த அளவு நீர் ஆணைகளைக் கூட கர்நாடக அரசு செயல்படுத்துவதில்லை. அந்த சட்டமீறல் மீது – மேற்படி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு இரண்டுமே எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்திய ஆட்சியளர்களும் – கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு இழைக்கும் – அநீதியை – அதனால் தமிழ்நாட்டில் ஏற்படும் வேளாண்மைப் பேரழிவுகளை – வறுமையை தமிழ் மக்களின் தவிப்புகளை அந்தரங்கமாக இரசித்துக் கொண்டு – தலை இட மறுக்கிறது.

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்குக் கர்நாடகத்துடன் இணங்கிச் செல்ல வேண்டிய அந்தரங்கப் பொருளாதார உறவுகள் இருக்கின்றனவா என்ற ஐயப்பாடு மக்களுக்கு எழும் அளவிற்கு – அவர்கள் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள்!

தி.மு.க.விற்கு எப்போதும் கர்நாடகத்துடன் திராவிட பாசம் இருக்கும் அத்துடன் தேர்தல் கூட்டணி வேறு!

ஒட்டு மொத்தமாகக் காவிரியில் தமிழ்நாட்டு மக்கள் பழிவாங்கப்படுகிறோம். தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர் காவிரி நீர்! சென்னை திருப்பூர் உட்பட 22 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்!

மேலும் – கர்நாடகம் மேக்கேதாட்டில் – தமிழ்நாட்டின் எல்லை அருகே 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய நீர்த் தேக்கம் கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டது. இந்த சட்ட விரோத அணைத்திட்டற்கு தடைகோரி தமிழ்நாடு தொடுத்த வழக்கை பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டது உச்சநீதி மன்றம்! நமக்கேன் வம்பு என்று அது ஒதுங்கிக் கொண்டது.

காவிரிப்படுகை மாவட்ட உழவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களும் இதை தற்காப்பு உணர்ச்சியுடன் ஒருங்கிணைந்து, கட்சி வேறுபாடின்றி போராடும் போதுதான் காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்துவிடும் நெருக்கடி இந்திய ஆட்சியாளர்களுக்கும் கன்னட ஆதிக்க வெறியர்களுக்கும் ஏற்படும்.

அவ்வாறான தமிழ்நாடு தழுவிய காவிரிக் காப்புப் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் அனைத்து உழவர் அமைப்புகளும் ஒருங்கிணைக்குமாறு உரிமையுடன் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் – 19:


அனைத்துக் கோயில்களிலும் தமிழை அர்ச்சனை மொழியாக்குக! தகுதியுள்ள தமிழர் அனைவரையும் அர்ச்சராக்குக!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் அர்ச்சனை மொழியாக இல்லாமல் இருப்பது தமிழ்ச் சிவநெறி, தமிழ்த் திருமால் நெறி சித்தர் நெறி போன்ற ஆன்மிக நெறிகள் அனைத்தையும் புறக்கணிப்பதும், அவமதிப்பதும் ஆகும்!

தன்னை வழிபடும் அனைத்து மக்களின் அம்மையாய், அப்பனாய், மாமனாய், மாமியாய் உறவு கொள்பவர் சிவன் என்றார். திருநாவுக்கரசர். “அர்ச்சனைப் பாட்டும் தமிழே” என்றார் சுந்தரர்! “மொய்தார் குழல் வள்ளியை வேட்டவன் – செந்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பான் முருகன்” என்றார் அருணகிரிநாதர்.

கண்ணணைத் தொட்டு வணங்கி கவிதையாய் பொழிந்தவர் பிராமண குலத்தில் பிறக்காக ஆண்டாள்! பல வகுப்புகளில் பிறந்த ஆழ்வார்கள் திருமால் – கருவறையில் நின்று பூசை செய்தவர்கள்!

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றார் திருமூலர்!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு தீர்ப்புகளும் – சென்னை உயர் நீதிமன்ற இரு தீர்ப்புகளும் திருக்குடமுழுக்கு நிகழ்வுகளில் தமிழ்பாதி – சமற்கிருதம் பாதி என்று அரச்சகர்கள் மந்திரங்கள் ஓதவேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் திராவிட மாடல் தி.மு.க., ஆட்சி 100 க்கு 100 தமிழ் மந்திரங்களைப் புறக்கணித்து குடமுழுக்குகளை நடத்துகின்றது.

ஆட்சிக்கு வந்த புதிதில் 2021 ஆகஸ்ட் மாதம்சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கருவறைப் பூசையில் தமிழ் ஓதச் செய்து அர்ச்சனை நடத்தி – ஊடகங்களில் அதை விரிவுப்படுத்தி “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்று சாதனை விளம்பர முழக்கம் வெளியிட்டது. தி.மு.க.!

ஆனால் அக்கிரகாரங்கள் எதிர்த்தவுடன், அடங்கி, ஒடுங்கி அதன்பிறகு அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டத்தை தந்திரமாகக் கைவிட்டது தி.மு.க. ஆட்சி! திருக்கோயில் குடமுழுக்குகளில் கருவறை வேள்விச் சாலை, கோபுரக்கலசம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரம் ஓதப்படாமல் பிராமண அர்ச்சகரர்கள் தடுத்து சமற்கிருத ஸ்லோலங்கள் சொல்வதை பிசிறின்றி செயல்படுத்தி வருகிறார். இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு!

வருகின்ற சூலை மாதம் நடக்க உள்ள திருச்செந்தூர் குடமுழுக்கு – தொடங்கியாவது எல்லாக் குடமுழுக்குகளிலும் – சாதாரண கால வழிபாட்டிலும் தகுதியுள்ள அனைத்துச் சாதி அர்ச்சகர்களும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனைகள் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது!

ஆகமக் கோயில்களைக் கண்டறிந்த பின்தான் அனைத்துச் சாதியினர் அரச்சகர் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதிக் கொடுத்தீர்கள்! ஆகமக் கோயில்களைக் கண்டறிய வல்லுநர் குழு போட்டீர்கள். அதன் நிலை என்ன ஓர் அங்குலம் கூட அதன் செயல்பாடு இல்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலோடு தான் – தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான ஆரிய சூழ்ச்சி அரியணை ஏரியுள்ளது என்று இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.


தீர்மானம் – 20:


தஞ்சை தொடர் வண்டிச் சந்திப்பு முகப்பில் தஞ்சை பெரிய கோயில் கோபுரம் வேண்டும்!

தஞ்சை தொடர்வண்டி சந்திப்பு கட்டுமானங்கள் புதுவிக்கப்பட்டு அதன் முதன்மை வாயில் கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அக்கோபுரம் வடநாட்டு இந்திக் காரர்களின் கோயில்களின் கோபுரம் போல் உள்ளது

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை மேற்படி வாயிலில் வைக்க வேண்டும். அதற்கு முதல் கட்டமாக இப்போதுள்ள வடநாட்டு கோபுரம் மாடலை அப்புறப்படுத்துமாறு இம்மாநாடு தென்னக தொடர் வண்டித்துறை நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் – 21:


புதுச்சேரிக்கு முழு மாநில தகுதி வழங்குக!

இந்தியாவில் அதற்கு உட்பட்ட தமிழ்நாட்டில் பிரித்தானிய ஆட்சி நடந்த காலத்தில் இப்போதுள்ள புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி நடந்தது. 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்திய விடுதலையும் தமிழ்நாடும் வெள்ளையரிடமிருந்து விடுதலை அடைந்தது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்துதான் பிரெஞ்சு நாட்டில் இருந்து புதுச்சேரி விடுதலை அடைந்தது.

13 இலட்சம் தமிழ் மக்கள் கொண்ட புதுச்சேரியை முழுத் தனி மாநிலமாக்குவதே சனநாயகம் ஆகும். ஒன்றிய பிரதேசம் என்று இன்று வைக்கப்பட்டிருக்கும் நிலை புதுச்சேரி மக்களின் தனித் தன்னாட்சி மாநில உணர்வை புண்படுத்துவதாக உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை விட அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவராக துணைநிலை ஆளுநரே இருக்கிறார்.

