Home>>அரசியல்>>தேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்!
செந்தமிழன் சீமான்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்!

டிசம்பர் 10, மனித உரிமைகள் நாளையொட்டி பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற மக்கள் உரிமை ஒன்றுகூடல் – 2021 நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய கருத்துரையின் சுருக்கம் பின்வருமாறு…

மனித உரிமைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் நாள் இன்று.

சுதந்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவனுக்கு கூட சுதந்திரம் தேவைப்படுகிறது. பறவைக்கு இறக்கை போல, வண்டிக்கு அச்சாணிபோல, மனித உடலுக்கு முதுகெலும்புபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் தேவையென்று கியூப விடுதலைக்குப் போராடிய ஹொசே மார்ட்டின் அறிவுறுத்துகிறார். பல்வேறு தேசிய இனங்களான நாம் நம்முடைய மேலதிக உரிமைக்காகப் ஒன்றிணைந்து இங்கே கூடியிருக்கிறோம்.

அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு இனத்தின் மகன் நான். ஈழத்தில் 2008 – 2009 இரண்டு ஆண்டுக் காலத்தில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் எம்மினச் சொந்தங்கள் கொன்றழிக்கப்பட்டார்கள். பச்சிளங் குழந்தைகள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். வீடுகள், பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டன. எல்லாவற்றையும் இழந்து அன்றைக்கு நாங்கள் நிற்கதியாக நின்றுகொண்டிருந்தோம்.

ஆனாலும் தேசிய இனங்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைக்காக இன்று கூடியிருக்கிறோம். ஸ்டான் லூர்து சாமி அவர்களுக்கு உரிய மருத்துவத்தைக்கூடக் கொடுக்காமல் அவரை மரணிக்க விட்டார்கள் என்பதை இங்கே பேசிய தலைவர் பெருமக்கள்கூடக் குறிப்பிட்டார்கள். அதைப்போலவே இன்று என்னுடைய சகோதரன் யாசின் மாலிக் ஐந்தாண்டுகளாக திகார் சிறையிலே வாடிக் கொண்டிருக்கிறார்.
மேடைப் பதாகையில் என்னுடைய அன்புத்தம்பி பேரறிவாளன், அன்பு அக்கா நளினி ஆகியோரது படமும் இருக்கிறது. அவர்கள் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏழு பேர் விடுதலைக்காக எண்ணற்ற போராட்டங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். தமிழக மீனவர்கள் 840 பேருக்கும் மேல் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்மையில் கூட ராஜ்கிரண் என்ற ஒரு தம்பியை சிங்கள இராணுவம் கொலை செய்துவிட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் குறிப்பாக, பாரதிய சனதாவின் ஆட்சியாளர்கள் ஒரு சிறு கண்டனம், சிறு வருத்தத்தைக்கூடப் பதிவு செய்யவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை.

ஒன்றிணைந்து போராடினால், உறுதியாக நின்று போராடினால் வெற்றிபெற முடியும் என்று நிரூபித்தவர்கள் நீங்கள். டெல்கியிலே நடந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரிய போராட்டத்திலே தொடர்ச்சியாகக் களத்திலே நின்று நீங்கள் வென்று காட்டியதுபோல, தேசிய இனங்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தருகிறேன்.
பாராளுமன்றத்தில் எந்த விவாதங்களும் நடத்தாமல் கொடும் சட்டங்களை இயற்றிக்கொண்டே இருக்கிறது இந்திய ஒன்றிய அரசு. அதுமட்டுமின்றி என்னுடைய அலைபேசி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரின் அலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. ஆனால் அலைபேசி ஒட்டுக்கேட்பதில் எவ்வித தனிமனித சுதந்திர மீறலோ, தனிமனித உரிமை பாதிப்போ இல்லை என்று அரசு நீதிமன்றத்தில் வாதிடுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றுள்ள இம்மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைத்த ‘தல் கல்சா’ அமைப்பிற்கும், என்னுடைய போற்றுதற்கும், வணக்கத்துக்கும் உரிய ஐயா ஜக்மோகன் சிங் அவர்களுக்கும், ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றுள்ள தேசிய இனங்களின் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். தொடர்ந்து மனித உரிமைக்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம்.


செய்தி உதவி:
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு,
நாம் தமிழர் கட்சி

Leave a Reply