சமூக நீதியின் இலக்கணமாக கருதப்படும் இந்த இட ஒதுக்கீடு முறைக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு இதன் பின்னே உள்ளது.
இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உருவான கருத்து. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இட ஒதுக்கீடு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. 1880 களில் பம்பாய் மாகாணத்தில் தோற்றுவிக்கப்பட்ட சர்வசன சங்கம், சென்னை மாகாணத்தில் தோற்றுவிக்கப்பட்ட மகாசன சபை முதலிய சங்கங்கள் இந்தியருக்கு அரசியல் உரிமைகள் வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. ஆங்கிலேய அரசு 1880 ஆம் ஆண்டில் சர் வில்லியன் வில்சன் ஹண்டர் தலைமையில் கல்வி ஆணையம் அமைத்தது. மராட்டியத்தின் ஜோதிராவ் பூலே, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என ஹண்டர் ஆணையத்தை கோரினார்.
1890 இல் மைசூர் சமஸ்தானத்தில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, பார்ப்பனர் அல்லாதார் குரல் எழுப்பினர். அதன் பிண்ணனியில், 1894-95 ஆம் ஆண்டில் அப்போதைய மைசூர் அரசர் “பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பினருக்கும் மைசூர் சமஸ்தான உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு தரும் ஆணையை பிறப்பித்தார். இருப்பினும்,1918 ஆம் ஆண்டு வரை இந்த ஆணை நடைமுறைக்கு வரவில்லை. 1902 ஆம் ஆண்டில், கோலாப்பூர் அரசர் சத்ரபதி சாகு மகாராஜ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதவர்களைக் குறிக்கிறது. கோலாப்பூர் சமஸ்தானம் போலவே மற்ற சமஸ்தானங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கைகளில் இறங்கின.
தமிழ் நாட்டை பொறுத்தவரை ,
சாதி ஒழிப்பு போலவே ,இட ஒதுக்கீட்டை முதன் முறையாக தமிழ் நாட்டில் வலியுறுத்தியதும் அயோத்தி தாச பண்டிதர் அவர்கள் தான்.
1891 ஆம் ஆண்டில் “விகிதாச்சார உரிமை” என்ற சமூகநீதிக் கருத்தை தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் முன்வைத்தார். 1891 டிசம்பர் 1 ஆம் தேதி உதகமண்டலத்தில், அயோத்திதாசர் பண்டிதர் கூட்டிய திராவிட மகாசன மாநாட்டில் போடப்பட்ட முதல் தீர்மானமே, ‘கிராம அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதன் மூலம், அவர்களின் பொருளாதார வாழ்வை உயர்த்துமாறு’ என்று கோருகிற இடஒதுக்கீட்டுத் தீர்மானமாகும். அதன் அடிப்படையில் தொடர்ந்துப் போராடி, இரண்டு இடஒதுக்கீட்டு ஆணைகளையும் பண்டிதர் அயோத்திதாசர் பெற்றார்.
(தாழ்த்தப்பட்ட மக்களுக் கான பிரதிநிதித்துவ உரிமையையும் ,
ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்டபூர்வமான சம உரிமை)
1921 ஆம் ஆண்டில், நீதிக்கட்சியைச் சார்ந்த சுப்பாராயலு ரெட்டியார் தலைமையிலான மெட்ராஸ் மாகாண அரசு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44%, பார்ப்பனர்கள், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு தலா 16%, தலித் மக்களுக்கு 8% அரசு வேலைகளை ஒதுக்கி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
சமூக நீதியின் ஆணிவேரான வகுப்புவாரி இடஒதுக்கீட்டுச் சட்டமானது முதல் மசோதாவாக “முதல் கம்யூனல் G.O (MRO Public Ordinary Service GO 613)” 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ல் பனகல் அரசர் பனங்கன்டி ராமராயநிங்கார் ஆட்சியில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
பின் 7 ஆண்டுகள் கழித்து 1928 ஆகஸ்ட் 14 ஆம் நாள் நீதிக் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்த சுயேச்சை முதலமைச்சர் டாக்டர் s. சுப்பராயன் தலைமையிலான அரசால் முத்தையா முதலியார் அவர்கள் முயற்சியால் Communal G.O என்றழைப்படுகிற மேற்சொன்ன வகுப்புவாரி பிரதிநிதித்துவம்(G. O NO 1129) செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து 1950 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த இந்த அரசாணை வேலைவாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும் பயன்படுத்தப்பட்டது
பிரிட்டிஷ் அடிமை இந்தியாவில் நீதிக்கட்சியின் ஆட்சியில் தொடங்கிய “வகுப்புவாரி உரிமையிலான இடஒதுக்கீடு” இந்திய துணைக்கண்டம் குடியரசான நிலையிலும் இந்த சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் தொடர்ந்து வந்தது.
•1947 ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முதல்வராக அமர்ந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், 1928-ஆம் ஆண்டுமுதல் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைப் பின்வருமாறு திருத்தி, ‘மொத்த உத்தியோகம் 14 என்றால், பிராமணருக்கு 2, கிறிஸ்துவருக்கு 1, முஸ்லிமுக்கு 1, ஆதிதிராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, மற்ற பிராமணர் அல்லாதாருக்கு 6 என்ற வீதத்தில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
• 24.03.1947 அன்று அரசு பிறப்பித்த அந்த ஆணை மூலமாக, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று 12 என்று கணக்கிடப்பட்ட பணியிடங்களை 14-ஆக உயர்த்தி, உயர்த்தப்பட்ட 2 பணியிடங்களும் பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு ஒதுக்கீடு செய்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கிய அரசு என்ற பெருமையை சென்னை மாகாண அரசுதான் அடைந்தது.
• “வகுப்புவாரி பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டுச் சட்டம்” மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்குமென கூறி காந்தியடிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வெள்ளைக்கார ஆட்சியிலும் தொடர்ந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் விடுதலைப் பெற்ற இந்தியாவில் தான் முதல்முறையாக தடை செய்யப்பட்டது. இந்திய மத்திய அரசுப் பணிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்தது இந்திய அரசு !
• இந்திய துணைக்கண்டத்திற்கான அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க அண்ணல் அம்பேத்கார் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியலமைப்புக் குழுவில் நிறைந்திருந்த பிராமண அழுத்தத்தின் காரணமாக “அரசியலமைப்பின் 16(4) வழி வேலை வாய்ப்புகளில் “மட்டும்” இட ஒதுக்கீடு” என்ற சட்டத்தை அதில் கொண்டு வரப்பட்டது.
அத்தோடு சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்துவந்த “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” (இடஒதுக்கீட்டு முறை) கல்வித்துறையில் பின்பற்றப்படுவதால் தனக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த செண்பகம் துரைராசன் என்பவரும் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என அதே பிராமண சமுதாயத்தை சார்ந்த மாணவர் சி.ஆர்.சீனிவாசன் என்பவரும் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்திய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார் என்பவர் தாமாகவே முன்வந்து இவ்வழக்கிற்காக வாதாடினார். (செண்பகம் துரைராசன் மருத்துவக் கல்லூரிக்கே விண்ணப்பிக்காமல் வழக்கை தொடர்ந்தார் என்பது தனிக் கதை)
இந்த வழக்கின் முழுத் தீர்ப்பின் விவரம்:
• இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15வது விதி மற்றும் 29(2)வது விதி என சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, “வகுப்புவாரி உரிமைச் சட்டம் ஆணை” சமத்துவத்திற்கு எதிரானது என்கிற வாதத்தை ஏற்று, விண்ணப்பிக்கிற வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமைச் சட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு,‘வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது’ – என இந்திய ஒன்றிய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
சென்னை மாகாணமே கொதித்தெழுந்தது.
