Home>>அரசியல்>>தமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்ட “தமிழ்நாடு நாள்”!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்ட “தமிழ்நாடு நாள்”!

இன்றைக்குள்ள “தமிழ்நாடு” – 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களின் மொழி தேசிய இனத் தாயகமாக அமைக்கப்பட்டது. இதற்கான போராட்டத்தில் உயிரீகம் செய்தோரை நவம்பர் 1ஆம் நாள் நினைவு கூர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் இந்நாளை ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறது.

அந்நாளில், தமிழ்நாட்டின் வடக்கு – தெற்கு எல்லைகளை மீட்கப் போராடிய வடக்கெல்லை — தெற்கெல்லை மீட்புப் போராட்ட ஒருங்கிணைப்புத் தலைவர் ஐயா ம.பொ. சிவஞானம், வடக்கெல்லை மீட்புப் போராட்டத் தலைவர்கள் மங்கலங்கிழார், தளபதி விநாயகம், சிறையில் மாண்டுபோன திருவலங்காடு கோவிந்தசாமி, பழநிமாணிக்கம், தெற்கெல்லை மீட்புப் போராட்டத் தலைவர்கள் மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட அருளப்பன் நாடார், முத்துச்சாமி, குமரன் நாடார், செல்லப்பா பிள்ளை, பீர் முகம்மது, பொன்னையன் நாடார், பாலையன் நாடார், பப்பு பனிக்கர், இராமையன் நாடார் மற்றும் பெ.சு. மணி உள்ளிட்ட ஈகியரை நினைவிலேந்தி வணக்கம் செலுத்தி வருகிறோம்!

கடந்த 2019ஆம் ஆண்டு, அ.தி.மு.க. அரசு நவம்பர் 1ஆம் நாளை “தமிழ்நாடு நாளாக” அறிவித்த நிலையில், தற்போதுள்ள தி.மு.க. அரசு, அதனை இரத்து செய்துவிட்டு, “சூலை 18”ஆம் நாளை “தமிழ்நாடு நாளாக”க் கடைபிடிக்க அறிவித்துள்ளது. தி.மு.க. அரசின் இந்த தமிழின அடையாள அழிப்புச் செயலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் அமைப்புகளும், எதிர்த்து, உலகத் தமிழர்கள் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். இச்சூழலில், இன்று (2021 நவம்பர் 1), தி.மு.க. அரசின் அறிவிப்பைப் பொருட்படுத்தாமல், “தமிழ்நாடு நாள்” தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.

இன்று தமிழ்நாடு நாளை கடைபிடித்த “குற்றத்திற்காக” – ஓசூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களையும், காரைக்குடியில் பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமார் உள்ளிட்ட தோழர்களையும், திருச்சி – சேலம் பகுதிகளில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புத் தோழர்களையும் தமிழ்நாடு அரசின் காவல்துறை கைது செய்தது. சிதம்பரத்தில் தமிழ்நாடு நாள் நிகழ்வை முன்னெடுத்த பேரியக்கத் தோழர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திச் சென்றனர். தமிழ்நாடு அரசின் இந்த சனநாயக விரோதப் போக்கு, சமூக வலைத்தளங்களில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.

ஓசூர்
——–
தமிழ்நாட்டின் எல்லை நகரான ஓசூரில், நவம்பர் 1 – தமிழ்நாடு நாளையொட்டி இராம் நகரில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொடியை ஏற்றி வைக்க முயன்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையிலான 3 பெண்கள் உள்ளிட்ட 12 தோழர்களைக் காவல்துறையினர் தடுத்துக் கைது செய்தனர். சூலை 18ஆம் நாளைத்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாட வேண்டும், நவம்பர் 1ஆம் நாளைக் கொண்டாடக் கூடாது எனக்கூறி காவல்துறை அதிகாரிகள் அதனை ஞாயப்படுத்திப் பேசினர். கைது செய்யப்பட்ட தோழர்கள் ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை
————–
சென்னையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள க.க. நகரில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன் ஏற்றி வைத்தார். தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், இரா. இளங்குமரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு.வெ. இரமேசு உள்ளிட்டோர் பங்கேற்று, வடக்கு – தெற்கு எல்லை மீட்புப் போரில் உயிரீகம் செய்த ஈகியருக்கு வணக்கம் செலுத்தினர்.

இதனையடுத்து, சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள, எல்லை மீட்புப் போராளி ஐயா ம.பொ.சி. அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் கவிபாஸ்கர், தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர் இராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் வணக்கம் செலுத்தினர்.

