Home>>இந்தியா>>மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
தமிழ்நாடு சட்டமன்றம்
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசிற்கு தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளது.

தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

(1) உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவதும் மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது.

(2) அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

(3) தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இத்தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என மூன்று தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.


செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply