தனியார்மயமாக்கல் திட்டத்தை உடனே கைவிடுக! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்!
“புதுச்சேரி மக்களின் எதிர்ப்பையும் மீறி மின்துறையை தனியார்மயமாக்க இந்திய அரசு முயல்வது மக்களை அவமதிக்கும் செயல்! எனவே, மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து நேற்று (10.12.2021) புதுச்சேரியில் மின்துறை சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவிருந்தது. மின்துறை ஊழியர்களின் புறக்கணிப்பால் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை. இதனையடுத்து, புதுச்சேரி மின்துறை செயலாளர் அவர்களுக்கு இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.
நேற்று (10.12.2021) மாலை, புதுச்சேரி மின்துறை தலைமையகத்திலுள்ள மின்துறை செயலாளர் அலுவலகத்தில் இக்கடிதத்தை புதுச்சேரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, ஐயா ரங்கதுரை, நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கச் செயலாளர் தோழர் து. இரமேசு, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோர் வழங்கினர்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
“புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மின்துறையின் வழங்கலைத் தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து, மின்துறை தலைமையகத்தில் நடைபெறும் கருத்துக் கேட்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துகள்:
• புதுச்சேரியின் மின்துறையைத் தனியார்மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரியின் மின் வழங்கல் பணியைத் தனியார்மயமாக்குவது பொது மக்களுக்கும், மின்துறை ஊழியர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் நாசகரத் திட்டமாகும். மின்சாரம் என்ற மனித வாழ்வின் அடிப்படை உரிமையை அடியோடு மறுத்து, வசதியுள்ளோர்க்கு மட்டுமே மின்சாரம் என்ற பாகுபாடான நிலையை நோக்கித் தள்ளும் நோக்கம் கொண்டதாகும்.
• புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மின்துறை சற்றொப்ப 2,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மிகப்பெரும் துறையாகும். புதுச்சேரி மின்துறை பெரிதும் நட்டமின்றியே செயல்பட்டு வருகின்றது. கடந்த 2020ஆம் ஆண்டில் புதுச்சேரி மின்துறைக்கு நிலுவையில் உள்ள மின் கட்டணத் தொகையான 605.19 கோடி ரூபாயில், புதுச்சேரி அரசு நிறுவனங்களின் நிலுவை மட்டும் 442.58 கோடி ரூபாயாகும். இந்த சூழலிலும், கடந்த 2019 – 2020ஆம் ஆண்டில், புதுச்சேரி மின்துறை 23.33 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது.
• மின்சார நிலுவைத் தொகையை அரசு நிறுவனங்களிடம் கறார்தன்மையுடன் வசூலித்தால் முழுவதுமாக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மின்துறையை மேம்படுத்தும் எளிய வாய்ப்புண்டு. எனவே, மின்துறை நட்டமாக உள்ளதாகக் கூறிக்கொண்டு மின்துறையை தனியார்மயமாக்க வேண்டிய தேவை புதுச்சேரியில் இல்லை!
• சராசரி மின் வழங்கல் கட்டணமாக – இந்தியாவிலேயே மிகக்குறைவாக 5.59 ரூபாய் செலவில் மின் வழங்கல் புதுச்சேரியில்தான் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் மின் வழங்கலைத் தனியார்மயமாக்கினால், தனியார் நிறுவனங்கள் தங்கள் இலாபத்திற்காக இதனை பன்மடங்கு உயர்த்தி, பொது மக்களை வருத்தும் நிலை ஏற்படும்.
• தற்போது, மின்துறை அரசிடமே உள்ள நிலையில், தனியாரிடம் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். இப்போதே, மின் கட்டணம் மிகமிக அதிகமாக உள்ளதென மக்கள் அவதியுறும் நிலையில், மின் வழங்கல் தனியார்மயமானால் இக்கட்டணம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் ஆபத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வருவாய் இழந்துள்ள மக்களை, இது மேலும் அவதியுறச் செய்யும்.
• மின் கட்டண அதிகரிப்பு மறைமுகமாக மற்ற பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும். மின் கட்டண உயர்வால், விலைவாசி உயர்வும் ஏற்படும். ஏழை எளிய மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படும்.
• மின்துறை தனியார்மயமானால், பெரும் போராட்டங்கள் மற்றும் ஈகங்கள் வழியே நாம் போராடிப் பெற்ற இலவச மின்சார உரிமையை உழவர் பெருமக்களும், சிறு வணிகர்களும், ஏழை எளிய மக்களும் இழக்க நேரிடும். இதன் வழியே, உழவர்களும், ஏழை எளிய மக்களும் பெரும் சிரமங்களுக்கு ஆளாவார்கள்.
• மின்துறை அரசிடம் இருக்கும் நிலையில்தான், மின் கட்டணங்களை குறைக்கக் கோரி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதுச்சேரி அரசிடம் உரிமையுடன் நாம் கோரிக்கைகள் வைக்கிறோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மின் கட்டணத் தள்ளுபடி, வேளாண் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான இலவச மின்சாரம் போன்றவற்றை உரிமையுடன் கேட்க முடிகிறது. ஆனால், மின்துறை தனியார்மயமானால் இவ்வுரிமைகள் பறிபோவதுடன், தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கில் கட்டணங்களை தம் விருப்பப்படி தீர்மானிப்பதே நடக்கும்.
• ஏற்கெனவே இந்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு – சேவை வரி ஆகியவற்றின் வழியாக புதுச்சேரியின் சிறு – குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில், மின்துறை தனியார்மயமாக்கல் காரணமாக சலுகைகள் இரத்து செய்யப்பட்டு, மின் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில் புதுச்சேரியின் தொழில்துறை அடியோடு நசிந்து, மிகப்பெரும் வேலையிழப்பு நடைபெறும். சிறு தொழிற்சாலைகள் மூடப்படும்.
• மின்துறை தனியார்மயமானால், புதிய மின் கட்டண இணைப்புக்கான கட்டணம் மற்றும் வைப்புத் தொகை ஆகியவை பலமடங்கு உயரும். புதிதாக மின் இணைப்புப் பெறுவோர் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
• மக்களின் பயன்பாட்டுக்குரிய பெட்ரோல் – டீசல் எரிபொருட்களின் விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என இந்திய அரசு அனுமதித்த நிலையில், அவற்றுக்கான மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை அனைத்துலக அளவில் குறைந்து வரும் நிலையிலும் கூட, தமது இலாபவெறிக்காக தனியார் பெருநிறுவனங்கள் இன்று நாள்தோறும் அவற்றின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மக்களின் துயரங்களை இந்நிறுவனங்கள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தற்போது, மின்துறை தனியார்மயமானால், இதேபோல் நாள்தோறும் மின் கட்டண உயர்வை சந்திக்கும் அவலநிலை ஏற்படும்.
• தற்போது பொது மக்களின் நலனுக்காக வீடுகள், அலுவலகங்கள், வேளாண் பயன்பாடு என பல்வேறு வகைகளில் மின்தேவைகள் பிரிக்கப்பட்டு, அனைவருக்கும் தனித்தனியே மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களிடம் மின் வழங்கல் சென்றுவிட்டால், இலாபநோக்கில் ஒரே வகையான மின் கட்டணத்தை அனைவருக்கும் விதிக்கும் ஆபத்துள்ளது.
• தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு செயலில் இல்லாத நிலையில், மின்துறை தனியார்மயமாக்கப்படுவதன் வழியே, இத்துறையில் பணியாற்றி வரும் ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான வேலை வாய்ப்பு உரிமை மறைமுகமாக மறுக்கப்படுகிறது. இது சமூகநீதிக்கு எதிரானதாகும்!
• புதுச்சேரி மின்துறை அரசிடம் இருப்பதாலேயே இடஒதுக்கீட்டின் படி மண்ணின் மக்கள் வேலை வாய்ப்பு பெறும் நிலை உள்ளது. மின்துறை தனியார்மயமானால், மண்ணின் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வெளி மாநிலத்தவர் மின்துறையில் பெருமளவில் பணி அமர்த்தப்படுவர்.
• மின் உற்பத்தி தனியார்மயமானதால் தான், பொது மக்களுக்கு மின்சாரம் வழங்கி வரும் அரசின் மின்வாரியங்கள் தனியார் நிறுவனங்களிடம் கடனாளிகளாகி உள்ளன. கடந்த 2002 ஆம் ஆண்டு வரை இலாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம், தனியாரிடம் மின்சாரம் வாங்கத் தொடங்கிய பிறகே கடனாளியாகியது. தற்போது, மின் விநியோகமும் தனியார்மயமாக்கப்பட்டால், பொது மக்களிடம் மேலும் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, மின்துறையில் அரசின் பிடி தளர்த்தப்படும்.
• தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்கும் மின்சாரத்திற்கு விலை நிர்ணயிப்பதில், மிகப்பெரும் ஊழல்கள் நடந்துள்ள நிலையில், மின் வழங்கலிலும் அதுபோல் நடக்க வழிவகுக்கும்.
• மின்துறை தனியார்மயமாவதன் வழியே, மக்களின் வரிப்பணம் வழியாக ஏற்படுத்தப்பட்ட – மக்களின் சொத்தான கம்பி முதல் மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர்கள் வகையிலான மின் கட்டமைப்புகள் அனைத்தும் தனியாரின் இலாப வேட்டைக்காக பயன்படுத்தப்படும்.
• மின்சாரத்தைப் பெருமளவு பயன்படுத்தும் பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பணக்கார வீடுகள் போல் எங்கு மின்சாரப் பயன்பாடு அதிகமுள்ளதோ அங்கு மட்டும் மின் வழங்கலைக் கூடுதலாகவும், மின் பயன்பாடு குறைவாக உள்ளோரிடம் குறைந்தளவு ஆர்வத்துடன் மின் வழங்கலையும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். அனைத்து மக்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற கட்டாயக் கடமை – தனியார் நிறுவனங்களுக்குக் கிடையாது என்பதால், இலாபத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்.
• தில்லி மற்றும் ஒடிசா மாநிலங்களில் மின் வழங்கல் தனியாருக்கு வழங்கப்பட்டதால், மக்கள் பெரும் கட்டணக் கொள்ளையில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலை புதுச்சேரிக்கும் ஏற்படும்.
• மின்துறை தனியார்மயமானால், புதுச்சேரி அரசுக்குப் பெருமளவில் வருமான இழப்பு ஏற்படும். தனியார் நிறுவனங்களோ இலாபத்தில் கொழுக்கும்! ஏற்கெனவே சொந்த வருவாய் குறைந்துள்ள புதுச்சேரிக்கு, இதுமேலும் பாதிப்பையே ஏற்படுத்தும்.
• மின் வழங்கல் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்தில் 2016 – 2017ஆம் ஆண்டில் கம்பிவட இழப்பு (Transmission and Distribution losses) 39.10% வரை சென்றது என்கிறது நடுவண் மின்சார நிறுவனம் (Central Electricity Authority). ஆனால், அரசின் வசமுள்ள புதுச்சேரியின் மின்துறையோ கடந்த 1991ஆம் ஆண்டு 15.23 விழுக்காடாக இருந்த கம்பிவட இழப்பை, 2018 – 2019ஆம் ஆண்டில் 13.27 விழுக்காட்டுக்கும், 2019 – 2020ஆம் ஆண்டில் 12.50 விழுக்காட்டுக்கும் குறைத்து சாதனை படைத்துள்ளது. தற்போது நடக்கும் 2020 – 2021ஆம் ஆண்டில் இது 11.75 விழுக்காடாகவும் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் மின் வழங்கலைத் தனியார்மயமாக்க வேண்டிய தேவையே எழவில்லை!
• கடந்த 16.05.2020 அன்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள், ஒன்றியப் பகுதிகளின் மின்துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளு மன்றத்தில் அறிவித்ததிலிருந்து, புதுச்சேரியின் மின்துறையை தனியார்மயமாக்க இந்திய அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக, புதுச்சேரி மக்களும், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
• மேற்படி பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு – மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிரான புதுச்சேரி மக்கள் மற்றும் மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 22.07.2020 அன்று புதுச்சேரி அரசு சட்டப்பேரவையில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் இயற்றி, அது இந்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மக்களின் இக்கோரிக்கையை அடியோடு புறக்கணித்துவிட்டு, தன்னிச்சையாக இந்திய அரசு புதுச்சேரியின் மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது புதுச்சேரி மக்களை அவமதிப்பதாகும்.
• நடப்பில் உள்ள மின்சாரச் சட்டம் 2003க்கு திருத்தம் என்ற பெயரால் இந்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள “மின்சார சட்ட திருத்த வரைவு – 2020”-இல் உள்ள பல கூறுகளில் ஒன்றுதான், மின்சார வழங்கலைத் தனியார்மயமாக்கும் திட்டமாகும். இச்சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து இந்தியத் தலைநகர் புதுதில்லியை உழவர்கள் முற்றுகையிட்டுப் போராடியுள்ள நிலையில், இக்கொடூர சட்டத்தின் கூறுகளை புதுச்சேரியில் செயல்படுத்த முனைவது மக்கள் விரோதப் போக்காகும். மக்கள் போராட்டங்களை அவமதிக்கும் செயலாகும்!
எனவே, மேலுள்ள காரணங்களை கவனத்தில் கொண்டு, புதுச்சேரியின் மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை இந்திய அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு தோழர் இரா. வேல்சாமி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
—
செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.



