NLC அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது பெரும் எதிர்ப்புக்குள்ளான இந்தச்சூழலில் ,NLC விரிவாக்கம் தேவையா இல்லையா என்பதை பற்றி விவாதிக்கும் முன் இந்த பிரச்சையை சார்ந்து சில அடிப்படை விடயங்களை பற்றி பார்ப்போம்.
இன்றைய நமது நவீன வாழ்வில் மின்சாரம் என்பது ஒரு அடிப்படை தேவையாகிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகையும் பெருகிக் கொண்டிருக்கிறது, மின் சாதனங்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஆகவே மின் உற்பத்தியும் பெருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எனவே மின் உற்பத்திக்காக அரசாங்கம் செய்யும் திட்டங்கள் தவறு என்று நாம் விவாதிக்கவில்லை.
ஆனால் நெய்வேலியை பொறுத்தவரை அங்கே நிலக்கரி கிடைக்கிறது .நிலக்கரிக்கும் மின்சாரத்திற்கு என்ன சம்பந்தம்?? நிலக்கரியை அப்படியே மின்சாரமாக மாற்ற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு வரும்.
மின்சாரம் தயாரிப்பதற்கு பல வகையான வழிமுறைகள் என்ன.
அனல் மின் நிலையம், அணுமின் நிலையம் ,சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம் கடல் அலை மூலம் கிடைக்கும் மின்சாரம் என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இப்ப புதுசா உயிர் வாயு மறு சுழற்சி முறை (bio gas plant) மூலமாகவும் மின்சாரம் பெறப்படுகிறது.
இதில் சூரிய ஒளி யை தவிர மற்ற முறைகளில் ஏதேனும் ஒரு அழுத்தம் மூலம் turbine என சொல்லப்படும் காத்தாடியை சுற்ற வைக்க வேண்டும். அதன் மூலம் சக்தியானது ஜெனரேட்டர்ல போய் சேர்ந்து விடும். இதுதான் மின்சாரம் தயாரிக்கும் அடிப்படை முறை.
அப்படி அந்த காத்தாடிய சுற்ற வைக்க ஏதேனும் ஒரு அழுத்தம் தேவை இல்லையா, அதுக்கு என்ன பண்ணலாம். ஒன்னு வேகமாக அடிக்கும் காற்றை வைத்து அந்த அழுத்தத்தை கொடுக்க முடியும்
இதுதான் காற்றாலை மின்சாரம்.
இல்லேன்னா தண்ணிய கொண்டு வந்து வேகமா அடிச்சா காத்தாடி சுற்ற வைக்கலாம்.
இதுதான் நீர் மின் நிலையம்.
கடலில் எழும்பும் அலைகளின் விசையை கொண்டும் காத்தாடி சுற்ற வைக்க முடியும் .இதுதான் அலையாற்றல் என்பார்கள்.(tidal energy)
இல்லனா யுரேனியம்,, தோரியம் போன்ற அணுவை பிளக்கும் பொழுது அதீத ஆற்றல் வெளியாகும். அந்த ஆற்றலை பயன்படுத்தியும் காத்தாடியை சுற்ற வைக்கலாம்.
இதுதான் அணுமின் நிலையம்.
இப்ப nlc ல இருக்கிறது , அனல் மின் நிலையம்.
அதாவது வீட்ல சுடு தண்ணி போடுற மாதிரி தான். நீரை நன்றாக கொதிக்க வைத்தால் நீராவி வரும். அந்த நீராவி போய் காத்தாடியை சுத்த வைக்கும். அதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும்.
தண்ணீரை எப்படி கொதிக்க வைக்கலாம்?? அதுக்கு எரிபொருள் தேவை .ஒன்று விறகு வச்சு கொளுத்தலாம். இல்லேன்னா மண்ணெண்ணெய் ,பெட்ரோல், எரிவாயு என பயன்படுத்தலாம்.
அதற்கு எரிபொருள் செலவு அதிகமாகும் எனவே நிலக்கரியை போட்டு எரிக்கலாம். அதனால ஒரு இடத்தில் நிலக்கரி நிறைய கிடைக்கும் பொழுது அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் தான் நெய்வேலியில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது. அதனால் அனல் மின் நிலையத்தை எங்கு வேண்டுமானாலும் உருவாக்கலாம். தேவை எரிபொருள் மட்டுமே. ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் கிடைச்சா அங்கே கூட செய்ய முடியும்.
அதனால நிலக்கரி இருந்தால் மட்டும் தான் மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.
உண்மையிலேயே நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் அத்தனையும் தமிழ்நாட்டிற்கு தான் பயன்படுகிறதா என்பதை யோசித்துப் பாருங்கள்??
2016 ல இந்து ல வந்த ஒரு கட்டுரையில்,
https://www.google.com/amp/s/www.thehindu.com/news/national/tamil-nadu/How-NLC-shares-power/article12556623.ece/amp/
nlc ல அன்னிக்கு 2016ல மொத்த மின் உற்பத்தியாக 2490 mw குறிப்பிட்டு இருக்கிறார்கள்.அதில் 47.4 % அதாவது 1181 mw மட்டுமே தமிழ் நாட்டிற்கு பயன்படுகிறது ..
அதாவது அங்கே தயாரிக்கப்படும் மின்சாரம் பாதிக்கும் மேலே வெளி மாநிலத்திற்குதான் செல்கிறது.
இன்று 3650 mw மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.(சரியான அளவு தெரியவில்லை).அப்படியானால் 1730 மெகாவாட் மின்சாரம் மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் மின் தேவை என்பது 15000 mw க்கும்மேல் . அப்படி இருக்க இந்த நெய்வேலியில் இருந்து கிடைக்கும் வெறும் 1700 மெகாவாட் மட்டுமே தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து விடுமா??
மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகளில் ஒரே ஒரு வழிமுறை பின்பற்றி தயாரிக்கப்படும் வெறுமனே 1700 mw மின்சாரத்திற்காக தமிழ்நாட்டின் ஆதாரமாக இருக்கக்கூடிய விவசாயத்தை அழிக்கலாமா என்ற கேள்வி நிச்சயம் வரும். நியாயமான கேள்விதான்.
இதற்கு முறையான பதில் யாரிடமும் இல்லை.
எல்லாம் சரி. விவசாயம் முக்கியம் தான் .அதே அளவுக்கு மின்சாரம் முக்கியம் மின் உற்பத்தியை வேறு எப்படித் தான் பெறுவது என்று நியாயமாக கேட்பவர்களுக்கு நாம் அதற்கு தகுந்த பதிலை கொடுக்க முடியும்.
1990 களில் உலகமயமாதல் கொள்கை இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அதே வேளையில், ஜெர்மனியில் உயிர் வாயு நிலையம் (bio gas plant) எனப்படும் குப்பை கழிவுகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். தற்போது 4000 mw மின்சார உற்பத்தியை யும் எட்டி விட்டார்கள். இதன் மூலம் சுற்றுப்புறத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.. மின்சாரம் மட்டுமின்றி மீத்தேன் வாயும் இதிலிருந்து பெறப்படுகிறது.
இதைப் பற்றிய தெளிவான ஒரு விளக்க காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்க நாம் இன்னும் அனல் மின் நிலையம் அணுமின் நிலையத்தை மட்டுமே நம்பி இருக்க காரணம் என்ன??
இதன் பின்னே ஒரு பெரிய வியாபார சூழ்ச்சி இருக்கிறது.
அரசுக்கு தேவை மின்சாரம் இல்லை. “நிலக்கரி”.
நிலக்கரியை உலக வல்லரசு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் . வெறுமனே நிலக்கரியை ஏற்றுமதிக்காக மட்டுமே பயன்படுத்தினால் விவசாய நிலங்களை அபகரிக்க முடியாது. எனவே வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள இந்தியா, மின்சார பற்றாக்குறை பயத்தை காண்பித்து அதை நிறைவேற்றிக் கொள்ளும் .
