Home>>இதர>>அணையா நெருப்பு

அணையா “நெருப்பு”

இரவில் மின்சாரம் நின்றுபோகும் சமயத்தில் இன்வெர்ட்டர் இல்லாத வீடுகளில் திடீர்னு நிலவும் அந்த கும்மிருட்டில் மெழுகுவர்த்தியை தேடி அதை ஏற்றிவைக்க தீப்பட்டியை தேடும் பொழுது தான் தோணும் தீக்குச்சிகள் இல்லையென்று..
எரிவாயு அடுப்புகள் பயன்படுத்தும் வீடுகளில் உடனே அடுத்தகட்டமாக அடுப்பை பற்ற வைக்கும் மின் நெருப்பேற்றியை(லைட்டர்)இயக்கி அடுப்பை பற்ற வைக்க முயற்சிப்போம்.நம்ம கெட்ட நேரம் அந்த நேரம் பார்த்து எரிவாயு தீர்ந்துவிட்டது..
நல்வாய்ப்பாக (இந்த நேரத்தில் கெடுவாய்ப்பாக)அங்கே யாருக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை .அதனால் நெருப்பு உருவாக்கும் எந்த ஒரு உபகரணங்களும் வீட்டில் இல்ல. மின்சாரமோ வரவே மாட்டேங்குது..சமைக்கலாம் ன்னு பார்த்தால் விறகு அடுப்பில் தான் சமைக்கனும். அதுக்கு நெருப்பு வேணும்.ஒளிக்கு கூட டார்ச் பயன்படுத்திக்கொள்ள முடியும்.அந்த நேரத்தில் கெடுவாய்ப்புகள் தொடர்கின்றன.. பேட்டரி போச்சு.
இந்த நேரத்தில் அடுத்தக்கட்டமா செய்வது என்ன??
அக்கம் பக்கத்து வீட்டில் தீப்பெட்டிகள் வாங்கி வருவதே!!.
ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு காற்றும் ,மழையும் வெளுத்து எடுக்கிறது.
அந்த மாதிரி ஒரு மோசமான நாளில் நாம் என்றாவது யோசித்துப் பார்த்திருப்போமா இன்றைய நவீனங்கள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் எவ்வாறு தினசரி வீட்டில் நெருப்பை உண்டாக்கினார்கள் என்று??
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட தீப்பெட்டிகள் புழக்கத்தில் வராத பல இடங்கள் இருந்தன.எனில் எவ்வாறு நெருப்பானது தினசரி வீட்டில் கிடைத்தது.. கற்காலம் போல கற்களை வைத்து தினசரி உராய்ந்து நெருப்பை ஏற்படுத்துவார்களா??
இடைக்காலத்தில் வன்னி மர கட்டைகளை வைத்து நெருப்பை உண்டாக்கியது போல ஏதும் செய்தார்களா என்று யோசித்து பார்த்தால் இப்படி எல்லாம் செய்வது தினசரி சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.பின் எப்படி நெருப்பு தினம் வீடுகளில் சாத்தியமானது ??
ஒரே வழி தான்.அதுதான் “அணையா நெருப்பு”.
அது எப்படி நெருப்பை அணையாமலே பார்த்துக் கொள்ள முடியும் இயற்கையை மீறி, இயற்கை தரும் சீற்றங்களை மீறி.
இதற்கு ஒரே பதில் நம் வீடுகளில் தினந்தோறும் உருவாக்கப்படும் தயிர் மாதிரி தான். பாலை காய்ச்சுகிறார்கள் அதை தயிராக்க உறைமோர் என சொல்லப்படும் ஏற்கனவே மிச்சம் இருக்கும் மோரில் சில துளிகளை சேர்ப்பார்கள். பின் இதுவே தொடர்கதையாகிவிடும். உறை மோர் எப்படி வீடுகளில் தினசரி பாதுகாக்கப்படுகிறதோ அதேபோலத்தான் அந்த காலத்தில் நெருப்பும் விளக்குகள் மூலமாகவும், தீவட்டிகள் மூலமாகவும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இயற்கை சீற்றத்தின் போதும் பலமான காற்று வீசும் போதும் விளக்குகள் அணையாமல் பாதுகாப்பதை ஒரு வேலையாகவே வைத்திருந்தனர்.
அதையும் மீறி ஒரு வீட்டில் நெருப்பு அணைந்து விட்டால் அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று உறைமோர் கடன் வாங்குவது போல நெருப்பை கடன் பெற்றார்கள். தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள் அதேபோல அந்த அன்னத்தை உருவாக்கப்பயன்படும் நெருப்பு தானமும் சிறந்த தானமாக கருதப்பட்டது. அதனால்தான் மனித வாழ்வில் நெருப்பு என்பது ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. நெருப்பை தன் சக்திக்கு மீறிய ஒன்றாக மனிதன் மட்டுமல்ல விலங்குகளும் கருதின.அதனால்தான் மனிதன் நெருப்பை கடவுளாக வணங்கினான். மிருகங்கள் நெருப்பைப் பார்த்தால் பயம் கொண்டன. அந்த பயத்தை பயன்படுத்திதான் மனிதன் நெருப்பைக் கொண்டு சிறுத்தை ,புலி உள்ளிட்ட பயங்கரமான காட்டு மிருகங்களை விரட்டினான். பாம்பு உட்பட ஊர்வன இனமும் ,விடம் கொண்ட பறவை இனத்தை சேர்ந்த தேனீக்கூட்டங்களும் நெருப்பைக் கண்டால் மிரண்டு விலகுவதும் அதனால்தான்.
இந்த நேரத்தில் 1995 ல் வந்த
Cast away என்றவொரு ஆங்கிலப்படம் நினைவுக்கு வருகிறது. ஒரு விமான விபத்தில் யாருமற்ற தீவில் தொலைந்து போன கதாநாயகன், அங்கே தன்னை காத்துக்கொள்ள பல விதமான வேலைகள் செய்கிறான் அதில் ஒன்றுதான் ஆதிமனிதன் போல தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். எனவே ஆதிமனிதனின் முதல் அரிய கண்டுபிடிப்பான நெருப்பை உருவாக்குகிறான். அதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறான் அதில் அவனுக்கு ரத்த அடிபடுகிறது. இறுதியில் நெருப்பை உருவாக்கி வெற்றி காண்கிறான்.அதில் பல பொருட்களை போட்டு கொளுத்தி அந்த நெருப்பு தரும் ஒளியில் , கதகதப்பில் தான் வாழ்க்கையில் பெரிதாக ஏதோ ஒன்றை போல சாதித்தது போல கும்மாளமிடுகிறான். ஒரு கட்டத்தில் அவன் அந்த தீவில் இருந்து மீட்கப்பட்டு திரும்ப நாட்டுக்குள் வருகிறான். அங்கே அவனுக்கு ஒரு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. அதில் நெருப்பை உருவாக்கும் லைட்டர் ஒன்று இருக்கிறது அதை எடுத்து உபயோகிக்கிறான். உடனே நொடிப்பொழுதில் நெருப்பு வருகிறது.அந்த நெருப்பை வெறுமையாக பார்க்கிறான். அந்தப் பார்வையின் அர்த்தம் இந்த நெருப்பை உருவாக்க எவ்வளவு கடின முயற்சிகளை எடுத்தோம், எவ்வளவு யோசித்தோம், பல கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே அது நமக்கு கிடைத்தது.ஆனால் இன்று இது இவ்வளவு எளிதாக நமக்கு கிடைக்கிறதே என்ற ஏக்கப்பார்வை அதில் இருக்கும்.
இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்வது ஒன்றுதான்.
எல்லாமே ஒருவருக்கு மிக எளிமையாக கிடைக்கும் பட்சத்தில் தேடல் என்ற அந்த பெரும் நெருப்பு அணைந்து போகும்.
ஆனால் எதுவுமே எளிதாக கிடைக்காத காலத்தில் அதை பெற வேண்டும் என்ற தேடல் அணையா பெரும் நெருப்பாக அப்போதிருந்த அனைவரிடமும் இருந்தது. அவர்கள் மனதில் இருந்த அந்த அணையா நெருப்பு தான் இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் அனைத்திற்குமே வித்திட்டது.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply