Home>>அரசியல்>>காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்!
அரசியல்இந்தியாகட்டுரைகள்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்!

பேராசிரியர் த.செயராமன்காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்! என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அறிக்கைவிடுத்துள்ளது. அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.


ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் அக்டோபர் 4ஆம் தேதி 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள முடிவுகள் மீதான கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் fca.amendment@gov.in என்கிற அஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடு என்கிற வரையறைக்குள் வருகின்ற பகுதிகளில், காடு சாராத திட்டங்கள் அதாவது நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தேவையில்லாமல் காடழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் வனப் பாதுகாப்புச் சட்டம்.

இச்சட்டத்தில் ஒன்றிய அரசு சில திருத்தங்களை மேற்கொள்ள முயன்று வருகிறது. சட்டத் திருத்த மசோதாவை தயாரிப்பதற்கு முன்னர், ஒன்றிய அரசு இச்சட்டத்தில் மேற்கொள்ள நினைக்கும் 14 திருத்தங்கள் மற்றும் சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு அதன்மீது கருத்துகளைக் கோரியுள்ளது.

காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த திருத்த ஆவணத்தில் உள்ளன. ஆனால், அனைத்து தரப்பு மக்களும் சட்டமியற்றுதலில் பங்கெடுக்கும் அடிப்படை சனநாயகக் கூறுகூட இந்த கருத்துக் கேட்பு அறிவிப்பில் இல்லை.

வனப் பாதுகாப்புச் சட்டம் 1980ல் திருத்தம் கொண்டு வருவது காட்டிற்குள் மற்றும் காட்டுப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவு மக்களை பெரிதும் பாதிக்கக்கூடியது.

அப்படிப்பட்ட முக்கிய சட்டத் திருத்தம் கொண்டு வருகையில் அத்திருத்தங்களை அனைத்து மொழி பேசும் மக்களும் அவர்களது மொழியிலேயே அறிந்து கொள்வதற்கு உரிமை கொண்டவர்களாவர். ஆனால், இந்த சட்டத்திருத்தம் குறித்த ஆவணத்தை ஆங்கில மொழியில் மட்டுமே ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். கடந்த காலத்தில், வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 ஆங்கிலம் மற்றும் கிந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதை கண்டனம் செய்து, பல மாநில உயர் நீதிமன்றங்களில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது 22 மொழிகளிலும் DRAFTEIA2020 வெளியிடப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதே நடைமுறை வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த ஆவணத்திற்கும் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சட்டத் திருத்தம் மீதான கருத்து தெரிவிக்க 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பொது விடுமுறை நாளான அக்டோபர் 2 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். இந்தியா முழுவதுமுள்ள காடு மற்றும் காடு சார்ந்து வாழும் மக்களோடு தொடர்புடைய, ஒரு சட்டத் திருத்தம் குறித்த ஆவணத்தின் மீது கருத்து தெரிவிக்க 3 மாதங்களாவது தேவை. எனவே இந்த ஆவணத்தை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அதன் பின்னர், மக்கள் கருத்து தெரிவிக்க போதுமான, குறைந்த அளவு 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.

இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள திருத்தங்கள்:

தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு (Strategic and security projects of national importance) வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிப்பது.

ஒன்றிய அரசானது வணிக லாபத்திற்காக சாகர்மாலா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைமுகங்கள் அமைப்பது;
பாரத்மாலா பரியோசனா திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகள் அமைப்பது

– உள்ளிட்ட திட்டங்களைக் கூட Strategic and security projects of national importance என்கிற வரையறைக்குள் கொண்டு வருகிறது.

– தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துத்தான் மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும் கூட ஒன்றிய அரசால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

இப்படியான அதிக அபாயகர திட்டங்களை தேச முக்கியத்துவம் என்கிற பெயரில் செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட இருக்கின்றன.

இந்தியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளைத் தவிர, தனியாருக்குச் சொந்தமான காடுகளும் உள்ளன. தமிழ் நாட்டில் இதுபோன்ற காடுகள் Tamil Nadu Preservation of Private Forest Act 1949 என்பதன் கீழ் மேலாண்மை செய்யப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் காடுகள் பாதுகாப்பு சாராத திட்டங்களை செயல்படுத்த முடியாது.

ஆனால், இப்போது இந்த வனப்பகுதிகளில் பயிர் செய்வதற்கும், வேறு பல கட்டுமானங்கள் மேற்கொள்ளவும், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக இந்த திருத்தச் சட்ட ஆவணம் வாயிலாக தெரிய வருகிறது.

தமிழ் நாட்டில் உள்ள காப்புக் காடுகள் மற்றும் புலிகள், யானைகள் போன்ற சரணாலயங்களில் பல கெக்டேர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான காடுகள் உள்ளன. இவற்றை வனப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கும் நோக்கம் இருக்கிறது. அவ்வாறு செய்யப்பட்டால், வணிக நோக்கில் அந்த இடங்களில் பணப்பயிர்கள் விதைக்கப்பட்டு மரங்கள் வெட்டப்படும். இதனால், பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்படும். மழைக்காலங்களில் இந்த மண் அரிப்பினால் காடுகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும்.

வனப் பாதுகாப்புச் சட்டம் -1980 அமலுக்கு வருவதற்கு முன்பாக நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே போன்ற அரசுத் துறைகளால் கையகப்படுத்தப்பட்ட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இச்சட்டத்தின் விதிகளிலிருந்து விலக்களிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையால் புதிய சாலைகளும், ரயில்வே பாதைகளும் காப்புக் காடுகளில் அமைக்கப்படும் போது, பெரிய அளவிலான காடுகள் சிறு சிறு துண்டுகளாக மாறிவிடும். காட்டுயிர்கள் வாழ்விடங்கள் சுருக்கப்படும். மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும்.

Extended Reach Drilling எனும் தொழில்நுட்பத்திற்கான அனுமதி குறித்து இந்த ஆவணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை, காடு என்பதற்கான சட்ட வரையறைக்குள் வராத ஒரு இடத்திலிருந்து துளையிட்டுச் சென்று அவ்வளங்களை எடுப்பதுதான் இந்த தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தால் காட்டின் இயற்கையான இயங்கியல் தன்மை அழிக்கப்படும்.

Extended Reach Drilling என்கிற தொழில்நுட்பத்தை நாம் நிராகரிக்க வேண்டும். காடு என்பது சில மரங்களும், அது ஊன்றியிருக்கும் மண்பரப்பும், அதற்கடியிலிருக்கும் வேரும் மட்டும் அல்ல. பல ஆண்டு காலமாக நிலத்திற்கடியில் பல அடி ஆழத்தில் உள்ள வளங்களை உறிஞ்சி எடுக்க முற்பட்டால் அக்காடு அழிந்தே போகும்.
தனியார் காடுகளாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 250 சதுர மீட்டர் அளவில் கட்டிடங்களை எழுப்பிக்கொள்ள நில உரிமையாளர்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் அனுமதி வழங்குவது குறித்து இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் நோக்கம் காட்டை அழித்து தோட்டப்பயிர்கள் விளைவிப்பதை ஊக்குவிப்பதாகும்.

அடுத்ததாக, வன உயிரியல் பூங்காக்கள், வன உலாக்கள் போன்றவற்றை காடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களாகக் கருத ஒன்றிய அரசு முடிவு செய்கிறது. இதுவும் தனியார் நிறுவனங்களின் வணிக, இலாப வேட்டைக்காக காடுகளை இரையாக்கும் நடவடிக்கைதான்.

அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் இந்தியாவில் 2019 முதல் சில தனியார் வன உயிரியல் பூங்காக்களை அமைக்கத் தொடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது நாட்டிலுள்ள 160 வன உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் சேர்ந்து ஒப்பந்தமிட முடிவு செய்தது. இப்போது திட்டமிடப்படும் உயிரியல் பூங்காக்கள், உலாக்கள் அனைத்தும் பெரு முதலாளிய நலன்களுக்காக செய்யப்படுபவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை, 2021 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளை கால நிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய அத்தனை மாற்றங்களையும் செய்வதற்கான பத்தாண்டாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டு வருவதை என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் இந்திய ஒன்றிய அரசு காடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்திய அரசே, வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020 என்ற காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறு!


கட்டுரை:
பேராசிரியர் ஜெயராமன்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு,
தமிழ்நாடு
13.10.2021.


பட உதவி:
இணையம்.

Leave a Reply