இது ஒன்றும் புதிதில்லை .ஏற்கனவே இதே போல தான் 2006ல் திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையின் போது, கூடங்குளம் அணு உலை மட்டுமே அதற்கு தீர்வு என்றார்கள்.
எவ்வளவு பெரிய பொய். கூடங்குளம் அணுமின் நிலைய மூலமாக எவ்வளவு மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது?? தமிழகத்தின் மின் தேவையில் மிக மிக சொற்ப அளவே அங்கு தயாரிக்கப்படுகிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. பின் எப்படி நம் மின் தேவை நிறைவு செய்யப்பட்டது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
உலக நாடுகள் எல்லாம் தற்போது அணுமின் நிலையத்தை கைவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அளவுக்கு அதிகமான யுரேனியத்தை கைவசம் வைத்திருக்கும் ரஷ்யா என்ன செய்தது?? அணுசக்தி உடன்பாடு என்ற அடிப்படையில் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளுக்கு தள்ளி விட வேண்டியது தான்.. அப்படி வந்தது தான் இங்கு யுரேனியமும் அணுமின் நிலையமும்.
இன்னும் சொல்லப்போனால் அணுமின் நிலையத்திற்கு தோரியம் கூட உகந்தது தான் .கேரள கடற்கரையில் ஏகப்பட்ட அளவில் தோரியம் கிடைக்கிறது என்கிறார்கள். அப்படி இருந்தும் யுரேனியத்தை இறக்குமதி செய்து அணுமின் நிலையம் அமைக்க வேண்டியது அவசியம் என்ன என்பதை யோசித்துப் பார்த்தால் தெரியும்.
ஸ்டெர்லைட்டை மூடிவிட்டால் தாமிரம் கிடைக்காது ,டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஏடுக்காவிட்டால் எரிவாயு கிடைக்காது என்று நம் அறியாமையை பயன்படுத்தி நம்மை பயமுறுத்தி அவர்கள் நினைத்ததை சாதித்து விடுவார்கள் ..
அப்படி ஒரு பூச்சாண்டியைத் தான் தற்போது என்எல்சி விரிவாக்க பணிகளுக்கும் காட்டி இருக்கிறார்கள்.
ஐயா பெ.மணியரசன் அவர்கள் சொல்வார்கள்,இங்கே நமக்குத் தேவை ஒட்டுமொத்த வளங்களையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சூறையாடும் mass production (பேர் உற்பத்தி)தேவை இல்லை. பல்வேறு பகுதியில் உள்ள குறைவான வளங்களை வைத்து தயாரிக்கப்படும் production by masses (பல் உற்பத்தி ) முறையே சிறந்தது அதுவே நமக்கு தேவை என்பார்.
அதுபோல மின்சாரத்தையும் மீத்தேன் வாயுவையும் அந்தந்த பகுதிகளில் உள்ள கழிவுகளை வைத்துக்கொண்டு 100 மெகாவாட் 200 மெகாவாட் என தயாரிக்கலாமே. அதை அந்தந்த பகுதிகளிலே பயன்படுத்திக் கொள்ளலாமே.. இப்படி செய்வதன் மூலம் நமது மின்சாரம் மற்றும் எரிவாயுவின் தேவை பெருமளவில் நிறைவு செய்யப்படும்.
அதை விட்டுவிட்டு ஒரே இடத்தில் உள்ள வளங்களை ஒரே நேரத்தில் ஒன்றாக கொள்ளை அடிப்பது என்பது என்றைக்குமே நமக்கு அது பெரும் அழிவைத் தான் தரும்.
மின்சாரத்திற்கு மாற்று வழிகள் ஆயிரம் உள்ளன. ஆனால் உணவு உற்பத்திக்கு ??
விவசாயம் மட்டுமே ஒரே தீர்வு.
-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

