Home>>அரசியல்>>திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுகிறதா?
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுகிறதா?

திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுகிறதா? – பால் முகவர்கள் சங்கம் அறிக்கை.


மூன்று சக்கர மிதிவண்டி மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் மையங்கள் நடைமுறையை கடந்த காலங்களில் ஏற்கனவே இரண்டு, மூன்று முறை அறிமுகம் செய்து (ஐஸ்கிரீம் விற்பனை முகவர்களுக்கு உரிய லாபம் இல்லாததால்) அது வெற்றி பெறாமல் போன காரணத்தால் அந்த திட்டத்திற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர மிதிவண்டி வாகனம், குளிர்சாதன பெட்டி வாங்கி அவை வீணான வகையில் மட்டும் ஆவினுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது தான் மிச்சம்.

நடமாடும் ஐஸ்கிரீம் விற்பனை மையங்கள் விசயத்தில் ஏற்கனவே இரண்டு, மூன்று முறை அறிமுகம் செய்து அது தோல்வியடைந்த நிலையில் அதே திட்டத்தை “பழைய மொந்தையில் புதிய கள்” என்பதைப் போல அதனை தூசி தட்டி, பட்டி, டிங்கரிங் பார்த்து, அதற்கு “இல்லம் தேடி ஆவின்” என்கிற புதிய (பெயர் சூட்டி) வண்ணத்தை பூசி மீண்டும் மூன்றாவது முறையாக மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் மூலம் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்கின்ற நடைமுறையை “முப்பெரும் தேவியர்” போல “முப்பெரும் அமைச்சர் பெருமக்கள்” (உதயநிதி ஸ்டாலின், நாசர், சேகர்பாபு) ஒன்று சேர்ந்து துவக்கி வைத்துள்ளதைப் பார்க்கும் போது இதன் மூலம் ஆவினுக்கு இன்னும் எவ்வளவு கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனரோ..? என தெரியவில்லை.

மேலும் தமிழகத்தில் தற்போதுள்ள பால் கொள்முதல் தொடர்பான உண்மை நிலவரத்தை மூடி மறைத்து, முதல்வருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் தவறான தகவல்களை அளித்து, பொதுமக்கள் மத்தியில் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஏதோ ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருவது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்களுக்கு வெண்ணெய், 100மிலி, 250மிலி நெய், பால்கோவா உள்ளிட்ட அதிகமாக விற்பனையாகும் ஆவின் உபபொருட்கள் தற்போது வரை விநியோகம் செய்யப்படாத சூழலில், ஆவின் பாலகங்களில் முறுக்கு, மிக்சர், லட்டு, குலாப்ஜாமூன், கேக் போன்ற கார, இனிப்பு வகைகளை மட்டும் விற்பனை செய்யச் சொல்லி பால் முகவர்களை நிர்ப்பந்தம் செய்வதும், அவற்றை கொள்முதல் செய்ய மறுக்கும் அல்லது ஆவின் நிர்வாகம் நிர்ணயிக்கும் அளவிற்கு கொள்முதல் செய்யாத பால் முகவர்களுக்கு ஆவின் பாலக உரிமத்தை ரத்து செய்வோம் என மிரட்டுவதையும் ஆவின் நிர்வாகம் தொடர்ந்து வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை (நிலைப்படுத்தப்பட்ட பால்) தட்டுப்பாடாக விநியோகம் செய்வது, அந்த வகை பாலில் 1% கொழுப்பு சத்து அளவை குறைத்து பசும் பால் எனக்கூறி மறைமுக விலையேற்றத்தை மக்கள் தலையில் திணித்து அந்த பாலினையும், அதிக விலை கொண்ட நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற) பால் பாக்கெட்டுகளையும் மட்டுமே தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் பால் முகவர்களை கட்டாயப்படுத்துவது, பால் கொள்முதல் வரத்து குறைவு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட Skimmed Milk Powder, Whole Milk Powder மற்றும் வெண்ணெய் மூலம் பால் உற்பத்தி செய்து தருவதால் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வரும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஒருவித துர்நாற்றம் வீசும் நிலையில் அதெல்லாம் தவறான தகவல் என போலியாக மறுப்பதுவுமே ஆவின் நிர்வாகத்தின் தற்போதைய வழக்கமாகிப் போனது.

இந்த அறிக்கையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் துர்நாற்றம் வீசுகிறது என பால் முகவர்கள் வாயிலாக பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் எங்களது சங்க நிர்வாகிகளுக்கு வந்து, எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இன்று (20.04.2023) கூட சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற) பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடாகவே விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் அமைச்சர்கள் திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. சேகர்பாபு மற்றும் நாசர் ஆகியோரை வைத்து பழைய திட்டத்தை புது திட்டம் போல் அறிமுகம் செய்து அரசை ஆவின் நிர்வாகம் ஏமாற்றி வருவதால் அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆவினில் தற்போது நிலவும் சூழல் குறித்து நேரடி கள ஆய்வு செய்து ஆவினை மட்டுமல்ல பால் முகவர்களையும், பொதுமக்களையும் காத்திட வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.


சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி:- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
20.04.2023 / மாலை 3.31மணி.

Leave a Reply