Home>>அரசியல்>>கர்ஜிக்கும் பஞ்சாப் சிங்(கங்)கள்

“நாங்கள் ஆறு மாதமோ அல்லது அதற்கு மேலோ இங்கே தங்குவதற்கான தயாரிப்புகளுடன் உள்ளோம், கோவிட் நோயை பற்றி கவலையில்லை ஏனென்றால் நாங்கள் உருவான விதம். நோய் கொண்டுவரக்கூடிய மரணத்திற்கு பயந்தால் இந்த சட்டம் எங்களை முழுவதும் அழித்துவிடும், அதனால் அழிவு நிச்சயம் என்பதால் இந்த வழி”, “ நாங்கள் நிரன்கரி மைதானத்திற்குள் போகமாட்டோம், இந்த எல்லையிலேயே இருப்போம்;” – பாராளுமன்றத்தை முற்றுகையிட டெல்லி நோக்கி பயணிக்கும் பஞ்சாப் விவசாயிகளின் குமுறல்..

மத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் – 2020, விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்- 2020, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் – 2020 ஆகிய இந்த மூன்று சட்டங்களும்தான், விவசாயிகளின் கோபத்துக்குக் காரணம்.

இந்த மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலே பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த மூன்று நாள்களாக ‘டெல்லி சலோ’போராட்டத்தை விவசாயிகள் நடத்திவருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெண்கள்,குழந்தைகள் உட்பட கோடிக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

டெல்லிக்குள் விவசாயிகளை நுழையவிடக் கூடாது என்பதற்காக உத்தரப்பிரதேசம், ஹரியானா எல்லைகளில் கண்ணீர்புகைக்குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். மாநில எல்லைகளில் விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். வியாழக்கிழமை (நவ. 26) இரவு முழுவதும் சாலைகளிலேயே முகாமிட்டனர்.

தடைகளை உடைத்து முன்னேறி, வெள்ளிக்கிழமை (நவ.27) அன்று டெல்லி எல்லையை விவசாயிகள் சென்றடைந்தனர். அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை போலீஸார் வீசினர். மேலும், குளிர்நீரைப் பீய்ச்சியடித்தனர். அதையும் மீறி விவசாயிகள் முன்னேறினர்.

டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வந்த விவசாயிகளைத் தடுப்பதற்காக மணல் மூட்டைகள் ஏற்றப்பட்ட வாகனங்களை சாலைகளின் குறுக்கே போலீஸார் நிறுத்திவைத்தனர். முள்கம்பி வேலிகளையும் சாலைகளில் அமைத்தனர். பல இடங்களில் சாலைகளில் பள்ளங்களைத் தோண்டிவைத்தனர். இந்தத் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு, டெல்லிக்கு வரும் விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும், விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்களும், மாணவர்களும், தொழிற்சங்கத்தினரும் நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த அழுத்தம் காரணமாகக் கடைசியில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதற்கு அரசு அனுமதித்தது.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு பரவலான ஆதரவும் எழுந்திருக்கிறது. #IamWithFarmers (விவசாயிகளுடன் நான் இருக்கிறேன்) என்ற ஹேஷ்டாக்குடன் சமூக வலைதளங்களில் நாடும் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், “பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. போராட்டம் செய்ய வேண்டாம் என்று விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினர். பிரதமரைச் சந்தித்து முறையிட வேண்டும் என்று கோரினர். ஆனால், அவர்களை பிரதமர் சந்திக்கவே இல்லை. தற்போது, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலிருக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்ப்பாரா என்பது தெரியவில்லை.

விவசாயிகளின் மிக நியாயமான இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கும் என்று நம்புவோம் மேலும் இத்தனை மன உறுதியோடு போராட்டத்தில் பங்குபெறும் பஞ்சாப் விவசாயி களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறிக் கொள்வோம். அடுத்தவேளை சாப்பாட்டில் கை வைக்கும் அனைவருமே விவசாயிகளுக்கு ஆதரவாளர்கள்தான். தமிழக விவசாயிகள் இதுபோன்று களத்தில் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

ஜெய் ஜவான் ஜெய் கிஷான் என்பது வெறும் கோஷமாக இல்லாமல் அது உண்மையிலேயே செயல்படுத்தி காட்டட்டும் மத்திய அரசு.


செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply