Home>>சுற்றுசூழல்>>நாகை மாவட்டம் பனங்குடியில் பெட்ரோகெமிக்கல் தொழிலகத் தொகுப்பை உருவாக்கும் திட்டத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்க கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும்!
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

நாகை மாவட்டம் பனங்குடியில் பெட்ரோகெமிக்கல் தொழிலகத் தொகுப்பை உருவாக்கும் திட்டத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி!

வேண்டுகோளை ஏற்று திட்டத்தை இரத்து செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறோம்.

(நவம்பர் 2-அன்று நாம் முன்வைத்த விண்ணப்பம்:

காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்டல முயற்சிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
தமிழ்நாடு அரசு அளித்த உறுதி மொழிகளுக்கு இது எதிரானது!

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை!

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் -2020 இன் வரம்புக்குள் காவிரிப்படுகை முழுவதையும் கொண்டு வரவேண்டும்!

காவிரிப்படுகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய எண்ணெய் எரிவாயு த்திட்டங்களையும் நிறுத்த வேண்டும்!

நாகப்பட்டினம் பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் (CPCL) திறன் உயர்த்தும் பணி கைவிடப்பட வேண்டும்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் பெட்ரோகெமிக்கல் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளுவது வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்தை அழித்து விடும் முயற்சி ஆகும். தமிழக அரசு வேளாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமேயொழிய தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாட்டைக் குலைத்து விடக்கூடாது.

ஆகவே பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள் தொகுப்பு உருவாக்குவதற்கான, விரிவான திட்ட அறிக்கைத் தயாரிப்பு முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்! –ஆகிய கோரிக்கைகளை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

காவிரிப்படுகை பகுதியில் பெட்ரோகெமிக்கல் தொழில்களைத் துவங்கும் தமிழக அரசின் முயற்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (M-TIPB) 26.10. 2021 அன்று ஓர் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய-கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் தொகுப்பு ஒன்றை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக இந்த ஏல அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை 50 இலட்சம் ரூபாய்.

நாகப்பட்டினம் பனங்குடி சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்பு செய்து வந்துள்ளது இதிலேயே அப்பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது இந்நிலையில் அதை மேலும் விரிவாக்கம் செய்து ஆண்டுதோறும் 9 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் அளவிற்கு திறன் உயர்த்தும் பணிகள் தொடங்கிவிட்டன இதற்காக 600 ஏக்கர் நிலத்திற்கு மேலாக நிலம் கையகப்படுத்துவதற்கான உரிமையை தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திறன் உயர்த்த ரூபாய் 35,000 கோடியில் வேலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. நாற்பத்தி எட்டு மாதங்களில் இப்பணி முடியும். இது குறித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தன்னுடைய கடும் கண்டனங்களை முன்னமே பதிவு செய்தது. அரசுக்கும் இது குறித்த பாதிப்புகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த CPCL ஆலையின் விரிவாக்கப் பணிகள் முடிவடையும் நேரத்தில், ஆலையைச் சுற்றி பெட்ரோலிய கெமிக்கல் நிறுவனங்களின் தொகுப்பு இருந்தால், சுத்திகரிப்பு ஆலைகளின் துணை அலகுகளாக பல சிறு, குறு நிறுவனங்கள் அமையும் என்று இப்போது வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பு ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் பொருளில் இப்பகுதியை பெற்றோலிய இராசாயன மண்டலம் ஆக்கி விடுவது என்பதுதான். இப்பகுதி நாகை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண் மண்டலப் பகுதிக்குள் அமைந்துள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 20.2.2020 அன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின் முன்வரைவு சட்டமன்றத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது, பிரிவு 4 உட்பிரிவு 2(b) இன் கீழ், “உட்கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், குழாய்கள், சாலை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் இதர பயன்பாட்டுக்கான திட்டங்களை (other utilities) இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்றும், other utilities என்பதில் பெட்ரோல், கேஸ் ஆகியவை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் கேள்வி எழுப்பினார். அதுபோன்றே அன்று சட்டமன்ற உறுப்பினராக அவையில் இருந்த, இன்றைய தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அன்றைக்கே வேளாண் மண்டலத்தை பாதிக்கக்கூடிய பெட்ரோ கெமிக்கல் உரங்கள் (Petro – Chemical fertilizer) போல பல தொழிற்சாலைகள் அங்கு வருவதை எந்த வகையில் இந்த சட்டம் தடுக்க விருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

இது விவசாயிகளுக்கும் வேளாண்மையை பாதுகாக்க விரும்பும் செயல்பாட்டாளர் களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வருவதை இவர்கள் விரும்பவில்லை என்ற உணர்வை தமிழ்நாடு மக்கள் அனைவருமே பெற்றார்கள்.

காவிரி டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம் மண்டலத்தில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையை பெறுவதற்காக, 50 இலட்ச ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையை எம்.எஸ்.எம். ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் புரோமோஷன் பீரோ (MSM Trade and Investment Promotion Bureau)என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இது அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் 2020இல், தடைசெய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோகெமிக்கல் தொழில்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஹைட்ரோ கார்பன்கள் எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதன் பொருள், அதோடு சேர்ந்த சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம், பெட்ரோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்தல் போன்றவையும் தடை செய்யப்பட்டவை என்பதே அதன் உண்மைப் பொருள் ஆகும்.

தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டு சட்டப்பிரிவு 22 (2) – இல், “இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ” வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவைப் பயன்படுத்தி, அச்சட்டத்தை மேலும் வலுவுள்ளதாகச் செய்ய வேண்டும் என்பதே மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் வேண்டுகோள்.

தடைசெய்யப்பட்ட தொழில்களில் மேலும் பலவற்றை சேர்க்க வேண்டியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பரப்பு முழுவதுமாக சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், அபாயகரமான தொழில்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவெடுக்கக் கூடாது. கண்ணின் இமைகள் காப்பதுபோல வேளாண்மையையும், விவசாயிகளும் காப்போம் என்று தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் முன்னமே உறுதியளித்திருக்கிறார். அது மிகுந்த பாராட்டுக்கு உள்ளானது.

இந்நிலையில், இத்தகைய வேளாண் மண்டலத்தை பாதிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவது ஒட்டுமொத்தப் படுகை மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய தவறுகளை செய்யாமல் தவிர்ப்பது இன்றைய அரசுக்கு நற்பெயரை அளிக்கும்.

வேளாண் மண்டலப் பகுதிக்கு பெட்ரோகெமிக்கல் தொழில் நிறுவனங்களை உருவாக்கும் இத்தகைய முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.


பேராசிரியர் த.செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
02.11.2021.

Leave a Reply