Home>>அரசியல்>>மக்கள் தொண்டர் நன்மாறன் காலமானார்.
மதுரை சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன்
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

மக்கள் தொண்டர் நன்மாறன் காலமானார்.

மதுரை கிழக்கு தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினர்! ஆனால் கடைசி வரை வாடகை வீடு! காலமானார் மக்கள் தொண்டர் நன்மாறன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகத்தான மக்கள் தொண்டர் நன்மாறன் (வயது 72) உடல்நலக் குறைவால் மதுரையில் நேற்று (28/10/2021) காலமானார்.

2001, 2006 சட்டசபை தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் சி.பி.எம். வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் நன்மாறன். மிக எளிமையான மனிதராக வாழ்ந்தவர். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெருமதிப்பையும் பெற்றவர்.

மகத்தான மக்கள் தொண்டர், மக்களுக்காக 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருந்த மகத்தான மக்கள் தொண்டராக திகழ்ந்தார். மதுரையில் ஐடி பார்க், சென்னை உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்டவை உருவாக பெரும் பாடுபட்டவர். கடந்த ஆண்டு பேருந்து ஏற முயற்சித்த போது நன்மாறன் ஒரு செருப்பை தவறவிட்டார். அதை எடுக்க நன்மாறன் ஓடினார். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றது. இதை பார்த்த தானி ஓட்டுநர் பாண்டியன், இது நன்மாறன் ஐயாவாச்சே.. என பதறியபடி அவரை தமது தானியில் ஏற்றிக் கொண்டார்.

அப்போதும் கூட என்னிடம் ரூ.20/- தானே இருக்கிறது என பதறியிருக்கிறார் நன்மாறன். அதை பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னபடியே நன்மாறன் செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு போய்விட்டார் தானி ஓட்டுநர் பாண்டி அவர்கள். அந்த அளவுக்கு எளிமையானவராக இருந்தார் நன்மாறன்.

தோழர் நன்மாறன் விட்டு சென்ற பணியினை அடுத்த தலைமுறை கம்யூனிஸ்டுகள் தொடர வேண்டும்.


தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.
29/10/2021

Leave a Reply