• உயர்சாதியினரால் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் சமுதாயத்தினரும் கல்வி-வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் 1928 முதல் 1950 வரை நடைமுறையிலிருந்த சட்டம் செல்லாது என சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அன்றைய சென்னை மாகாணமே கொதித்தெழுந்தது – ஈ வே ரா தலைமையிலான தி.க, அண்ணா தலைமையிலான திமுக தனித்தனியே போராட்டக் களம் கண்டன. கட்சி வேறுபாடுகளின்றி மக்கள் அனைவரும் ஈ வே ரா க்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு பிரிவினரும்கூட (காமராசர் உட்பட)இந்த நியாயமான கோரிக்கைக்கு மறைமுகமான நல்லாதரவு காட்டினர்.
• எல்லோரின் இலக்கும் ஒன்றாகவே இருந்ததால், போராட்டம் வெற்றிப்பாதையை நோக்கி வீர நடையைப்போட்டது. எழுந்த எழுச்சியின் தாக்கம் குறித்து டெல்லியில் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பெருந்தலைவர் காமராசர் எடுத்துக் கூறினார். இதனையடுத்து, வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமை பாதுகாக்கப்படும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 2.6.1951 அன்று இந்திய அரசியல் சட்டத்தில் 15வது விதியின் உட்பிரிவாகச் சேர்த்து முதல் திருத்தம் செய்யப்பட்டது.
• இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15வது விதியின் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, “குடிமக்கள் சமுகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைசாதி மக்களுக்கும் அவர்களின் முன்னேற்றங்கருதி, மாகாண (மாநில) அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதாகச் செய்யும் எந்த தனி ஏற்பாட்டையும் இந்த 15வது விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-ன் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது ” என்ற திருத்தம் செய்யப்பட்டது. .
அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியல் அமைப்புச் சட்டத்தில், அவசியமான இந்த முதல் திருத்தம் அவர் வாழ்ந்த காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டு, 18.6.1951 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று நடைமுறை செய்யப்பட்டது. இந்த வரலாறு தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது.
பின் 1951ல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பொதுப்பட்டியல் – 59%, பிற்படுத்தப்பட்டோர் – 25%, தாழ்த்தப்பட்டோர் – 16% என்று இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இது நீண்ட காலம் பின்பற்றப் பட்டது.1967 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் அண்ணாதுரை முதல்வராக இருக்கும் வரை பின்பற்றப்பட்டது. பின் 1969 ல் அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி தமிழக முதல்வர் ஆனார்.அப்போது,
ஈ வே ரா கருணாநிதியிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.“50 சதவீதத்துக்கு மேல் தானே இட ஒதுக்கீடு போகக் கூடாது; 49 சதவீத அளவுக்கு உயர்த்துங்கள்” என்று ஆலோசனை கூறினார். அதேபோல் கருணாநிதி இடஒதுக்கீட்டை 49 சதவீதமாக உயர்த்தினார்.
முன்னாள் சென்னை மாகாண முதல்வர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பட்டியல் – 59%, பிற்படுத்தப்பட்டோர் – 25%, தாழ்த்தப்பட்டோர் – 16% என்று இருந்ததை 1971 ஆம் ஆண்டில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தந்த பரிந்துரையின்படி பொதுப்பட்டியலை 51% என குறைத்து, பிற்படுத்தப்பட்டோருக்கு (25%+6%) 31% என்றும் தாழ்த்தப்பட்டோருக்கு (17%+1%) 18% என்றும் உயர்த்தி புதிய இட ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலமாக இட ஒதுக்கீட்டை 49% ஆக்கினார் கருணாநிதி. ஆனால் மு.கருணாநிதி அவர்களின் ஆட்சியில் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சாதிகளில் முப்பது விழுக்காட்டினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து இணைத்து போடப்பட்ட ஓர் ஆணை, இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு அறமாக அமைந்ததையே கேலிக்குள்ளாக்கி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அநீதி இழைத்துவிட்டதென விமர்சிக்கப்பட்டது.
