தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள கழுதூர் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த நிலத்தில் களை எடுக்கும் போது மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
அன்புடையீர்,
இந்தியாவில் ஆண்டுதோறும் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தான் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மற்றொருபுறம் விவசாய பணிகளான தண்ணீர் கட்டுதல், களை எடுத்தல், கால்நடைகளை பராமரிப்பு செய்தல், இயந்திரங்களை பயன்படுத்துதல், தண்ணீர் இறைக்க மின்சாரத்தை பயன்படுத்துதல் ஆகிய செயல்களின்போதும் உயிரிழக்கிறார்கள். உதாரணமாக வெயிலில் வேலை செய்யும்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இறத்தல், பாம்புகள் கடித்து இறத்தல், கால்நடைகள் முட்டி இறத்தல், தென்னை – பனை மரங்கள் ஏறும்போது விபத்து ஏற்பட்டு இறத்தல், இடி – மழை – மின்னல் தாக்கி இறத்தல் என பல்வேறு வகைகளில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
இதுபோன்ற இறப்புகள் சாதாரண விபத்துகளாக காவல்துறையால் பதிவு செய்யப்படுகிறது, இவ்வாறு இறக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருள் ஈட்டுவதற்கும், உழைப்பதற்கும் ஆளின்றி கடுமையான பின்னடைவை சந்தித்து, நிலத்தை விற்றுவிட்டு விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலைமை கடும் துயரமானது.
கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், குவாரி விபத்துகளில் அடிபட்டு இறப்பவர்களுக்கு 3 லட்ச ரூபாயும், நடிகரை சென்றுப்பார்த்து கூட்ட நெரிசலில் இறப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் தமிழ்நாடு அரசின் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
ஆனால் நாட்டு மக்களுக்கு உணவு அளிப்பதற்காக நஷ்டம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் இறக்க நேரிடும்போது மத்திய – மாநில அரசுகள் எவ்வித இழப்பீட்டையும் வழங்குவதில்லை.
இதற்கான நிதியை திரட்டுவதற்காக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபானங்களின் மீதும், விவசாய நில விற்பனை அல்லாத (வணிக) பத்திரப்பதிவுகளின்போதும் ஒரு சதவீத செஸ் வரியை விதித்து அதன் மூலம் வரும் நிதி ஆதாரத்தின் மூலம் கூடுதல் செலவினத்தை சமாளிக்க முடியும்.
எனவே தமிழ்நாடு அரசு அனைத்து வகையான விவசாயப் பணிகளின்போது இறக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும்.
அதன் தொடக்கமாக நேற்று (16.10.2025) கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள கழுதூர் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த நிலத்தில் களை எடுக்கும்போது மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களான பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
—
இப்படிக்கு,
வழக்குரைஞர் ஈசன் முருகசாமி,
நிறுவனர்,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. வடிவேல் சுப்ரமணியம்



