Home>>அரசியல்>>அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? RSSன் கட்டுப்பாட்டில் உள்ளதா?
செந்தமிழன் சீமான்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? RSSன் கட்டுப்பாட்டில் உள்ளதா?

உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பாசகவினர் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது.

அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டப் பொதுத்தளங்களாக விளங்கும் கோயில்களை மதவெறி அரசியலுக்கும், கட்சியின் வேர்பரப்பலுக்கும், தன்னலச்செயல்பாடுகளுக்கும் பாசகவினர் பயன்படுத்த முனைவது வன்மையானக் கண்டனத்திற்குறியது.

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம்சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? அத்துமீறிக் கோயிலுக்குள் உள்நுழைந்து பாசகவினர் திரையிட்டபோதும் அதனைத் தடுக்காது காவல்துறை என்ன செய்ததென்று புரியவில்லை. இத்தகையச் செயல்களில் ஈடுபட்ட பாசகவினர் மீது இதுவரை எவ்வித வழக்கும் தொடுக்காது திமுக அரசு அமைதிகாப்பது வெட்கக்கேடானது.

கோயில்களும், வழிபாட்டுத்தலங்களும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதப்பரப்புரைக் கூடங்களாக மாறுமென்றால், அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? RSSன் கட்டுப்பாட்டில் உள்ளதா? எனும் கேள்விக்கு என்னப் பதிலுண்டு! பாசகவை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறி, மக்கள் மன்றத்தில் பரப்புரைசெய்து வாக்குவேட்டையாடிய திமுக, தற்போது அதிகாரமிருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம் செய்வது ஆரிய அடிவருடித்தனமாகும்.

ஆகவே, இனிமேலாவது பாஜகவின் மதவாத செயல்பாடுகளுக்குத் துணைபோகாது, கோயில்களில் மத நிகழ்வுகளை ஒளிபரப்பிய பாசகவினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.


செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply