Home>>கவிதை>>தமிழ் ஏரோடு வந்து படைப்புப் பயிர் செய்தார் ஈரோடு தமிழன்பன்!
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கவிதைசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

தமிழ் ஏரோடு வந்து படைப்புப் பயிர் செய்தார் ஈரோடு தமிழன்பன்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்!

கவிஞர், பேராசிரியர், முனைவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் நேற்று (22.11.2025) காலமாகிவிட்டார்கள் என்ற செய்தி எனக்கும் பேரதிர்ச்சியைத் தந்தது. அவருக்கு அகவை 92 என்று நண்பர்கள் கூறி, அதிர்ச்சி அடைய வேண்டாம் என்றார்கள். அதிர்ச்சி அடையாமல், துயரத்தை வெளியிடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

ஈரோடு தமிழன்பன் தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் படித்தவர்; அதன் பிறகு பட்ட மேற்படிப்பு, முனைவர் ஆய்வு முடித்தவர்!

1970 களின் தொடக்கத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதைகளைப் படித்து, கிளர்ச்சி அடையும் போது அவர் என்ன படித்தவர் என்பதெல்லாம் என் கவனத்தில் இல்லை. அவரின் உயிர்த்துடிப்பு மிக்க கவிதைவரிகள்தாம் என்னை ஈர்த்தன.

தோழர் இளவேனில் அவர்கள் கார்க்கி என்ற பெயரில் ஓர் இலக்கிய-இடதுசாரி புரட்சி இதழ் நடத்தினார். 1970 களின் தொடக்கம்! தொழிற்சங்கப் போராட்டங்கள் வீச்சாக நடந்தன. சிம்சன் தொழிலாளர் போராட்டம் மிக எழுச்சியாக நடந்தது. அப்போதே கருணாநிதி முதலைமைச்சர் கடுமையாகத் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கினார்.

இளவேனில் இதழில் சிம்சன் தொழிலாளர் போராட்டத்தையும், மற்ற தொழிலாளர் போராட்டத்தையும் ஆதரித்து சூறாவளிச் சொற்களில் கட்டுரைகள் வந்தன! தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து – கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதை வரிகள் சில நினைவில் இருக்கின்றன. அப்போது அவருடைய புனைபெயர் விடிவெள்ளி

“ஆதிக்க வெள்ளத்தின் அடியில் கிடந்தாலும்
பாதிக்கப் படாதவனே பாஸ்பரசே… கண்விழிப்பாய்!
நாங்கள் தொழிலாளிகள்
வானத்தைக் கீறி வைகறையைப்… பெயர்த்தெடுப்பவர்கள்!”
இப்போதெல்லாம்
பஞ்சதந்திரக் காட்டில்
நரிகளே இல்லை!
அவையெல்லாம் சட்டமன்றத்திற்கும்
நாடாளுமன்றத்திற்கும்
தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டன!
இப்போதெல்லாம் கண்ணபிரான்கள்
துரியோதன்களுக்குத் தேரோட்டப் போய்விட்டார்கள்.
துரியோதனன் கொடுக்கும்
அடிப்படைச் சம்பளமும்
அகவிலைப்படியும் அதிகமாம்!

வெளிநாட்டுக் கவிதை வடிவங்கள் பலவற்றைத் தமிழ்ப் புதுக்கவிதையில் அறிமுகம் செய்தவர் ஈரோடு தமிழன்பன்! சிலி நாட்டின் மா கவிஞர் பாப்லோ நெருடா தமிழன்பனின் செல்லக் கவிஞர்!

ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதைகளைப் படித்து வந்தாலும் அவருடன் நேரடித் தொடர்பில்லாமல் இருந்தது.

சென்னை பெரியார் திடலில் 1990 பிப்ரவரி 25 அன்று “தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு” என்ற முழுநாள் மாநாட்டை எமது அமைப்பு முன்முயற்சி எடுத்து, பொதுத் தன்மையுடன் நடத்தியது. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் எங்களோடு ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களில் தோழமை ஆனவர். இந்தத் தன்னுரிமை மாநாட்டிற்கு அவர் உழைப்பு முக்கியமானது. சுபவீ யும் நானும் சென்னை புதுக்கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஈரோடு தமிழன்பன் அவர்களைப் பார்த்து “தமிழ்த்தேசிய தன்னுரிமை மாநாட்டில் கவிதை பாட அழைத்தோம். மன மகிழ்வோடு ஒப்புதல் தெரிவித்தார்.

மாநாட்டில் அவர் கவிதை மிகமிக எடுப்பாக எழுச்சி ஊட்டியது! தமிழ்த்தேசியத்தை ஆதரித்த கவிதை அது! அப்போது சோவியத் நாட்டிலிருந்து பிரிந்து போக அஜர்பைஜான் குடியரசு போராடியது.

ஈரோடு தமிழன்பன் கவிதை வரிகளில் சில நினைவில் இருக்கின்றன.

“தமிழ்நாட்டிற்குத் தன்னுரிமை தராவிட்டால்
அஜர்பைஜான் நெருப்பு
அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்!”

என்று கவிதையை முடித்தார். ஒரே கைதட்டல்! துக்ளக் ஏடு அம் மாநாடு பற்றி 3 பக்கங்கள் கட்டுரை வெளியிட்டுத் தாக்கியது. அக்கட்டுரையின் தலைப்பு “இலக்கு பிரிவினை! வழி வன்முறை!” என்பதாகும். அதில் ஈரோடு தமிழன்பனின் மேற்கண்ட வரிகளைக் குறிப்பிட்டிருந்தது துக்ளக்! அப்போதைய தி.மு.க. ஆட்சியின் ஆதரவுடன் இம் மாநாடு நடந்ததாக அபாண்டமாகக் கூறியது துக்ளக்!

புதுக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து கொண்டே இந்திய அரசின் தூர்தர்ஷன் தமிழ்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் தமிழன்பன் பணியாற்றினார். துக்ளக் அவரைப் பிரிவினைவாதி என்று சாடியவுடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் பணியில் இருந்த அவரை நீக்கியது. அம்மாநாட்டிற்குப் பிறகு தமிழன்பன் அவர்களுடன் நட்பும் நெருக்கமும் எனக்கு அதிகமானது.

(அம் மாநாட்டில் கவிதை வழங்கிய கவிஞர் அறிவுமதி இந்தியத் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டி எட்டாண்டுகள் வழக்கு நடந்தியது தமிழ்நாடு அரசு. பின்னர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

பிரிவினைத் தடைச்சட்டம் 1967-இன் கீழ் என்னைக் கைது செய்து சென்னை நடுவன் சிறையில் அடைத்தது கருணாநிதி ஆட்சி! பிணையில் வந்து எட்டாண்டுகள் வழக்கு நடத்தி விடுதலை ஆனேன்!)

எவ்வளவோ படைப்புகளை வழங்கி தமிழைச் சமகாலத்தில் வளப்படுத்தினார் ஈரோடு தமிழன்பன்! கரந்தையில் படிக்கும்போது பாவேந்தருடன் ஏற்பட்ட பழக்கதில் பின்னர் அவருடன் நெருக்கம் ஆனார்!

எல்வளவு புகழ்படைத்தாலும் ஆணவம் இல்லாமல் பழகிய பண்பாளர் ஈரோடு தமிழன்பன்! தமிழ் ஏரோடு வந்து படைப்புப் பயிர் செய்தவர் ஈரோடு தமிழன்பன்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.


பெ. மணியரசன்,
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தலைமைச் செயலகம்,

Leave a Reply