Home>>செய்திகள்>>மன்னார்குடி புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி ஆலோசனை கூட்டம்.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடி புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி ஆலோசனை கூட்டம்.

ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தி முயற்சிகள் தொடங்கியுள்ளது.

இதற்காக மன்னார்குடி காந்திசாலையில் உள்ள கோவிந்த் மகாலில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை சங்கத்தினர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் 11.07.2021 அன்று நடைபெற்றது.

மன்னார்குடி நகரம் 155 ஆண்டுகால நகராட்சியை கொண்ட பழமையான நகரம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திரப்போராட்ட வீரர்கள் பங்கேற்ற நகரம். தேசியம், திராவிடம், பொதுவுடமை, கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் இந்த பகுதியில் உருவாகி தமிழக அரசியலுக்கு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில் மன்னார்குடி நகரத்தை மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்த்த வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை புதிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய, 10 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கின்ற அடிப்படையில், குறைந்தபட்சம் இதனை 6 மாவட்டங்களாக தற்போது உருவாக்க முடியும். அதன்படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழமைமிக்க கட்டமைப்புகளை கொண்ட மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

அந்த மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் வருவாய் வட்டங்கள், அதுபோல் நிலுவையில் உள்ள முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தையும் இணைப்பதோடு, பட்டுக்கோட்டை வருவாய் வட்டத்திலுள்ள மதுக்கூர் நகரத்தையும், வட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி நகரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் வட்டங்களை உருவாக்கி, மேற்கண்ட வட்டங்களை இணைத்து, மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக தமிழக அரசை பல்வேறு வகையிலும் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் நகர மன்ற தலைவர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், ஆகிய அரசியல் கட்சிகள் பல்வேறு தொழிற்சங்கங்கள், ரோட்டரி, லயன்ஸ், JCI உள்ளிட்ட சேவை அமைப்புகள், வர்த்தக சங்கம், கட்டிட பொறியாளர்கள் சங்கம், நுகர்வோர் சங்கம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் பங்கேற்றன.

இந்த தீர்மானம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முன்னதாக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா அவர்களிடம் இந்த கோரிக்கையை வென்றெடுப்பது தொடர்பாக அனைத்து சேவை சங்க நிர்வாகிகளையும் அழைத்து சென்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து நீடாமங்கலத்திலும், வடசேரி, மதுக்கூர், நகரங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.


அன்புடன்
நேசக்கரம்.
9600 616 717


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply