Home>>அரசியல்>>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!
அரசியல்செய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வேளாண்மை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

காவிரிப்படுகை மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல், அரசின் அலட்சியப் போக்கு ஆகியவற்றைக் கண்டித்து ஒருங்கிணைந்த திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் தைலம்மை திரையரங்கம் அருகில் 29/10/2025 புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரும், உழவர்களும் உணர்வுடன் பங்கேற்றனர்.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் விவசாயி குருசாமி தனது வயலில் விளைந்த நெல்மணிகளில் மழையில் முளைத்த பயிர்களைக் காட்டி, தான் எதிர்க்கொண்ட பாதிப்புகளை, தன்னைப் போல பாதிக்கப்பட்ட உழவர்களின் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல், பிள்ளைகளின் கல்விச் செலவு, குடும்பத்தினரின் மருத்துவச் செலவு, பிற செலவுகளை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்று பேசியது உருக்கமாக இருந்தது.

இப்பிரச்னையில் பின்னணியில் திமுக, அதிமுக ஆட்சிகளில் நடக்கும் ஊழலும், உழவர்கள் மீதான அக்கறையின்மையும், அலட்சியப் போக்குகளுமே காரணம் என்பதை உணர்வெழுச்சியோடு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் ஹிமாயூன் கபீர், வழக்குரைஞர் மணி செந்தில், புலவர் கிருஷ்ணகுமார், மருத்துவர் பாரதிச்செல்வன், முனைவர் செந்தில்நாதன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கட்சியின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தார்கள்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் அரசுகளுக்குக் கொடுக்கும் அழுத்தம், அரசை விரைந்து நடவடிக்கை எடுக்க செய்யும் என்பது உறுதி. திமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால் வரும் பருவமழை ஏற்படுத்தப்போகும் பாதிப்பு உழவர்களை வீதியில் இறங்கி போராடச் செய்யும்.

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் காவிரிப்படுகை உழவர்களின் வாக்குகளை தக்கவைக்கவும், புதிய வாக்குகளை உயர்த்தவும் ஆளும் கட்சி கண்டிப்பாக உரிய நடவடிக்கைளை எடுப்பார்கள் என்று உழவர்கள் நம்புகிறார்கள்.

Leave a Reply