சிதம்பரம்
————–
கடலூர் மாவட்டம் – சிதம்பரத்தில் காசுக்கடைத் தெருவில் நவம்பர் 1 அன்று காலை நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொடியேற்ற விழாவிற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆ. குபேரன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ச. மணிவண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசிய முழக்கங்கள் முழங்க தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை பேரியக்க நிறுவனத் தோழர் ஐயா மா.கோ. தேவராசன் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் ஈகி இராசேந்திரன் திருவுருவச் சிலைக்கு பேரியக்கத் தோழர் வேந்தன் சுரேசு அவர்கள் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். அதன்பின்பு, தமிழர் தற்காப்பு பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலம்பக்கலை அரங்கேற்றப்பட்டது. தொடர்ந்து பகுதி மக்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் த.தே.பே. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன், மூத்த தோழர் பா. பிரபாகரன், மகளிர் ஆயம் பொறுப்பாளர் இரா. தில்லைக்கரசி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே. சுப்ரமணிய சிவா, தோழர்கள் அ. அரங்கநாதன், சிலம்பம் சக்திவேல், வி.ஜே. அஜய் பிரசாத், அகரம் அஜய், இரா. பவித்திரா, இரா. ஓவியா, சு. இளவேனில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வு நடந்தபிறகு அங்கு வந்த காவல்துறையினர், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் குபேரனின் அலுவலகம் சென்று அவரிடம் நிகழ்வு குறித்து விசாரித்துச் சென்றனர்.

தஞ்சை
———-
தஞ்சையில், தொடர்வண்டி நிலையம் அருகில் இன்று காலை நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவிற்கு த.தே.பே. மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி தலைமை தாங்கினார். வடக்கு தெற்கு எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற ஈகிகளுக்கும் தலைவர்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தி முழக்கமிடப்பட்டது. நிகழ்வில் த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, மாவட்டச் செயற்குழு தோழர் இரா.சு. முனியாண்டி, தோழர்கள் மா. சீனிவாசன், இரா. செயக்குமார், பாலகிருட்டினன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், காவிரி உரிமை மீட்புக் குழு தோழர் இரமேசு, தோழர் வீரபிரபாகரன் (நாம் தமிழர் கட்சி), வல்லம்புதூர் பாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மதுரை
———-
மதுரையில், நவம்பர் 1 – தமிழ்நாடு நாளை முன்னிட்டு தமுக்கம் திடல் முன்பு உள்ள தமிழன்னை சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் தமிழ்நாடு எல்லை மீட்பு ஈகிகளுக்கு வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியும் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு, த.தே.பே. மதுரை மாநகரச் செயலாளர் தோழர் கதிர்நிலவன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன் முன்னிலை வகித்தார். மகளிர் ஆயம் தோழர்கள் பே. மேரி, சந்திரா, பேரியக்கத் தோழர்கள் விடியல் சிவா, ரெ. இராசு, புருசோத்தமன், சீமான் அன்னராசு, தியாகலிங்கம், கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாமிமலை
—————
குடந்தை வட்டம் – சாமிமலையில், கடைவீதியில் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் தலைமையில் வீரவணக்கம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ்நாடு நாள் கொண்டப்பட்டது. நிகழ்வையொட்டி, காலை 9 மணி முதலே சாமிமலை காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் நிறுத்தபட்டு இருந்தனர். நிகழ்வில் பேரியக்கத் தோழர்கள் த‌.சிவக்குமார், திருவலஞ்சுழி கிளைச் செயலாளர் பெ. செந்தில்குமரன் பிரபாகரன், தண்டபாணி, விக்கி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கிப்பட்டி
——————-
தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில், சாணூரபட்டி கடைவீதியில் த.தே.பே. ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரெ. கருணாநிதி, நாம் தமிழர் கட்சி பூதலூர் ஒன்றியச் செயலாளர் திரு. சந்துரு, தோழர் அருள்தாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சீர்காழி
———–
சிதம்பரம் வட்டம் – சீர்காழியில், பழைய பேருந்து நிலையம் அருகில் த.தே.பே. நகரச் செயலாளர் தோழர் செ. அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் நிகழ்வில், தோழர்கள் கோபு, சுந்தரமூர்த்தி, மலையப்பன், செல்வம், ஐயன் திருவள்ளுவர் ஒட்டுனர் உரிமையாளர் சங்கத் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். பழையபாளையம் கிராமத்தில் பேரியக்கத் தோழர் கோ. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் நிகழ்வில், தோழர்கள் வீரமுருகன், ஐயப்பன், பிரசாத், சரவணன், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முருகன்குடி
—————-
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் முருகன்குடியில் இன்று மாலை நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் கொடியேற்று நிகழ்ச்சி பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் பி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் பேரியக்கக் கொடியினை ஏற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், துறையூர் கிளைச் செயலாளர் தோழர் சி. பிரகாசு ஆகியோர் தமிழ்நாடு நாள் வரலாறு குறித்துப் பேசினர். காரையூர் கிளைச் செயலாளர் தோழர் சக்திவேல் நன்றியுரையாற்றினார். நிகழ்வில், வெண்கரும்பூர் கிளைச் செயலாளர் தோழர் மாதவன், பெலாந்துறை கிளைச் செயலாளர் தோழர் தமிழ்வாணன், பாசிகுளம், முருகன்குடி, துறையூர் உள்ளிட்ட பேரியக்கக் கிளைத் தோழர்கள் பங்கேற்றனர்.

கீரனூர்
———-
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கமும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து தமிழ்நாடு எல்லை மீட்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியதுடன், கடைகளில் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்கக் கோரும் துண்டறிக்கை பரப்புரையும் நடத்தினர். நிகழ்வில் த.தே.பே. திருச்சி மாநகரச் செயலாளர் இனியன், பொதுக்குழு உறுப்பினர் மூ.த. கவித்துவன், விராலிமலை கிளைச் செயலாளர் வே.பூ. இராமராசு, கிள்ளுக்கோட்டை கிளைச் செயலாளர் திருப்பதி, மற்றும் நுண்கலைஞர் கீரை த. சின்னப்பா, தோழர் குமரன் ஆகியோர் பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தோழர்கள் பிச்சரத்தினம், தமிழர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் சொ. சதாசிவம், நாம் தமிழர் கட்சி கீரனூர் ஒன்றியச் செயலாளர் கி. அரங்கநாதன், இராசுகுமார், பாலா, கோபி ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு நாளையொட்டி, ஈகியருக்கு நடந்த வீரவணக்க நிகழ்வு பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது. தமிழில் பெயர் பலகை வைப்பதை வணிகர்கள் முழு விருப்பத்தோடு செயல்படுத்தப்போவதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.

திருவெறும்பூர்
——————-
திருச்சி மாவட்டம் – திருவெறும்பூர் அண்ணா வளைவு அருகே நடைபெற்ற நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வில், பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்தார். த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் வே.க. இலக்குவன், பொதுக்குழு தோழர் இனியன், தோழர்கள் இராகுல் பாபு, தியாகராஜன், கோவிந்தன், அழகர்சாமி, ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடந்தை
————
குடந்தையில் தியாகி இராமசாமி தெருவிலுள்ள த.தே.பே. அலுவலகத்தின் முன்பு, பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடி ஏற்றப்பட்டு, தமிழ்நாடு நாள் கடைபிடிக்கப்பட்டது. பேரியக்கப் பொதுக்குழு தோழர் க. தீந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாத்துக்கூடல்
——————
விருத்தாசலம் வட்டம் – சாத்துக்கூடல் கிராமத்தில் நவம்பர் 1 மாலை நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொடியேற்று நிகழ்வுக்கு, கிளைச் செயலாளர் தோழர் இளநிலா தலைமை தாங்கினார். பேரியக்கத் தோழர்கள் இராசீவ்காந்தி, ஐயப்பன், செந்தமிழ்ச்செல்வன், ஆதித்யன், வீரசெல்வன், சிவசங்கர், தேவா உள்ளிட்டப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

காரைக்கால்
—————–
காரைக்கால் – திருநகரில் த.தே.பே. செயலாளர் தோழர் சூர்யா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், பேரியக்கக் கொடி ஏற்றப்பட்டது. ஐயா செயபால், பேராசிரியர் விக்னேசு, தோழர் ஆதிமுரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்செந்தூர்
——————-
திருச்செந்தூர் வட்டம் – குறும்பூரில் த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் மு. தமிழ்மணி தலைமையில் நடந்த நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் நிகழ்வில், தமிழ்நாடு எல்லை மீட்பு ஈகிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடை வீதியில் தோழர் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பேரியக்கத் தோழர்கள் சிவகுமார், விடுதலை வேந்தன், விஜய நாராயணப் பெருமாள், பெரியசாமி, நைஷ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் நவம்பர் 1 – “தமிழ்நாடு நாள்” நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

”இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!” என இந்நிகழ்வுகளில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் உறுதியேற்றனர்!


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply