Home>>ஆன்மீகம்>>நாட்டு மாடுகளின் அருமையை உணர்த்த காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்க்கும் முயற்சி.
ஆன்மீகம்இதரஉடல்நலம்கட்டுரைகள்சமூக பணிசுற்றுசூழல்செய்திகள்வேளாண்மை

நாட்டு மாடுகளின் அருமையை உணர்த்த காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்க்கும் முயற்சி.

வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு, வீட்டில் சுடச்சுட கரந்த சுத்தமான பால், வீட்டில் வளர்த்த ஆடு மாடு கோழி இறைச்சி, வீட்டில் வளர்க்கப்பட்ட முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் இதையெல்லாம் உண்டு உழவு செய்துவந்த வரை நமது மக்கள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள், எப்பொழுது உழவு நிலத்தை விற்றுவிட்டு, ஆடுமாடுகளை விற்றுவிட்டு, கோழி கூடுகளை எடுத்துவிட்டு, கிணறுகளை தூர்த்துவிட்டு விட்டு தொலைக்காட்சியின் முன்பு உடல் உழைப்பு இல்லாமல் திரைப்படத்திற்கும், நாடகங்களுக்கும் அடிமையாகி கடைகளில் நெகிழிகளில் அடைத்து விற்கப்படும் பாலையும் உணவு பொருட்களையும் வாங்கி உண்ண ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து ஒவ்வொரு ஊரிலும் சர்க்கரை நோயாளிகள், ரத்த சோகை நோயாளிகள், புற்றுநோய் நோயாளிகள் என நோய்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் மருத்துவ செலவும், துர்மரணங்களும் அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கை என்பதே அரிதாகி விட்டது.

நாட்டு மாடுகளின் இனம் அழிந்து வருவதை மனதில் கொண்டு, நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு வழிவகை செய்யும் வகையில், நாட்டு மாட்டு வகைகளில் ஒன்றான காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்ப்பது பற்றி நிறைய மெய்யன்பர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். நந்தி-பெருமான் சிலையாக கோவிலிலும் மதில் சுவர்களிலும் காட்சி தருகிறார் என்றாலும் உயிரோட்டமாக ஒரு காளையை கோவிலில் பக்தர்கள் பார்த்து பரவசம் அடைவது மனதுக்கு நிறைவாக இருக்கும்.

நாட்டு மாடுகளின் இனம் அழிந்து வருவதை மனதில் கொண்டு நம்மால் முடிந்த வரை இதைச் செய்யலாம் என்று சமூக ஆர்வலர்களும் ஆலோசனைகளை வழங்கி வருவதை மனதில் கொண்டு கோவிலுக்கு ஒரு காங்கேயம் காளையை வாங்கி வளர்க்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு பக்கத்திலேயே கால்நடை மருத்துவமனை இருக்கிறது. கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து காலம் காலமாக உழவு செய்து வரும் நமது ஊர் உறவுகள் ஆளுக்கு இரண்டு கட்டு வைக்கோல், இரண்டு கட்டு கடலைச் செடி இப்படி அதற்கான தீவணங்களை தரலாம். நாட்டு மாட்டை பராமரிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களால் இயன்றதை அதற்குச் செய்யலாம். இது ஒரு ஆன்மீகப் பணி மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினருக்கு நம் பாரம்பரிய மாடுகளை வளர்ப்பதன் மூலமாக ஆரோக்கியமான பாலை அருந்த வழிவகை செய்வது செய்யும் ஒரு சிறிய முயற்சியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக ஆலோசனை வழங்கவும், ஆதரவு தரவும் விரும்புவர்கள் பரவாக்கோட்டை சிவன் கோவில் கமிட்டியினரைத் தொடர்பு கொள்ளலாம்.

கலப்பின மாடுகளுக்கும் நாட்டு மாடுகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எப்படி மக்கள் தொகைப் பெருக்கம் பசுமை புரட்சி என ஏற்பட்டு இரசாயன உழவிற்கு காரணமாகச் சொல்லப்பட்டதோ அதே காரணம்தான் இந்த கலப்பின மாடுகளின் வரவிற்கும் சொல்லப்படுகிறது. ‘இத்தனை கோடி பேருக்கு பால் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் நாட்டு மாடுகளால் தரமுடியாது, கலப்பின மாடுகள்தான் தரமுடியும்’ என்று கூறி கலப்பினங்களை இங்குக் கொண்டு வரப்பட்டது. அதனால் பால் உற்பத்தி என்னவோ அதிகரிக்கத்தான் செய்தது. அதைவிட இப்பாலை உட்கொள்ளும் மனிதர்களுக்கு பலவித நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் ஆளாகி நோயாளிகளின் எண்ணிக்கையும் மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கவே செய்தன.

நம் நாட்டுப்பசுக்கள் கொடுக்கும் பால் A2 பால் என அழைக்கப்படுகின்றது. கலப்பின பசுக்கள் கொடுக்கும் பால் A1 வகை என்கிறார்கள். நாட்டு மாடுகள் மிகவும் சத்துடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டுப் பாலான A1 வகையில் சர்க்கரை நோய், மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் விளைவிக்கக் கூடிய தன்மைகள் உள்ளன.

இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் மற்றும் A2 பால் எனப் பிரித்து விற்கத் துவங்கியுள்ளன. நாம் அதனை அறியாமல் இன்னும் பாக்கெட் பால்களை வாங்கி உட்கொண்டு வருகிறோம். இதனால் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய், விரைவில் பூப்பெய்துதல் போன்ற பிரச்சனைகள் விளைவதோடு, ஆண்களுக்கும் மரபின கோளாறு சார்ந்த பல பிரச்சனைகள் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வெப்பம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும், மற்ற மாடுகளைக் காட்டிலும் கலப்பின மாடுகளில் அதிகமாகின்றன. நாட்டு மாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கேயே இருக்கின்றன. அதனால், அவை இயற்கையாகவே வெப்பநிலைகளைத் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை.

நாட்டு மாடுகளை ஏன் காக்க வேண்டும்?

உண்மையில் மாடுகள் மனிதனுக்கு வழங்கும் நன்மைக்கு பொன் கொடுத்தாலும் ஈடாகாதுதான்! அதை உணர்ந்த நம் முன்னோர்கள், மாடுகளுக்கென தை மாதம் இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கலிட்டு கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால், ‘மாடு’ என்ற வார்த்தை அனைத்து ரக மாடுகளையும் ஒரே தரத்திற்குள் அடக்கிவிடுவதாகிறது. உண்மையில், நீங்கள் பார்க்கும் பெரும்பாலான மாடுகள் நம் நாட்டைச் சேர்ந்தவையே அல்ல. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான நாட்டு மாடுகள் உள்ளன. இதுபோன்ற நம் நாட்டு மாடுகள் அரிதாகிவிடும் அளவிற்கு ஜெர்சி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் போன்ற கலப்பின ரகங்கள் தற்போது அதிகரித்துவிட்டன.

வேளாண் அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் 37 நாட்டு மாட்டினங்கள் உள்ளன. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் தமிழகத்தில் உள்ள நாட்டு மாடுகளின் பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல என்பது வியப்பளிக்கிறது. .காலநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள் அனைத்து இடங்களிலும் தெரிவதால் நாட்டு மாடுகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், நாட்டு மாடுகளால் மட்டுமே கடும் வெப்பநிலைகளைத் தாக்குப்பிடிக்க முடியும்.

கையில் இருப்பதன் அருமை தெரியாமல் தொலைத்துவிட்டு, பின் வருத்தப்படுவது தான் நாம் எப்போதும் செய்வது… இப்போதாவது விழித்துக் கொண்டோமே! மிஞ்சி இருக்கும் இதர வகை மாடுகளையாவது காப்போம். நாட்டு மாடுகள் இனம் கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது! இது நம் நாட்டு மாடுகளைக் காக்க வேண்டிய தருணமாகும்.
1.அத்தக்கருப்பன் 21. காரிக்காளை 41. படலைக் கொம்பன் 61. செவலை எருது 81. வெள்ளை
2. அழுக்குமறையன் 22. காற்சிலம்பன் 42. பட்டிக்காளை 62. செம்ம(ப)றையன் 82. கழுத்திகாபிள்ளை
3.அணறிகாலன் 23. காராம்பசு 43. பனங்காய் மயிலை 63. செந்தாழைவயிரன் 83. கருக்காமயிலை
4. ஆளைவெறிச்சான் 24. குட்டைசெவியன் 44. பசுங்கழுத்தான் 64. சொறியன் 84. பணங்காரி
5. ஆனைச்சொறியன் 25. குண்டுக்கண்ணன் 45. பால்வெள்ளை 65. தளப்பன் 85. சந்தனப்பிள்ளை
6. கட்டைக்காளை 26. குட்டைநரம்பன் 46. பொட்டைக்கண்ணன் 66. தல்லயன் காளை 86. சர்ச்சி
7. கருமறையான் 27. குத்துக்குளம்பன் 47. பொங்குவாயன் 67. தறிகொம்பன் 87. சிந்துமாடு
8. கட்டைக்காரி 28. குட்டை செவியன் 48. போருக்காளை 68. துடைசேர்கூழை 88. செம்பூத்துக்காரி
9. கட்டுக்கொம்பன் 29. குள்ளச்சிவப்பன் 49. மட்டைக் கொலம்பன் 69. தூங்கச்செழியன் 89. செவலமாடு
10. கட்டைவால் கூளை 30. கூழைவாலன் 50. மஞ்சள் வாலன் 70. வட்டப்புல்லை 90. நாட்டுமாடு
11. கருமறைக்காளை 31. கூடுகொம்பன் 51. மறைச்சிவலை 71. வட்டச்செவியன் 91. எருமைமாடு
12. கண்ணன் மயிலை 32. கூழைசிவலை 52. மஞ்சலி வாலன் 72. வளைக்கொம்பன் 92. காரிமாடு
13. கத்திக்கொம்பன் 33. கொட்டைப்பாக்கன் 53. மஞ்ச மயிலை 73. வள்ளிக் கொம்பன்
14. கள்ளக்காடன் 34. கொண்டைத்தலையன் 54. மயிலை 74. வர்ணக்காளை
15. கள்ளக்காளை 35. ஏரிச்சுழியன் 55. மேகவண்ணன் 75. வட்டக்கரியன்
16. கட்டைக்கொம்பன் 36. ஏறுவாலன் 56. முறிகொம்பன் 76. வெள்ளைக்காளை
17. கருங்கூழை 37. நாரைக்கழுத்தன் 57. முட்டிக்காலன் 77. வெள்ளைக்குடும்பன்
18. கழற்வாய்வெறியன் 38. நெட்டைக்கொம்பன் 58. முரிகாளை 78. வெள்ளைக்கண்ணன்
19. கழற்சிக்கண்ணன் 39. நெட்டைக்காலன் 59. சங்குவண்ணன் 79. வெள்ளைப்போரான்
20. கருப்பன் 40. படப்பு பிடுங்கி 60. செம்மறைக்காளை 80. மயிலைக்காளை

நாட்டு மாடுகள் நல்கும் நன்மைகள்!

நாட்டுப் பசுவின் சாணத்தில் மட்டும்தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நிறைந்து காணப்படுவதால், அதன் எரு, மண்வளத்தைப் பெருக்கி உயிர்ச் சூழலை காக்கும் என இயற்கை வேளாண் வல்லுநர்கள் கூறுகின்றனர். இயற்கை உழவிற்கு முன்னிறுத்தும் திரு.நம்மாழ்வார் மற்றும் சுபாஷ் பாலேக்கர் போன்றோர்கள் நாட்டுப் பசுக்கள், நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்துகின்றனர்.

இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் இடு பொருளான ‘பஞ்சகாவியம்’, நாட்டுப் பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. மேலும் நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்துதான் நம் முன்னோர்கள் விபூதியைத் தயாரித்தனர்.

இத்தனை நன்மைகளையும் நமக்கு வழங்கும் நமது நாட்டு மாடுகள் இனம் எதிர்காலத்தில் நம் சந்ததிகளின் முன் நடமாடுமா அல்லது புத்தகத்திலும் புகைப்படத்திலும் மட்டுமே பார்த்து தெரிந்துக் கொள்ளும் வகையில் அழிந்து போகுமா என்பது தற்போதுள்ள நம் கையில்தான் உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் இயற்கை உழவிற்கு திரும்புவதும், நாட்டு மாடுகளை உழவிற்கு பயன்படுத்துவதும் தான்!


செய்தி சேகரிப்பு:
இளவரசி இளங்கோவன்,
கனடா.

Leave a Reply