Home>>அரசியல்>>ஊழல் சாக்கடை ஆறாய் ஓடுகிறது! ஒழிப்பீரா, ஒதுங்கிக் கொள்வீரா?
ஐயா மணியரசன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

ஊழல் சாக்கடை ஆறாய் ஓடுகிறது! ஒழிப்பீரா, ஒதுங்கிக் கொள்வீரா?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் – திரைப்பட நடிகர் – விஜயைக் கண்டு ரசிக்க , அவர் கண்பார்வை பட, கரூரில் 27.9.2025 அன்று குவிந்த கூட்ட நெரிசலில் 41 பேர் கொல்லப்பட்டனர். சற்றொப்ப 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சாவுகள் பெருந்துயரம்! உயிர் பறிப்புச் சோகம்!

இதையொட்டி, தி.மு.க.வின் ஊழலும், அ.தி.மு.க.வின் ஊழலும் இலாவணிக் கச்சேரி ரசனையுடன் எதிரெதிர் முகாம்களில் பேசப்படுகின்றன. தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி, அமைச்சராக இருந்தபோது அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளில் 1 பாட்டில் சாராயத்திற்கு இரசீது போடாமல் 10 ரூபாய் வசூலித்தார்கள் என்பதை நையாண்டிப் பாடல் மூலம் கரூர்க் கூட்டத்தில் வெளிப்படுத்தினார் விஜய்!

விஜயின் கரூர் பேச்சு மற்றும் முறையற்ற நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு எதிர்வினையாற்றிய செந்தில் பாலாஜி, அண்ணா தி.மு.க. ஆட்சியிலேயே ஒரு பாட்டிலுக்கு இவ்வளவு ரூபாய் என்று இரசீது போடாமல் வசூலிக்கும் முறை செயல்படுத்தப்பட்டது. அதைத்தான் தி.மு.க. ஆட்சி செயல்படுத்தியது என்றார்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழல் கட்சிகள் தாம், அவற்றின் ஆட்சிகளும் ஊழல் ஆட்சிகள்தாம் என்பதே!
நெல் கொள்முதலில் 40 கிலோ உள்ள ஒரு மூட்டைக்கு நாற்பது ரூபாய், இரசீது போடாமல் அரசு அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் ஊழல் – தி.மு.க.-அ.தி.மு.க. இரு கழக ஆட்சிகளிலும் நடப்பவையே!

முதல்முதலாகக் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சியில் விவரம் இல்லாமல் நேரடியாக இலஞ்சம் பெற்று மாட்டிக் கொண்டனர். சர்க்காரியா ஆணையம் அதற்காக இந்திராகாந்தியால் அமைக்கப்பட்டது. ஆனால் செயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சி, இலஞ்ச வருவாயை – அரசின் மறைமுக வரி வருவாய்போல் மாற்றியது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு:

தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் தனியாரிடம் கொடுக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தக்காரர்களிடம் நேரடியாகக் கையூட்டு வாங்குவதில்லை. மொத்த ஒப்பந்தத் தொகையில் 40 விழுக்காடு ரூபாயை கையூட்டாகக் கொடுக்க வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்தார் செயலலிதா. அந்த 40 விழுக்காட்டில் முதலமைச்சர், அந்தத் துறை அமைச்சர், பணி நடைபெறும் மாவட்ட அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், கிளைச் செயலாளர் என ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் ஒப்பந்தக்காரர் கையூட்டு கொடுக்க வேண்டும். ஒப்பந்தப் பணி நடைபெறும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் விகித அடிப்படையில் கையூட்டு கொடுக்க வேண்டும்.

மிச்சமுள்ள 60 விழுக்காடு ஒப்பந்தத் தொகையில் ஒப்பந்தக்காரர்களுக்கு இலாபம் இருக்கிறது. ஐம்பது விழுக்காடு அளவுக்கு இப்படி கையூட்டாகப் போய்விட்டால், ஒப்பந்தப் பணி உரிய அளவில் தரமாக நடக்க வாய்ப்பில்லையே என்று கேள்வி எழுந்தபோது, 40 விழுக்காடு கழிவு போக எஞ்சிய பணத்தில் தரமாகக் கட்டுமானம் நடைபெறும் அளவிற்குக் கூடுதலாக ஒப்பந்தத்தின் குறைந்தபட்ச மதிப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுகிறது என்றார்கள். மக்கள் வரிப்பணத்தில் இப்படிக் கொள்ளையடிப்பது நடைமுறையில் ஏற்கப்பட்ட மறைமுகவரி போல், உரிய நபர்களுக்கு மறைமுகமாகப் போய்விடும்.
பின்னர் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற கருணாநிதி, செயலலிதா உருவாக்கிய மேற்படி கையூட்டு வசூல் சூத்திரத்தைப் பின்பற்றிச் செயல்படுத்தினார். கழக ஆட்சிகளில் இந்த ஊழல் தொடர்கிறது. ஓர் எடுத்துக்காட்டாக இதைச் சொன்னோம். அவர்கள் அடிக்கும் கொள்ளையில் இதெல்லாம் கொசுறு!

அதுபோல் கல்லூரிப் பேராசிரியர்கள், பல்கலைக் கழகத் துணைவேந்ர்கள், மற்றமற்ற பணி அமர்தல்களில் ஆளுநருக்கும் விகிதாச்சார கையூட்டு போய்ச் சேரும். இந்த ஏற்பாடு இப்போதுள்ளவருக்கு முன்பு இருந்தது. அரசு போக்குவரத்துக் கழகம், இதர அரசுப் பணிகளில் அமர்த்துதல் முதலியவற்றில் பணிபெறுபவர்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய “தொகை அளவு” அவரவர் பெறும் சம்பள விகிதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் முரண்பாடுகள் வந்துவிட்டால் துணை வேந்தர் பணி அமர்த்தல் உட்பட பல அமர்த்தல்கள் பாதிக்கப்பட்டுவிடும்.

இப்பொழுது நடக்கும் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மேலும் “சனநாயகப் படுத்தப்பட்டுள்ளது”! எடுத்துக் காட்டாக ஒப்பந்தப் பணிகள் – வகை பிரிக்கப்பட்டு, – அவற்றை ஆளுங்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முடிவு செய்வது ஒரு வகை. ஆளுங்கட்சியின் மாவட்ட அளவில் உள்ள பிரமுகர்கள் முடிவு செய்து ஒப்பந்தம் கொடுப்பது இன்னொரு வகை.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்களுக்கே பெரும்பாலான ஒப்பந்த வேலைகள் கொடுக்கப்படும். ஒத்துழைக்கக்கூடிய எதிர்க்கட்சி ஒப்பந்தக் காரர்களுக்கும் சிறிது கொடுக்கப்பட்டு “சனநாயகம்” காக்கப்படும்.

ஒரு மாவட்டத்தில் வரும் ஒப்பந்தப் பணிகள் – மாவட்டச் செயலாளர் தலைமையில் உள்ள குழுவினரால் முடிவு செய்யப்பட்டு, அந்த மாவட்ட அமைச்சர்களின் ஒப்புதலோடு கொடுக்கப்படும். இதில் உட்கட்சி சிக்கல்கள் எழுகின்றன. அந்த நிலையில்தான் கழக மாவட்டங்களை அதிகப்படுத்தி, மாவட்டச் செயலாளர்களை அதிகப்படுத்தி அந்தந்த மாவட்டத்தில் – எடுத்துக்காட்டாக, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, நடு, நகர மாவட்டங்கள் என்று பிரித்து, அதற்குத் தனித்தனி மாவட்டச் செயலாளர்கள், ஒரே மாவட்டத்திற்குள் போடுகிறார்கள்.

அரசு வரையறுத்துள்ள ஒரே மாவட்டத்திற்குள் கழக மாவட்டங்கள் பல உருவாக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் இது! கழகத்தி்ன் இந்தப் பாணி மாவட்டப் பகுப்புகளை, மற்ற கட்சிகளும், – புதிய கட்சிகள் உட்பட – பின்பற்றிச் செயல்படுத்துகின்றன. நாம் ஆட்சிக்கு வந்தாலும் கழகம் கடைபிடித்த வருவாய்ப் பாதையில் உறுதியாகப் பயணம் செய்வோம் என்று உறுதி கொடுப்பதற்காகவும் இந்தப் பாணியை மற்ற கட்சிகளும் பின்பற்றுகின்றன. வெளித்தோற்றத்திற்கு இந்த உள் மாவட்டப் பிரிவினைகள் – பதவிச் சண்டைகளைத் தீர்ப்பதற்காக என்று ஊகிக்கப்படும். அரசு வருவாய் மாவட்டத்திற்குள் ஆளுங்கட்சி “வருவாய்” மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தப் பணி எடுத்த தனிநபர்கள் ஊரின் ஏரியை, குளங்களை, குன்றுகளை, காடுகளை அழித்தாலும் பெரும்பாலான ஊர்களில் மக்கள் எதிர்க்கமாட்டார்கள். காரணம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சிறுகட்சியென எல்லாக் கட்சிப் பொறுப்பாளர்களையும் உரிய முறையில் ஒப்பந்தக்காரர் “கவனித்திருப்பார்”!

ஊழலானது கோட்டையிலிருந்து குக்கிராமம் வரை சனநாயகப்படுத்தப் பட்டுள்ளது!

செயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் மிகப் பெரிய உளத்தியல் (உளவியல்) பேராசிரியர்கள். உளத்தியல் பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களாக இருக்கும் “தகுதி” பெற்றவர்கள்! மக்களை மண்மேடு அளவிற்கு ஊழல்வாதிகாளாய் மாற்றினால்தான் தங்களின் மலையளவு ஊழலைச் சகித்துக் கொள்வார்கள்; சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்ற உளத்தியல் புரிந்தவர்கள்!
அரசின் உதவித் திட்டங்கள் என்ற பெயரில், மக்களுக்கான ஊழல் திட்டங்களை அறிவிப்பார்கள்! மக்களுக்கான இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்றவை சுருங்கி, தனியார் கொள்ளைக் கூடங்களாக மாறிடத் துணை நிற்பர் இதே ஆட்சியாளர்கள். அரசின் இலவச கல்வித்துறை, மருத்துவத்துறை இரண்டும் சீரழிந்து, சுருங்கிவர இவர்களே மறைமுக ஏற்பாடுகள் செய்வார்கள்.
தொழிற்கல்வி உட்பட பல துறைக் கல்வி கற்ற – தகுதியுள்ள ஆணும், பெண்ணும் தமிழ்நாட்டில் உரிய வேலையின்றித் தவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு அலுவலகங்களில், கல்வி நிறுவனங்களில், காவல்துறையில், சிறைகளில், மருத்துவத்துறையில், மின்வாரியத் துறையில், தொழில் துறையில் சற்றொப்ப 50 இலட்சம் நிரந்தரப் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சிறு பகுதியை ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிகப் பணியார்கள் என்ற வகையில் அடிமாட்டு, அத்துக் கூலிக்கு அமர்த்தி வேலைவாங்குகிறது தமிழ்நாடு அரசு.

“விடியல் நகரப் பேருந்துகள்” – அவற்றில் – பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணச் சலுகை என்கிறது ஸ்டாலின் அரசு. அப்படியெனின் 1967 -இல் அண்ணா தொடங்கி ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சிக் காலத்திலெல்லாம் பெண்கள் இருளில்தான் வைக்கப்பட்டிருந்தார்கள் என்று மு.க. ஸ்டாலினே சொல்வது போல் உள்ளது, விடியல் பேருந்துத் திட்டம்.

தமிழ்நாடு அரசே சாராயக் கடைகளை நடத்தி, மக்களைக் குடிகாரர்கள் ஆக்கியபின் பெண்களின் குடும்ப வாழ்வில் விடியல் ஏது?

செர்மனி, பிரான்சு முதலிய ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல், படித்த இளையோர்க்கு உரிய வேலை கிடைக்கும் வரை, கல்வித் தகுதிக்கேற்ப மாதம் ஐயாயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்வரை வாழ்வூதியம் தரலாம் அல்லவா? இந்தக் கோரிக்கையைப் பல ஆண்டுகளாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் எழுப்பி வருகிறது.

இக்கோரிக்கையைப் பெரும்பெரும் கட்சிகள் ஏன் முன்வைக்கவில்லை? தமிழ்நாட்டு விடியலுக்காகவே அண்ட வெளியில் திராவிடச் சூரியனை உருவாக்கிச் சுழலவிட்டுள்ள தி.மு.க., அ.தி.மு.க. திராவிடக் கட்சிகள் ஏன் இளையோர்க்கான இந்த விடியலைச் செய்யவில்லை?

அத்துக் கூலிகளாக வேலை செய்யும் வாய்ப்பையும் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குத் தரமறுத்து, இந்திக்கார்களையும், இன்னபிற அயல் மாநிலத்தவரையும் கொண்டு நிரப்புவதேன்? அவர்கள் நிரந்தரமாகத் தங்க குடியிருப்புகள் கட்டிக் கொடுத்துக் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் வழங்குவது ஏன்?

தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு நீடிக்கக் கூடாது என்ற திராவிடச் சித்தாந்தத்தின் வக்கிரத்திட்டம்தானே இது?

வாக்குச் சீட்டு பெறுவதற்காகப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரத் தயார்; ஆனால் பல்வேறு கல்வித் தகுதிபெற்ற பெண் பிள்ளைகளுக்கு முன்னோடியான முனைப்பான புதிய வேலை வாய்ப்புத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த தயாரில்லை! ஏன்? அந்த வேலைகள் இந்திக்காரர்களுக்கும் இதர மாநிலத்தவர்க்கும் போக வேண்டும் என்ற உள்மனத் தந்திரமா?

பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில், அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் அமர்த்தவே இல்லை! அத்துக்கூலி ஆசிரியர்களைத்தான் அமர்த்துகிறீர்கள்? ஏனிந்த சூழ்ச்சி?

கட்சிப் பேரணிகள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்குப் பணம் கொடுத்து, பாட்டிலும் பிரியாணியும் கொடுத்து அழைத்துப்போக வசதியாக, தமிழனும் தமிழச்சியும் உதிரிகளாகவே, ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்ற உள்நோக்கம் திராவிட அரசியலுக்கு இருக்கிறதா?

கையூட்டு வாங்கி ஓட்டுப் போடும் பழக்கம் தமிழனுக்கும் தமிழச்சிக்கும் இருந்தால்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீங்கள் அடிக்கும் கொள்ளைகளை இயல்பாக எடுத்துக் கொள்வார்கள் என்ற உளத்தியல் உத்தியா?

மக்களே, நம்மை ஆள்பவர்கள், – நமக்காக அரசியல் நடத்துகிறோம் என்று சொல்பவர்கள் – ஊழல் கொள்ளையர்களாகக் கொற்றம் நடத்த அனுமதிக்கக் கூடாது. அதற்கு முதல் தேவை மக்களாகிய நாம் கட்சிக்காரர்கள் நம்மை ஊழல் பேர்வழிகள் ஆக்கிட அனுமதிக்கக் கூடாது!

இளையோரே, நம் தமிழ் இனத்தை நாம்தான் மறுவார்ப்பு செய்ய வேண்டும். அதற்கு முதலில் நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம்: 9841949462

Leave a Reply