Home>>இலக்கியம்>>படைவீடு நூல் வாசிப்பு அனுபவம்
படை வீடு - நூல் வாசிப்பு அனுபவம்
இலக்கியம்தமிழ்நாடுநூல்கள்

படைவீடு நூல் வாசிப்பு அனுபவம்

நூல்: படைவீடு,
ஆசிரியர்: தமிழ்மகன்.
காலம்: 14ம் நூற்றாண்டு,
பகுதி: தொண்டை மண்டலம் என அழைக்கப்படும் வடதமிழகம் முழுவதும்.

வாசிப்பு அனுபவம்:

13ம் நூற்றாண்டின் இறுதியில் சோழ, பாண்டிய பேரரசுகளின் ஆட்சிகள் முடிவுக்கு வருகிறது. அதன் பின் 14ம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் என்ன நடந்தது? யார் ஆட்சி செய்தது? பாண்டிய சகோதரச் சண்டை என்ன ஆனது? என்ற கேள்விகள் நமக்கிருக்கும்.

சோழர் ஆட்சி சுருங்கியபிறகு அவர்களின் படையணியில் முக்கிய தளபதியாக இருந்த ராச கம்பீர சம்புவராயரால் தொண்டை மண்டல பகுதியில் படைவீடு அரசு நிறுவப்படுகிறது. அதன் பின் அவர் மகன் வீர சம்புவர் ஆட்சியை தொடர்கிறார். அதன் பின் அவரது மகன் வென்று மண்கொண்டார் என்கின்ற ஏகாம்பரநாதர் (புதினத்தின் நாயகன்), மன்னராகிறார். மண்கொண்டாருக்கு இரண்டு மகன்கள் மல்லிநாதர் ராசநாராயண சாம்புவராயர், பொன்னன் ராசநாராயண சாம்புவராயர் என, அதில் மூத்தவனான மல்லிநாதரிடம் ஆட்சியை கொடுக்கிறார் மண்கொண்டார். மல்லிநாதரோடு சம்புவராயர் நிறுவிய ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழக வரலாற்றில் காணாமல் போன 14ம் நூற்றாண்டை, மீட்டு அங்கு நடந்த ஆட்சியையும் போர்களையும் ஆதாரங்களோடு இப்புதினம் நமக்கு கூறுகிது.

மதுரையில் சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே வாரிசுரிமைச் சண்டை நடக்கிறது. இதை சாதகமாக பயண்படுத்திக்கொண்டு தெற்க்கு நோக்கி படையெடுத்து வந்த டில்லி சுல்த்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் உள்ளே நுழைய பார்க்கிறான். அதில் அவனுக்கு இங்கு இன்னொரு சிக்கல் மதுரையை அடைய வேண்டுமென்றால்? அவன் முதலில் ‘படைவீடு’ சம்புவராயர்களைத்தான் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களை வெல்வது அவளவு எளிதல்ல என்பதால், மாலிக்காபூர் போசளத்தை ஆண்டுவந்த குறுநில மன்னனான வீர வல்லாளனை தோர்கடித்து சிறைபிடிக்கிறான். பின் வல்லாளனை சித்தரவதை செய்து அவன் துணையோடு சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் நுழைந்து கரூர் திண்டுக்கல் வழியாக மதுரையை அடைகிறான் மாலிக்.

மதுரை மாலிக்கபூரின் வசமாகிறது. சுல்தான் படை தெற்க்கு நோக்கி வந்ததே கொள்ளையடிக்க தான், அதை மதுரையில் தொடங்குகிறது. கோவில்கள், அங்காடிகள் கருவூலங்கள், என அனைத்தும் சூரையாடப்படுகிறது. கோவில்களில் இருந்த செல்வங்களை கண்டு அதிர்ந்து ஆச்சரியப்பட்ட மாலிக் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான்.

இதை அறிந்த சம்புவராயர் அப்படி அவன் வந்தால் நாம் அவனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் சம்புவராயர் ஆட்சிக்கு உட்பட்டு நட்போடு இணைந்து இருக்கும் சிற்றரசுகள் அனைவரையும் சந்தித்து பேசி படைதிரட்டவும் படைவீட்டில் நடக்கும் ஆடித்திருவிழாவிற்க்கு அழைக்கவும் இளவரசர் வென்று மண்கொண்டாரை அனுப்பி வைக்கிறார்.

திருவண்ணாமலை, ஆதிதிருவரங்கம், ஆறகழூர், பெரும்புலியூர், கொள்ளிடம், திருவானைக்கா, திருமழப்பாடி, திருமானூர், பழுவூர், அரியலூர், மீன்சுருட்டி, காட்டுமண்ணார்கோவில், கங்கைகொண்ட சோழபுரம், என வரிசையாக அரசுகளை சந்தித்து விட்டு தீவுக்கோட்டையில் சிற்றரசாக இருக்கும் சோழரை சந்தித்து போர் சூழலை பேசுகிறார் இளவரசர். சோழ இளவரசி பூங்குழலியை (கதையின் நாயகி) சந்திக்கிறார். குடும்பத்தோடு ஆடித் திருநாளுக்கு படைவீடு வந்துவிடுங்கள் எனக் கூறிவிட்டு, புறப்பட்டு வரும் வழியில் கோவிலை கொள்ளையடித்து சென்ற சுல்தான் படையின் ஒரு குழுவை தந்திரமாக வீழ்த்தி செல்வங்களை மீட்டு கோவில்களை எல்லாம் எப்படி பாதுகாக்க வேண்டும், நகைகள், சிலைகள், செல்வங்களை எல்லாம் எப்படி பாதுகாப்பது எங்கே பதுக்கி வைப்பது என அறிவுறுத்திவிட்டு, பிச்சாவரம், தில்லை, பாதிரிப்புலியூர், மாமல்லபுரம், நீலாங்கரை, மயிலை, திருவெற்றியூர், பழவேற்காடு, திருக்காளத்தி என கடந்து திருவல்லம் வந்து வல்லவராயரை சந்தித்து பேசிவிட்டு பாலாற்றங்கரையில் பிரம்மதேசம் எனப்படும் இடத்தில் இராசேந்திர சோழர் நினைவிடத்தில் வனங்விட்டு படைவீடு திரும்புகிறார் இளவரசர் மண்கொண்டார்.

இதற்கிடையில் அலாவுதீன் கில்ஜியிடமிருந்து மாலிக் கபூருக்கு உடனே டில்லி வரவும் என செய்தி வருகிறது. கொள்ளையடித்த செல்வங்களை எடுத்துக்கொண்டு மதுரையில் ஒரு குழுவை ஆட்சி பொருப்பில் வைத்து விட்டு டில்லி திரும்புகிறான் மாலிக்.

தற்போதைக்கு சுல்தான் படை நம்மீது படை எடுக்கமாட்டான் என்பதால் நாம் மதுரையை நோக்கி போகலாமா என ஆடித்திருநாளுக்கு வந்த நட்பு அரசுகள் ஆலோசனை கூடத்தில் பேசுகிறார்கள். அது தேவையற்றது நம் மீது அவர்கள் படை எடுத்தால் நாம் அவர்களை எதிர்ப்போம், மாலிக் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் அது ருசிகண்ட பூனை. அதுவரை நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஆயத்த செயல்களை செய்வோம், மதுரையில் இருந்து தப்பித்து வந்து புகலிடம் கோறும் மக்களுக்கு தேவையானதை செய்வோம் பாதுகாப்பு கொடுப்போம் என கூறுகிரார் வீர சம்புவராயர், ஆம் அதுதான் சரி என்று அனைவரும் ஏற்கிறார்கள்.

