Home>>அரசியல்>>“ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் போராளி “ஐயா.இரட்டைமலை ஸ்ரீனிவாசன்
அரசியல்

“ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் போராளி “ஐயா.இரட்டைமலை ஸ்ரீனிவாசன்


‘ஒடுக்கப்பட்ட தமிழர் போராளி’
இரட்டைமலை சீனிவாசன் ஐயா அவர்களின் நினைவு நாள் இன்று…

18.9.1945

1916இல் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சிக்கு முன்னரே பார்ப்பன எதிர்ப்பை முன்னுறுத்தி போராடியவை தாழ்த்தப்பட்ட இயக்கங்களாகும். குறிப்பாக பார்ப்பனக் கோட்டையாய் திகழ்ந்த பேராயக் கட்சியை கடுமையாக சாடின. மேலும் நீதிக்கட்சி பார்ப்பனருக்கு சமமாக அதிகாரம் கேட்டதேயொழிய, சாதி ஒழிப்பு நோக்கில் போராட வில்லை.

மேலும், நீதிக்கட்சியில் தெலுங்கர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்தது. அதில் இருந்த தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தமிழரல்லாத தாழ்த்தப்பட்டோருக்கும் கூட அமைச்சரவையில் இடம் தர மறுத்தனர். நீதிக்கட்சியோடு தாழ்த்தப்பட்ட இயக்கங்கள் உறவு வைத்த நிலை என்பது ‘எதிரிக்கு எதிரி நண்பர்’ என்றளவிலேயே இருந்தது. எந்தத் தாழ்த்தப்பட்ட தலைவரும் நீதிக்கட்சியில் இரண்டறக் கலந்துவிட வில்லை.

தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் அதிகாரம், சாதியொழிப்பு ஆகிய இரண்டு தளங்களிலும் போராடியது. இதில் அயோத்திதாசப்பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.இராஜா ஆகியோரின் பங்கு மகத்தானது.
இந்த முப்பெரும் தலைவர்களில் முதன்மை நாயகராக இரட்டை மலை சீனிவாசன் அவர்களை கூறலாம்.

இவர் 1893இல் பறையர் மகாசபையை தொடங்கினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, பொருளாதாரம், அரசியல் உரிமைகள் பெறுவதை தமது நோக்கமென்று அறிவித்தார். இவரின் பறையர் அமைப்பை சாதியமைப்பாக பலர் சித்தரித்த போது சுப்பிரமணிய பாரதியார், “பறையர்களை மிருகங்கள் போல் நடத்துவது குற்றமேயொழிய, பறையர் என்று சொல்வது குற்றமில்லை” என்று தனது ‘பஞ்சமர்’ என்ற கட்டுரையில் எழுதினார்.

சீனிவாசனார் ‘பறையன்’ என்றொரு இதழையும் தொடங்கினார். இது பற்றி தனது ‘ஜீவிய சரித்திரம்’ நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார். ” சர்க்கார் ரிக்கார்டுகளை பரிசோதித்துப் பார்த்த போது 1777ஆம் வருஷ முதல் இவ்வினத்தவர் பொருட்டாய் அவர்கள் (பிரிட்டிஷ் அரசு) கவலை எடுத்து வந்ததாக காணப்பட்டது… 1818ஆம் வருஷம் இவ்வின குடியானவர்கள் முன்னேற்றமடைய வழிவகைகளைத் தெரிவிக்கும்படியாக கலெக்டர்களை ரெவின்யூ போர்டார் கேட்டிருந்தார்கள்… 1893ம் வருஷத்தில் கல்வி கற்பித்துக் கொடுக்கத் தலைப்பட்டார்கள்… 1893ம் வருஷம் ‘பறையன்’ என்ற பத்திரிக்கையை தூண்டுகோலாக வெளியிட்டேன்”

சீனிவாசனாரின் மேற்கண்ட கூற்றிலிருந்து நீதிக்கட்சி பிறப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர்களுக்கான பிரித்தானிய அரசின் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததை அறியலாம்.

1894ஆம் ஆண்டு முதல் வெளிவந்த ‘பறையன்’ ஏட்டில், தொடர்ந்து அவர் பேராயக் கட்சியை ‘பார்ப்பன காங்கிரஸ்’ என்று சாடி எழுதினார். இதற்குக் காரணம் காங்கிரசு கட்சி தலைமை முழுவதும் பார்ப்பனர்களே நிரம்பி வழிந்தனர்.

சென்னையில் 174 பேர்களில் 84 பேரும், பம்பாயில் 128 பேர்களில் 94 பேரும், பூனாவில் 22 பேரும், வங்காளத்தில் 30 பேர்களில் 8 பேரும் பிராமணர்கள். மொத்தம் 1162 பேர்களில் 940 பேர் பிராமணர்கள் இருந்து வருவதால் அப்பாப்பாரக் காங்கிரஸ் பறையராகிய நம்மவர்க்கு யாது பயனைத் தராது. எனவே, காங்கிரசிற்கு சந்தாவாக ஒரு பைசா கூட தராதீர்கள். காங்கிரசிற்கு உதவி செய்தால் அது பாம்பிற்கு பால் வார்ப்பதாகும்! என்றார்.

சீனிவாசனார் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். காந்தியார் தென்னாப்பிரிக்காவில் தமிழர்களுக்காக போராடிய போது சீனிவாசனார் அதில் பங்கேற்றார். காந்தியாரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்து தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்தார். அதுமட்டுமல்ல; காந்தியாருக்கு தமிழில் கையெழுத்திடவும் கற்றுக் கொடுத்தார். அதே வேளையில் 1932 இல் தாழ்த்தப்பட்ட மக்களின் இரட்டை வாக்குரிமையை எதிர்த்த காந்தியாரை கண்டிக்கவும் செய்தார்.

1923இல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பொது ரஸ்தாக்கள், மார்க்கெட்டுகள், கிணறுகள் போன்றவற்றை தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்த அனுமதிக்கும் படி முழங்கினார். அவர் கோரிக்கை ஏற்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை தன் மனைவி அரங்கநாயகி அம்மாள் கல்லறையில் கல்வெட்டாக பொறித்தார்.

அண்ணல் அம்பேத்காரோடு இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று அவரின் குரலுக்கு வலு சேர்த்தார். ஆனால் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய போது அதில் தன்னை இணைத்துக் கொள்ள வில்லை. தாழ்த்தப்பட்டோர் இந்துக்களே அல்ல, இந்துவாக பிறந்தால் தானே இந்துவாக இறப்பதற்கு, மதமாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை! என்றார்.

1928ஆம் ஆண்டு இலண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு சென்ற போது இரட்டைமலை சீனிவாசனின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், “உன்னிடம் வீட்டுச் செலவிற்கு பணம் இருக்காது, அதற்காகக் கவலைப்பட வேண்டாம். தர்மலிங்கம் பிள்ளையைப் பார்த்துக் கேட்டால் பத்து ரூபாய் தருவார். அவரிடம் தருமாறு சொல்லி வந்துள்ளேன். இந்த ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பச்செலவை பார்த்துக் கொள். நான் அதற்குள் வந்து விடுவேன்” என்று எழுதினார்.

தனக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மனைவி ரங்கநாயகி இறந்த போது கண்கலங்கிப் போனார். அவரின் ஈக உணர்வே நான் சமூகத்திற்கு உழைக்க சாத்தியமானது என்று மனைவியின் கல்லறையிலே பொறித்து மனைவி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தினார்.

1939இல் திரு.வி.க. தலைமையில் சீனிவாசனாருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அதில் சீனிவாசனார், “ஐம்பது ஆண்டுகள் தொண்டு புரிந்தும் எமக்கு அயர்வைத் தர வில்லை. ஒதுக்கப்பட்ட மக்கள் சிறிது காலத்தில் பூரண உரிமையை பெற்று விடுவர். அவர்களின் கீழான நிலைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும் அன்புக் குணமுமே காரணமாகும்” என்று பேசினார்.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அன்புவழியிலும், அமைதிவழியிலும் போராடிய ‘தாத்தா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசனாரை அவர் நினைவு நாளில் போற்றிப் புகழ்ந்திடுவோம்!

நன்றி; மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்

– கதிர்நிலவன்

Leave a Reply