தமிழ்ப் பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ் மன்னராகிய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக மாற்ற மராத்திய மாநில அரசு முயல்வதும், அதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இவ்வரலாற்று திரிபை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு சிறிதும் உணர்வற்று வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
செஞ்சிக்கோட்டை தொல்தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய சொத்தாகும். யாராலும் எளிதில் கைப்பற்ற முடியாத அதன் அமைவிட சிறப்பால், மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தியே செஞ்சிக்கோட்டை புகழ்பெற்று விளங்கியது. சோழ மன்னர்களின் அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா நூலில், “கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்” என்ற பாடல் வரிகள் மூலம், ‘வலிமையான மதில்களை கொண்ட கோட்டைகளையும், வலிய போர் யானைகளையும் கொண்டவன் மன்னர் செஞ்சியர்கோன் காடவன்’ என்று வியந்து பாடுகிறார்.
சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராஜராஜ சோழனை சிறை பிடித்து, செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்த வரலாற்று நிகழ்வுகள், அக்குகையில் காணப்படும் சிற்பத்தின் மூலமும், அங்கு பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மூலமும் அறியமுடிகிறது. வயலூர் கல்வெட்டும் அவ்வரலாற்றுச் செய்தியை உறுதிப்படுத்துகிறது.
செஞ்சி கோட்டையை கி.பி.1190 முதல் மன்னர் ஆனந்தகோனும், கி.பி.1240 முதல் மன்னர் கிருஷ்ணகோனும், கி.பி.1270 முதல் மன்னர் கோனேரிக்கோனும் அதன் பிறகு அவருடைய வாரிசுகள் மன்னர் கோவிந்தகோன், மன்னர் வலியகோன், மன்னர் கோட்டியலிங்ககோன் ஆகியோர் தொடர்ச்சியாக ஆண்ட மிக நீண்ட வரலாற்றை உடையது.
—
திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.