புதுச்சேரிக்குப் பிறகு இந்திய ஒன்றியத்தில் இணைந்த, கோவா, மணிப்பூர் போன்ற பல பகுதிகளுக்குத் தனி மாநிலத் தகுதி வழங்கிய இந்திய அரசு, தமிழர்கள் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்காமல் இனப்பாகுபாடு காட்டிப் புறக்கணிக்கிறது.

இனியாவது, இந்த இனப்பாகுபாட்டைக் கைவிட்டு, புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளுக்கு முழு மாநிலத் தகுதி வழங்குமாறு இந்திய அரசை இம்மாநாடு கோருகிறது!


தீர்மானம் – 22:


தமிழ்ச் சான்றோர்களுக்கு புதிய மணி மண்டபங்கள் எழுப்புக!

தமிழர் மரபு வழி வேளாண்மையை மீட்பதில் மாபெரும் பாய்ச்சலை தொடங்கி வைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்கள். தமிழ்நாடு முழுவதும் பரவி ஆட்சியாளர்களும் இயற்கை வேளாண்மையை ஏற்கும் நிலையை உண்டாக்கியவர். காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன் எடுத்து, நெற்களஞ்சியத்தை காவு கொடுக்கும் நிலையில் ஆட்சியாளர்கள் இறங்கிய போது அதைத் தடுத்து நிறுத்திட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர் நம்மாழ்வார். அவர் முயற்சியின் தொடர்ச்சியாக வேளாண்மைக் காப்பாளர்களும் இயற்கை ஆர்வளர்களும் மக்களைத் திரட்டப் போராடியதால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றும் இதில் தொழிற்சாலைகள் கூடாது என்றும் அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் இயற்றினார்கள்!
அச்சாதனைக்கு முன்னோடியாக விளங்கியவர் நம்மாழ்வார்! அவரக்கு தஞ்சை மாவட்டத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் நிறுவமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற தமிழர் மறுமலரச்சியில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள். மிகமிக கண்டத்தில் வெவவேறு பெயர்களில் செயல்படும் இசைகள் அனைத்தும் தமிழிசையிலிருந்து உண்டாணவை என்பதைச் சான்றுகளுடன் மெய்ப்பித்தார். ஆபிரகாம் பண்டிதர் அவருடைய கருணாமிர்த சாகரம் என்ற இசை நூல் மிகப் பெரியகலைக் களஞ்சியம்! சித்த மருத்துவத்தில் மாபெரும் சாதனைகள் புரிந்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

அப்படிப்பட்ட இராவ்பகதூர் ஆகபிரகாம் பண்டிதர் அவர்கட்குத் தஞ்சை மாவட்டத்தில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டமும் சிறப்பு ஆய்வு மையமும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது!

காவிரிப் பூம்பட்டினத்தையும் தேனி மாவட்டத்தில் கண்ணகி கோட்டத்தை கண்டறிந்தவர் கரந்தை கல்லூரி பேராசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் உள்ளபடி காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து மதுரை, தேனி, கம்பம், கூடலூர், பளியங்குடி வழியாக கண்ணகி கோட்டத்தைக் கண்ணகி காலடி தடம் வழியாக தன் காலடி தடம் பதித்து கண்டுபிடித்தவர். அத்துடன் பல்வேறு ஊர்களில் உள்ள பழங்கோயில் கல்வெட்டுகளையும் படித்து அவ்வூர்களின் வரலாற்றை விளக்கினார்.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களுக்கு தஞ்சையில் முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவு மணிமண்டபமும் ஆய்வகமும் நிறுவுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது!


தீர்மானம் – 23:


சித்த மருத்துவத்திற்குத் தனித்தப் பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும்!

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களில், ஆயுர்வேதத்தைப் போல், சித்த மருத்துவத்திற்கும் நிதி ஒதுக்கி, சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்துப் பரப்ப, இந்திய அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தமிழர்களின் தனித்தன்மை வாய்ந்த உயர் அறிவான சித்த மருத்துவத்தை ஆயுர்வேதத்தின் பிரிவு என்று இழிவுபடுத்துவதை இந்திய அரசு கைவிட வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்,
பேச: 9443918095,
புலனம்: 9841949462

Leave a Reply