தற்போது போர் இல்லை என்பதால் சோழ இளவரசி பூங்குழலிக்கும் சம்புவராய இளவரசர் ஏகம்பரநாதருக்கும் திருமணம் நடக்கிறது. வீரசம்புவராயர் மகனிடம் படைவீடு ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கிறார். அதன் பின் 20 ஆண்டுகாலம் மண்கொண்டார் ஆட்சி சிறப்பாக நடக்கிறது சனாதன சாதி சிக்கல் இடக்கை வலக்கையினர் பிரச்சனை என அனைத்தையும் சீர்செய்து சிறப்பான ஆட்சி, இதற்கிடையே தெலுங்கு தேசத்தில் இருந்து வரும் கங்க மன்னன் காஞ்சியை கைப்பற்றுகிறான், அவனை தோற்கடித்து காஞ்சியை மீட்கிறார். அந்த வெற்றிக்கு சூட்டப்பட்ட பெயர்தான் வென்று மண்கொண்டார்.

விஜயநகர அரசன் படையெடுத்து வருகிறான், இளவரசர் மல்லிநாதன் தலமையில் அவனை எதிர் கொள்கிறது சம்புராயர் படை, அதில் தோற்று விஜயநகர படை திரும்பி ஓடுகிறது. அதன் பின் மல்லிநாதரிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து விட்டு கோவில்களுக்கு செல்லவும் படைவீடு மலையுச்சியில் ஒரு அரண்மனை எழுப்புவதுமாக இருந்துவிடுகிறார் மண்கொண்டார்.

சில வருடங்கள் பிறகு மீண்டும் விஜயநகர இளவரசன் கர்ணக் கும்பன் தலைமையில் படைவீடு நோக்கி படை எடுத்து வருகிறது விஜயநகர அரசு. பாலாற்றை கடந்து விரிஞ்சபுரம் செல்வது அவர்களுக்கு சாத்தியமாக இல்லை இழப்புகள் அதிகமாகிக்கொண்டே போகிறது. உடனே பின்வாங்கி காஞ்சியை நோக்கி நகர்ந்து காஞ்சியை கைப்பற்றுகிறான் கர்ணக் கும்பன்.

சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் படையை சீரமைத்துக்கொண்டு வேறு வழியாக படைவீடு நோக்கி படையெடுக்கிறான் கர்ணக் கும்பன். சம்புவர்களின் கடைசி போர் எப்படி நடந்தது, யாரெல்லாம் தூரகம் செய்தார்கள், மக்களை எப்படி பாதுகாத்தனர், மலையுச்சியில் நடந்த தற்கொலை தாக்குதல், என மிக சுவாரசியமாகவும் காட்சிகளாக கட்டமைத்து சிலிர்பூட்டும் விதமாக படைத்துள்ளார் ஆசிரியர்.
100 ஆண்டுகள் ஆண்ட சம்புவராய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகே 15ம் நூற்றாண்டில் விசயநகர அரசின் அதிகாரம் தமிழ்மண்ணில் தொடங்குகிறது என்பதும், இந்த 100 ஆண்டுகள் தமிழ்நிலத்தில் டில்லி சுல்தான்களையும், விசயநகர அரசயும் எதிர்த்தும் சனாதன வர்ணாசிரம தர்மத்தை ஒதிக்கியும், வலக்கை இடக்கையரின் பிர்ச்சனைகளை சரிசெய்து சாதி சமத்துவத்தை நிறுவி நல்லாட்சி தந்த ஒரே வலிமைமிக்க அரசு சம்புவர் அரசு என்பதும் உறுதியாகிறது. 15ம் நூற்றாண்டுக்கு பிறகே இந்த வர்ணாசிரம தர்மம் மேலேங்கியுள்ளது, தமிழர்கோவில்களின் தமிழ்பெயர்கள் எவ்வாறு ஆரிய சமஸ்கிருத முறையில் மாற்றப்பட்டது அது எப்படி நிகழ்ந்தது, சுயசாதி பெருமைகளை கூறும் புராணங்கள் எப்படித்தோன்றின என்ற பல கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இந்த நூலில் ஆதாரங்களோடு நிறுபிக்கிறது.

ஆகசிறந்த நூல் அவசியம் ஒவ்வொறு தமிழனும் வாசிக்க வேண்டிய புதினம். கண்டிப்பாக வாசித்துப்பாருங்கள் நன்றி.

பேரன்புடன் மனோ குணசேகரன்,
புள்ளவராயன் குடிக்காடு.
18/07/2021

Leave a Reply