Home>>அரசியல்>>இத்தாலி அரசுத் துறையில் ஆங்கிலம் பயன்படுத்துவோர்க்கு 89 இலட்சம் ரூபாய் தண்டம்!
அரசியல்இந்தியாசெய்திகள்தஞ்சாவூர்தமிழர்கள்தமிழ்நாடுமாவட்டங்கள்வரலாறு

இத்தாலி அரசுத் துறையில் ஆங்கிலம் பயன்படுத்துவோர்க்கு 89 இலட்சம் ரூபாய் தண்டம்!

இத்தாலி அரசுத் துறையில் ஆங்கிலம் பயன்படுத்துவோர்க்கு 89 இலட்சம் ரூபாய் தண்டம்! இங்கு என்ன செய்யப் போகிறோம்? – தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை.


வரலாற்றில் ஐரோப்பாவைக் கலக்கிய ரோமாபுரி இப்போது இத்தாலிக்குள் சுருங்கிவிட்டது. இத்தாலியின் தலைநகரம் அது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, இத்தாலி நாடாளுமன்றம் அண்மையில் ஒரு சட்ட முன்வரைவு (மசோதா) நிறைவேற்றியுள்ளது.

இத்தாலி அரசின் ஒரே ஆட்சி மொழியான இத்தாலியானாவில் மட்டுமே குடிமக்களும், அதிகாரிகளும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கு மக்கள் மனுப் போடவும், மக்களுடன் அரசு தொடர்பு கொள்ளவும் சட்டப்படியான ஒரே மொழி இத்தாலி மட்டுமே! ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் – அரசுடன் தொடர்பு கொண்டால் அந்த நபருக்கு 89 இலட்ச ரூபாய் தண்டத் தொகை (1,00,000 யூரோ) விதிக்கப்படும் என்று இத்தாலி நாடாளுமன்றம் சட்ட முன்வரைவை நிறைவேற்றியுள்ளது (தினத்தந்தி, 03.04.2023). குறிப்பாக, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் இத்தாலி மொழிக்கும், இத்தாலிய மரபுக்கும் அதிகமாக அழிந்து வருவதால் இந்த முடிவு எடுத்தோம் என்கிறார், அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஜார்ஜியோ மெலோனி. (ஜூனியர் விகடன், 09.04.2023).

தமிழர்களே, தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன? இந்திய அரசு சமற்கிருதம், இந்தி இரண்டையும் திணிக்கிறது. திராவிட ஆட்சிகள் ஆங்கில ஆதிக்கத்திற்கு அரியணை போட்டுள்ளன. தமிழ்நாட்டு மக்களோ, ஆங்கிலம் கலந்து பேசுவது, ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப் பலகை வைப்பது போன்றவை அறிவாளித் தனத்தின் அடையாளம் – மேட்டிமைத்தனம் என்ற மனநிலையில் உள்ளார்கள். பிள்ளைகளுக்கு சமற்கிருதம், இந்திப் பெயர்களைச் கூச்ச நாச்சமில்லாமல் சூட்டி மகிழ்கிறார்கள். நம்மவர்களிடம் அண்டி வாழும் உளவியல் மண்டிக் கிடக்கிறது.

தமிழர்கள் மனநிலயில் ஏன் இந்த ஊனம்? இதே தமிழர்கள் தாம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், காங்கிரசார் திணித்த இந்தியை எதிர்த்து 1930களில் இருந்து போராடிச் சிறை சென்றார்கள். சிறையில் நடராசன், தாளமுத்து என்ற இரு வீரத் தமிழர்கள் மாண்டார்கள்! 1965 இந்தி எதிர்ப்புப் போரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் காங்கிரசு ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து எட்டுத் தமிழர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்து ஈகியானார்கள்!

தாய்மொழியை அழிக்க வந்த அயல்மொழியை எதிர்த்து இவ்வளவு பேர் உயிரீகம் செய்த வரலாறு தமிழர்களைத் தவிர உலகில் வேறு எந்த இனத்திற்கு உண்டு?

மொழிப் போர் ஈகியரின் வீரத்தையும் ஈகத்தையும் பேசித் தமிழ்நாட்டின் கங்காணி ஆட்சிப் பதவிகளை அடைந்த திராவிடத் திரிபாளர்கள் – ஆங்கிலத்திற்கும் ஆரியத்திற்கும் அடிமைகள் ஆகிப் போனார்கள். அவர்கள் காட்டிய – பரப்பிய வழிமுறைதான் அண்டிப் பிழைக்கும் அரசியலும், அவ்வாறான உளவியலும்!

ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலேயே மறைமலை அடிகளார் 1916இல் ஆதிக்க ஆரிய – ஆங்கில மொழிகளை நீக்கி, எளிய – இனிய தனித்தமிழில் பேசும், எழுதும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். ஏராளமான தமிழ் அறிஞர்களும், உணர்வாளர்களும் இயன்ற அளவு தூய தமிழ் நடையைப் பின்பற்றினார்கள்!

பின்னர் பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் இனப் பெருந்தகைகள் தனித்தமிழ் நடையை மக்கள் மயமாக்கினர். அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு தமிழ் அறிஞர்களும், இன உணர்வாளர்களும் தூயதமிழ் நடைமுறையை கடைபிடித்து வருகிறார்கள்; பரப்பி வருகிறார்கள்.

ஆனால், திராவிடக் கங்காணி அரசியலானது, இலட்சிய நடிப்பு – தமிழ் நடிப்பு செய்வதில் வல்லமை காட்டி, தமிழர்களைக் கவர்ந்து, ஆங்கில – சமற்கிருத – இந்தி ஆதிக்கக்காரர்களிடம் மக்களை அடைக்கலம் தேட வைத்து விட்டது!

இத்தாலி மட்டுமல்ல, பிரான்சில் இதுபோல் அயல்மொழித் தவிர்ப்பு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. வேறு சில நாடுகளிலும் இதுபோல் சட்டம் இருக்கலாம்.

தமிழ்நாட்டு அரசு நடவடிக்கைகளில் ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் பயன்படுத்துவோரைத் தண்டிக்கும் சட்டம் கோருவோம்! அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு தமிழரும் இயன்ற வரை தனித்தமிழில் பேசுவது, எழுதுவது, பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவது, பெயர்ப் பலகை வைப்பது என்று நடைமுறைப்படுத்திக் கொள்வோம்!
தமிழ் – தமிழ்நாடு வெல்க!


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 9443918095
புலனம் : 9841949462

Leave a Reply