பின் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீட்டை 50% வரை உயர்த்தி , பட்டியல் பிரிவினர் 18% சேர்த்து 68% மாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை எம்.ஜி.ஆர் அவர்களையே சாரும். இதற்கு வெ. ஆனைமுத்து பெரியார் அவர்களின் போராட்டங்களின் பங்களிப்பு பெருமளவு உதவின.
அதே நேரத்தில் 1979-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் ₹9,000 ஆண்டு வருமான வரம்பை அறிமுகப்படுத்தினார், ஆனால் வலுவான அரசியல் எதிர்ப்பின் காரணமாக 1980-ல் திரும்பப் பெறப்பட்டது.
பின் 1987 ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களின் கடும் போராட்டத்தால், 1989 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அவர்கள் கிட்ட தட்ட 68 க்கும் மேற்பட்ட பிற்பட்ட சாதிகளை மிகவும் பிற்பட்ட சாதிகளாக அறிவித்து அவற்றிற்கென்று 20% இட ஒதுக்கீட்டை அறிவித்தார். அதாவது அதுவரை 50% பிற்பட்ட வகுப்பிற்கு என இருந்த இட ஒதுக்கீட்டை இரண்டாகப் பிரித்து 30% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அது இன்று வரை நடைமுறையில் உள்ளது.அதே நேரத்தில் பழங்குடியினருக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடும் அளிக்கப்பட்டது. இதையடுத்து மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதமாக உயர்ந்தது.
அந்த காலகட்டத்தில், இடஒதுக்கீட்டு தொடர்பான உச்சவரம்பு ஏதும் நடைமுறையில் இல்லை. இதே தருணத்தில் பிரதமராக இருந்த வி.பி. சிங் வெ. ஆனைமுத்து பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தினால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு எனஒதுக்கீடு செய்ததும்,
சில மாநிலங்கள் தவிர்த்து நாடு முழுவதும் கலவரங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் நடந்தன. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.
1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.
ஆனால் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மற்றும் திராவிடர் கழகம் இவர்களின் பெரும் முயற்சியால் 1994 ஜூலை 9 ல் 69 % இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஒப்புதல் வழங்கினார்.
இருந்தபோதும் இந்தச் சட்டம்குறித்து ஆராயும் உரிமை நீதிமன்றங்களுக்கு உண்டு என்பதால், இதனைபிரிவு 31 (பி)ன்கீழ், அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ்கொண்டுவர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து இந்தச் சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற 1994 ஆகஸ்ட் 13ஆம் தேதி மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் 69 சதவீதஇட ஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாதுஎன வழக்குத் தொடரப்பட்டது. அதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 50 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டுமென 1994 நவம்பர் 17ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புஏற்பட்டது.
இதற்குப் பிறகு தொடர்ந்தவழக்கில், 69 சதவீத இடங்களை உருவாக்குவதால் முற்பட்ட வகுப்பினர் இழக்கும் இடங்களுக்கு ஏதுவாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டுமென 1996ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதிதீர்ப்பளித்தது.
இதற்குப் பிறகு தொடர்ந்து 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குஎதிராக வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
ஆக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இட ஒதுக்கீட்டுக்கான சமூக நீதியை பெற்றுத்தந்ததன் முழுப்பெருமையையும் எந்த ஒரு தனி மனிதனும், தனிப்பட்ட ஒரு கட்சியும் எடுத்துக் கொள்வது நியாயமன்று.
இது நூறாண்டுகால கூட்டு முயற்சி என எடுத்துக் கொள்ளலாம். அயோத்திதாச பண்டிதர், நீதிக் கட்சி, டாக்டர் சுப்பராயன், திராவிடர் கழகம், ஈ வெ ராமசாமி ,காங்கிரஸ், திமுக அதிமுக என இதில் அனைத்தும் அடங்கும்..
-மன்னை செந்தில் பக்கிரிசாமி.


