Home>>செய்திகள்>>கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் காலமானார்.
செய்திகள்தமிழ்நாடு

கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் காலமானார்.

கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் இன்று (டிசம்பர் 11) காலமானார்.

வலது கை கொடுப்பது இடது கைக்குதெரியக்கூடாது என்பது போல மக்களுக்கு பல நன்மைகளை செய்து எந்த விளம்பரமும் இன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறார் கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம். இவரது மறைவுக்கு கோவை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே நேரத்தில் அவரது கொடைத்தன்மை பற்றியும் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் சத்தமில்லாமல் செய்த சாதனை, கொடைத்தன்மை பற்றி கோவைவாசிகள் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். 100 ரூபாய் தானம் கொடுத்தாலே தன்னை விளம்பரம் செய்பவர்கள் மத்தியில் பல கோடி ரூபாயை மக்களுக்கு செலவு செய்து விட்டு சத்தமில்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சுப்ரமணியம்.

கோவையில் செயல்பட்டு வரும் சாந்தி கியர்ஸ், கோவையின் அடையாளங்களில் ஒன்று. இந்நிறுவனத்தை 1972ஆம் ஆண்டு தொடங்கியவர் சுப்பிரமணியம். வாகனங்களுக்கான கியர் உள்ளிட்ட இயந்திர உதிரி பாகங்களை பல்வேறு நாடுகளுக்குத் தயாரித்துக் கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார். ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து, இஸ்ரோவிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்.கோவையில் உள்ளவர்கள், கோவைக்கு வந்து சென்றவர்கள் என பலரும் கேள்விப்பட்ட பெயர் என்றால் அது கோவை சாந்தி கியர்ஸ் தான் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான இது,உலகளவில் பிரபலமாக நிறுவனமும் கூட.

சுப்ரமணியம் குடும்பத்தில் மனைவி, மற்றும் மகள் மரணம் என அடுத்தடுத்து துயரங்கள் நடந்தது. இதனால் தனிமரமாகி மனஉளைச்சலில் இருந்த சுப்ரமணியம், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் பங்குகளை விற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையில் 1996ஆம் ஆண்டு, தனது மனைவியின் பெயரில், சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கி அதன் அறங்காவலராக இருந்து வந்தார். இந்த அமைப்பின் மூலம் லாப நோக்கமின்றி,சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை,மருந்தகம் போன்றவற்றைக் கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் சாந்தி சோசியல் சர்வீஸ் வளாகத்தில் தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.குறைந்த விலையில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. ரூ.15க்கு டிபன் வகைகள், ரூ.20க்கு தரமான முழு சாப்பாடு, டீ, பில்டர் காபி, ராகி பால், சத்து மாவு பால் என அனைத்தும் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் வந்து செல்வர். சிங்காநல்லூரில் உள்ள சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் திருப்பதி போல் காணப்படும்.

தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூ.20க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் ஆகாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது. ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது. உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு. இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம்.

சாந்தி கியர்ஸ் கேண்டீனில் பல்வேறு வகையான சிற்றுண்டிகளும் விற்கப்படுகின்றன. மைதாமாவில் எந்தவிதமான பதார்த்தங்களும் செய்வதில்லை. காலை 4.30 மணி முதல் 200க்கும் மேற்பட்டோர் நடைபெயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிறகு 6 மணி முதல் கம்பங்கூல், சூப் அருகம்புல், கீரை, மனத்தக்காளி மற்றும் மற்றும் ஜூஸ் வகைகள் மாதுளை, முருங்கை, கேரட் ஜூஸ் அனைத்தும் 5 ரூபாய்க்கு ஒரு டம்ளர் என்று விற்பனை செய்கிறார்கள். களி, சுண்டல், முளைகட்டிய பயிர்களும் விற்கிறார்கள். அனைத்தும் சுத்தமாகவும், அளவில் அதிகமாகவும், விலை குறைவாகவும் கொடுக்கிறார்கள். முக்கியமாக ஒரே நேரத்தில் குறைந்தது 200 குழந்தைகள் விளையாடும் அளவிற்கு விளையாட்டுக் கருவிகளும், பெரிய விளையாட்டுத்திடலும் உள்ளது. மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 5 மழலையர் பள்ளிகள் இலவசமாக நடத்திக்கொண்டிருக்கிறார். இங்கு பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் காலையில் சிறப்பான சிற்றுண்டியும், இடைவேளையில் பாலும்-சுண்டலும், மதியம் மிக உயர்தரமான மதிய உணவும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இங்கிருக்கும் பார்மசியில் குறைந்தது நூறு பேராவது வேலை செய்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய பார்மசி என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மருந்துகளுக்கு 20 முதல் 25 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடியும் கொடுக்கிறார்கள். மருந்து வாங்க வருபவர்கள் டோக்கனை பெற்றுக்கொண்டு வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தால், டோக்கன் நம்பர் எதிர்புறம் இருக்கும் டிவி ஸ்கிரீனில் ஸ்கோரலாக ஓடுகிறது. மருந்தினைப் பெற்றுக்கொள்ள 10 கவுன்டர்கள் உள்ளன. முதியோர்களுக்கு சிறப்பு தனி கவுன்டரும் உள்ளன. கோவையில் எரிவாயு மூலம் எறியூட்டும் மையத்தை முதன்முதலில் ஏற்படுத்தியுள்ளார். எரியூட்டும் மையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரீசர் பாக்ஸ், அமரர் ஊர்தியும் இலவசமே. எரியூட்டும் மையத்திற்கான கட்டணம் ரூ.1000 மட்டுமே.

அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் ரூ.30, மருந்தகங்களில் 20% தள்ளுபடி, குறைந்த பணத்தில் பரிசோதனை என பல்வேறு சலுகைகள் உள்ளதன் காரணமாக எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படும். டயாலிஸிஸ் 400 ரூபாய்க்கு செய்து வந்துள்ளார். இந்த மருத்துவமனையில் அனைவருக்கும் சமமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. விஐபி என்றால் கூட வரிசையில் நின்றுதான் சிகிச்சை பெற முடியும். இங்குள்ள பணியாளர்களும், தங்களிடம் வரும் மக்களிடமும் பணிவான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார்கள் என்று கோவை வட்டார மக்கள் கூறுகின்றனர். அதுபோன்று எந்த நன்கொடையும் வாங்காமல் சேவையாற்றி வந்துள்ளார் சுப்பிரமணியம்.

சுப்பிரமணியம் நடத்தி வந்த சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் நிறுவனத்தில் ஸ்டாக் வரும் போது என்ன விலையோ அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்வதால் அங்கும் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவது வழக்கம். இதன் எதிர்புறம் சாந்தி சோசியல் சர்வீஸ் இலவச மின் மயானமும் செயல்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, ரேடியாலஜி சென்டர் , ஏழை மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறது சுப்பிரமணியத்தின் சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளை.

சுப்பிரமணியத்தின் சாந்தி கியர்ஸ் நிறுவனம், முருகப்பா குழுமத்துக்குச் விற்கப்பட்டது. அப்போதும் தனது ஊழியர்களுக்கு, நிறுவனம் விற்கப்படுவதற்கு முன்னர் என்ன சலுகை வழங்கப்பட்டதோ, அந்த சலுகை தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்தன. ஆனால், அவர் எந்த ஊடகத்தையும் சந்திக்கவுமில்லை. பேட்டி கொடுக்கவுமில்லை. எங்குமே அவர்கள் புகைப்படம் இருக்காது. இன்டர்நெட்டில் தேடினால் கூட அவரது புகைப்படம் கிடைக்காது. ஒரு அரசு தன் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் சுத்தமாக செய்து வந்த சுப்பிரமணியன் அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை.

இவ்வளவு சேவை செய்து வந்த இவர், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என ஊடகங்களில் முகத்தைக் காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் 78 வயதில் சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க. இவர்களது அனைத்து சேவைகளை பற்றியும் அறிந்து கொள்ள http://shanthisocialservices.org பார்வையிடுங்கள்.

தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என ஊடகங்களில் கடைசி வரை முகத்தைக் காட்டுவதில்லை என உறுதியாக இருந்த அவரது மறைவு கோவை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பூத உடல் சாந்தி சமூக சேவை நிறுவன வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சுப்பிரமணியம் தனது சேவையின் மூலம் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார் என கண்ணீருடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.கலியுக கர்ணனாக வாழ்ந்து மறைந்த கொடைவள்ளலின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்

Leave a Reply