Home>>செய்திகள்>>தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஜெயசீலி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஜெயசீலி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள். இவர்களது அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அலுவலகமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது. ஆனால், என்றைக்கு திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக திருமதி.ஜெயசீலி அவர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்களோ அன்று முதல் மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனைகளை தினசரி அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரிடமும், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரிடமும் TARATDAC சங்கத்தின் சார்பில் வலியுறுத்தியும், புகார் அளித்தும் இன்றுவரை நடவடிக்கை இல்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது.

குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான குறைகளை அல்லது தேவைகளை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு மாநில மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தால் வழங்கப்பட்ட செல்போன் எண் (CUG No) திருமதி.ஜெயசீலி அவர்கள் என்றைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்களோ அன்று முதல் தொடர்ச்சியாக பல மாதங்களாக அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை என்பது நீடித்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் தங்களது அனைத்து குறைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதிநிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைப்படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலமுறை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் முறையிட்டும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக இக்கூட்டத்தை கூட்டுவதற்கான நடவடிக்கையை எடுங்கள் என உத்தரவிட்டும் இன்றுவரை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மேற்கொள்ளவில்லை. இக்கூட்டம் கூட்டப்படாத காரணத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடியாத நிலைமை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் கொரோனா காலத்தில் அடையாள அட்டை பெற முடியாமல் சிரமப்படுவதை கருத்தில்கொண்டு ஒன்றியம் வாரியாக அடையாள அட்டை வழங்கும் முகாம்களை நடத்த வேண்டும் என எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்து போராட்டம் அறிவித்ததன் பலனாக தற்போது மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான எவ்விதமான அடிப்படையான வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிலக்கோட்டையில் நடைபெற இருந்த அடையாள அட்டை முகாம் ரத்துசெய்யப்பட்டது. இதனால் நிலக்கோட்டை முகாமில் அடையாள அட்டை பெற வந்திருந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

செம்பட்டியில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பங்கேற்காத காரணத்தால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவலநிலை ஏற்ப்பட்டது.

சாணார்பட்டியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தற்க்காலிக ஊனம் என்று மட்டுமே சான்றளிக்கப்பட்டுள்ளது. கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் கூட தற்க்காலிக ஊனம் என்று மட்டுமே சான்றளிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்று அனைவரது அடையாள அட்டையிலும் கையொப்பமிட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இதை கண்டுகொள்ளவில்லை. இவரது இந்த நடவடிக்கையால் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அடையாள அட்டையை புதுப்பிக்க மாற்றுத்திறனாளிகள் அலைய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற முழங்கைக்கு மேல் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு அவரது ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப மதிப்பீடு செய்து ஊனத்தின் சதவீதத்தை மருத்துவர் போடாமல் 50 சதவீதம் என குறிப்பிட்டு அடையாள அட்டையில் கையொப்பமிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் முறையிட்டபோதும் அவர் இதிலெல்லாம் நான் தலையிட முடியாது என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டிக்கிறார். இதனால் அந்த மாற்றுத்திறனாளிக்கு கடுமையான ஊனமுற்றோருக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் பறிபோகும் நிலைமை உள்ளது.

இப்படியாக மாவட்ட ஆட்சியர் கூறினாலும், மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கூறினாலும் நான் என் இஷ்டப்படிதான் நடப்பேன் எனக்கூறி மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக துரோகமிழைக்கும் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


P. செல்வநாயகம் (மாவட்ட தலைவர்)
S. பகத்சிங் (மாவட்ட செயலாளர்)

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு.
தொடர்பு இலக்கங்கள்: 9360804000, 9994873253

Leave a Reply