Home>>கல்வி>>நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலி!
கல்விசெய்திகள்தமிழ்நாடு

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலி!

உயிரிழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடவும், பெருமளவில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டவும் தமிழக அரசிற்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!


நெல்லை டவுண் சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மூன்று இளம் மாணவர்கள் பலியானதோடு மேலும் சில மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக பல கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன.

அவற்றில் ஒன்றாகவே இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்ததாலும் அதனை தொடர்ந்து போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும்தான் இக்கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களின் உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்துள்ளது.

பள்ளியின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்தும், அதைத்தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு சமீபத்தில் திறந்துள்ள நிலையில் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்து அதன்பிறகு பள்ளிகளை திறக்க வேண்டுமென்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அதன்பிறகும் கூட பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதோடு, ஓரளவு பழுதடைந்துள்ள கட்டிடங்களை உடனடியாக சீரமைக்கவும், பெருமளவில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை முற்றாக இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளி கட்டிட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல என்பதால் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டுமெனவும், பலியான மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்திட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்),
தமிழ்நாடு.

Leave a Reply