Home>>அரசியல்>>சட்டதிருத்த மசோதாவால் வேலையில்லா திண்டாட்டம் பெருகும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

சட்டதிருத்த மசோதாவால் வேலையில்லா திண்டாட்டம் பெருகும்.

“பாஜகவின் நகலாக திமுக நிறைவேற்றியுள்ள தொழிலாளர் விரோத சட்டதிருத்த மசோதாவால் வேலையில்லா திண்டாட்டம் பெருகும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.” – பால் முகவர்கள் சங்கம் அறிக்கை.


முதலாளிகளின் அடக்குமுறையில் “18மணி நேரம் வேலை” என்கிற முறையை உடைத்தெறிந்து, “எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம்” என்பதை கொண்டு வர வேண்டும் என உலகளாவிய அளவில் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து புரட்சி செய்து, போராடிப் பெற்ற உரிமை தினத்தை நினைவு கூறும் உழைப்பாளர்களின் உரிமை தினமான “மே தினம்” இன்னும் ஓரிரு வாரத்தில் வரவிருக்கின்ற சூழலில் தமிழக சட்டப்பேரவையில் “தொழிலாளர் வேலை நேர சீர்திருத்தம்” (வாரத்தில் நான்கு நாட்கள் 12மணி நேரம் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை) என்கிற புதிய தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் திமுக அரசு மத்திய பாஜக அரசின் மனச்சாட்சியாக, பாஜகவின் நகலாக செயல்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளே இல்லாத சூழலில் 44 தொழிலாளர் நல சட்டங்களை ரத்து செய்து அதனை கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகள் வர்க்கத்தினருக்கும் சாதகமான வெறும் 4சட்டங்களாக மாற்றியமைத்து மக்கள் விரோத பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை அமுல்படுத்த மறுத்தன. அப்போதைய தமிழக எதிர்க்கட்சியான திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழகத்தில் பாஜகவிற்கு பரம எதிரி போல காட்டிக் கொள்ளும் திமுகவோ மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களில் ஒன்றான 12மணி நேரம் வேலை சட்டத்திற்கான சட்டதிருத்த மசோதாவை சட்டப்பேரவையில் கொண்டு வருவதற்கு முன் குறைந்தபட்சம் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்துக்களை கூட கேட்காமல் தமிழகத்தில் அமுல்படுத்த சட்டப்பேரவையில் அதற்கான மசோதாவை நிறைவேற்றி, மாநில அரசின் தொழிலாளர் நல சட்டங்களை குழிதோண்டி சவக்குழியில் புதைத்தது போல் செயல்பட்டிருப்பதன் மூலம் “எதிர்க்கட்சியாக இருந்த போது எதிரிக்கட்சி” போல் செயல்பட்டு விட்டு ஆளுங்கட்சியான பிறகு மத்திய பாஜக அரசிடம் மாநில திமுக அரசு சரணாகதி அடைந்து விட்டது நிருபணமாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தொழிலாளர்கள் பணி செய்கின்ற தொழில் நிறுவனங்களில் தங்களின் சுயவிருப்பதின் பேரில் மட்டுமே 12மணி நேரம் வேலை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இதனால் எல்லா தொழிலாளர்களுக்கும் 12மணி நேரம் வேலை என்கிற கட்டாயம் கிடையாது, அதனால் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் கூறியிருப்பது 21ம் நூற்றாண்டில் கின்னஸில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய மிகப்பெரிய நகைச்சுவை என்றால் அது மிகையில்லை.

ஏனெனில் எந்த ஒரு தொழில், வணிக நிறுவனங்களிலோ, கார்ப்பரேட் நிறுவனங்களிலோ பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் ஊதியம் குறித்தோ, வேலை நேரம், விடுமுறை, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தோ முதலாளி வர்க்கத்திடம் கேட்டு விட்டு அங்கே பணியில் தொடர முடியாவாறு தொழிலாளர்களின் குரல் வளையை இறுக்கி, கழுத்தை நெருக்கி அவர்களை பேசவோ, மூச்சுவிடவோ முடியாதவாறு செய்கின்ற சூழலில் தொழிலாளர்கள் தங்களின் சுயவிருப்பதின் பேரில் மட்டுமே அச்சட்டம் செயல்படுத்தப்படும் என்பது எவ்வளவு பெரிய நகைச்சுவை என்பதை நம்மால் உணர முடியும்.

அதுமட்டுமின்றி பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களிலும், மிகப்பெரிய தொழிற்சாலைகளிலும் எந்த ஒரு தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் நலனிற்காக சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் நிலவி வருவதால் இறுதி நம்பிக்கையாக அரசையும், ஆட்சியாளர்களையும் நம்பிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மே தினப் பரிசாக 8மணி நேரம் வேலை என்கிற சட்டத்திற்கு பதிலாக 12மணி நேரம் வேலை என்கிற தொழிலாளர் விரோத சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி, மிகப்பெரிய பேரிடியை தொழிலாளர்களின் தலையில் திமுக அரசு சுமத்தியிருப்பது சிறிதும் ஏற்புடையதல்ல.

எட்டு மணி நேரம் வேலை என்கிற சட்டம் அமுலில் இருக்கும் போதே பல்வேறு தொழில், வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களை இன்னமும் கூட 12மணி நேரம் முதல் 15மணி நேரம் வரை வேலை வாங்கி, அதற்கான ஊதியத்தை கூட அவர்களுக்கு வழங்காத நிலையே நீடித்து வரும் போது தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தொழிலாளர் வேலை நேரம் சீர்திருத்தம் சட்ட திருத்த மசோதாவானது, ஏற்கனவே உழைப்புச் சுரண்டலை சத்தமின்றி செய்து வரும் முதலாளிளுக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக அமைந்து, குறைந்த தொழிலாளர்களை பணிக்கு வைத்துக் கொண்டு அவர்களை இன்னும் சக்கையாக கசக்கிப் பிழிந்து, உழைப்பைச் சுரண்டி, வேலையில்லா திண்டாட்டம் உருவாகவே வழி வகுக்கும்.

குறிப்பாக 8மணி நேரம் வேலை எனும் போது மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களை 12மணி நேர வேலை சீர்திருத்தம் அடிப்படையில் இரண்டு ஷிப்டாக மாற்றப்படும், அதன் மூலம் மூன்றாவது ஷிப்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகும். அத்துடன் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும், இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் இந்த புதிய வேலை நேர சீர்திருத்த சட்ட மசோதாவால் முதலாளிகள் வர்க்கமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டுமே கூடுதல் ஆதாயம் அடைவார்கள் என்பதால் போராடிப் பெற்ற 8மணி நேரம் வேலை என்கிற தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற இப்புதிய சட்டமானது கொடூர சட்டமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழகத்தில் அமுல்படுத்தாமல் மாநில அரசின் தொழிலாளர் நல சட்டங்களே தொடர்ந்து அமுலில் இருக்கவும், அதனை உறுதி செய்திடவும் தமிழக அரசு ஆவண செய்வதோடு, தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12மணி நேரம் வேலை சட்ட திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற்று, தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.


சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
23.04.2023 / காலை 8.55மணி.

Leave a Reply