திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ளூர் மற்றும் சுற்றியுள்ள காவிரிப்படுகை உழவர்கள் ஒன்று திரட்டி நேற்று (03/01/2026) உழவர் எழுச்சி பேரணியை மன்னார்குடி தேரடித்திடல் முதல் நகராட்சி அலுவலகம் வரை காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடத்தினார்கள்.
இதில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதை கண்டித்து முழக்கமிட்டனர்.
இந்த உழவர் எழுச்சி பேரணிக்கு தமிழர் தேசியக் களம் நிர்வாகிகளில் ஒருவரான திரு. இராசசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழர் தேசியக் களம் நிர்வாகி திரு. கலைச்செல்வன் மற்றும் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் விடுதலைச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணியை நாம் தமிழர் கட்சியின் மாநில பொருளாளர் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான உள்ளூர் வேட்பாளருமாகிய மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா. பெ. மணியரசன், பொருளாளர் திரு. மணிமொழியன் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் தொகுப்பை கீழே தங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம்…
1.மேக்கேதாட்டை தடுப்போம் காவிரியை மீட்போம்.
2. ஒருதலைப்பட்சமாக செயல்படும் ஒன்றிய அரசே தமிழ்நாடும் இந்தியாவின் அங்கம் என்பதை மறவாதே.
3. காவிரி இல்லாமல் வாழ்வில்லை களம் காணாமல் காவிரி இல்லை.
4. காவிரி உரிமையை தமிழர்கள் இழப்பது தமிழினத்தை கருவறுப்பதற்கு சமம்.
5. அதிகாரமற்ற காவிரி ஆணையத்தை கலைத்துவிட்டு தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு.
6. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்படும் காவிரி ஆணைய தலைவர் ஹெல்தரை நீக்கிவிட்டு காவிரி வாரியத்திற்கான சமத்துவ தலைவரை தேர்ந்தெடு.
7. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயம் செய்.
8. உழவர்களின் உரிமை மின்சாரத்தைப் பாதிக்கும் மின்சாரத் திருத்தச் சட்ட முன்வரைவு 2025ஐ கைவிடு.
9. பக்ரா – நக்கல் வாரியம் போல தன்னாட்சி கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு.
10. நெல் கொள்முதல் ஈரப்பதம் 22% வரை அனுமதி வழங்கு.
11. உழவர்களின் மரபு வழி வேளாண்மை முறையை அழிக்காதே! விதைத் திருத்தச் சட்டத்தைத் திணிக்காதே!
பேரணியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை கீழே பகிர்ந்துள்ளோம்…
—
செய்தி உதவி:
திரு. நிரஞ்சன்,
தமிழர் தேசியக் களம்,
மன்னார்குடி.













