Home>>அரசியல்>>ஈரக்குலையே நடுங்குதய்யா. . .
அரசியல்கல்விகவிதை

ஈரக்குலையே நடுங்குதய்யா. . .

என்ன சொல்லியும் கேட்காம

என் மகளும்

எழவு எடுக்கும் நீட் தேர்வ

எழுதத்தான் ஆசைபட்டா . . .

கஞ்சிக்குடிக்க இல்ல . . .

கா காணி நிலமுமில்லை . . .

ஏழைக்கூலி நான்

காவிரி கைவிரிப்பால

கட்டட வேலை பாக்குறேன் . . .

வருகிற வருமானத்துல

எம்புள்ள குட்டிக

கால் வயிறு நனைக்குதுங்க . . .

எம்புள்ள தமிழ்க்கொடி

எங்க ஊரு அரசுப் பள்ளில

எல்லா பாடத்துலயும் முத மார்க்

வாங்குனதுங்க. . .

பாவி மகள

பத்தாம் வகுப்போட

நிறுத்தத் தான் சொன்னேங்க . . .

சிறுவாடு காசு வச்சுருக்கேன்

நோட்டு புக் வாங்கிகுறேன்னு

தானாப் பள்ளியில சேர்ந்ததுங்க . . .

சுகமில்லா அம்மாவ கவனிச்சுட்டு . . .

வீட்டு வேலையெல்லாம் முடிச்சு வச்சு . . .

மணி அடிக்கும் நேரத்துல ஓடுமுங்க . . .

விடியும் வரை புத்தகமும் கையுமா படிக்குமுங்க. . .

எம்புள்ள நல்லா படிக்குதுன்னு

எல்லா டீச்சரும் புகழுவாங்க . . .

எங்கம்மா மாறி சுகமில்லா

எல்லார் அம்மாவையும் காப்பாத்துவேன்

மருத்துவராகப் போறேன்னு . . .

எல்லா பிள்ளைகளிடமும் சொல்லி 

மகிழுதுங்க . . .

என்ன சொல்லியும் கேட்காம

என் மகளும் நீட் தேர்வ

எழுதத்தான் ஆசப்பட்டா . . .

வருகி வருமானம் வயித்துக்கே பத்தலையேன்னு

வருத்தமுற்று நிக்கையில . . .

இரண்டாயிர மைலுக்கப்பால

இராசஸ்தான்ல போட்டுருகாங்கன்னு

சொன்னதுங்க . . .

எழவெடுத்த நீட் தேர்வ

எழுதித்தான் ஆகனுமான்னு கேட்டதுக்கு . . .

மூஞ்சத்தூக்கி வச்சுகிட்டு

தேம்பி தேம்பி அழுதுங்க . . .

இரயில்ல போன எத்தனை நாள் ஆகும்னு

எனக்கொன்னும் தெரியல . . .

பணத்துக்கு எங்கேப் போவதுன்னு

எனக் கொன்னும் புரியல . . .

என்னச் சொல்லியும்

கேட்காம என் மகளும்

மருத்துவராக ஆசைபட்டா

பாவி மக எனக்குப் புள்ளையா

பொறந்துத் தொலைச்சுட்டா .. .

அரியலூர் அனிதா புள்ள

கதையாயிடுமோன்னு . . .

என் ஈரக்குலையே நடுங்குதய்யா . . .

முனைவர் சிவகுமார், மன்னார்குடி.

(2050 தை மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply