மன்னார்குடி, அக்டோபர் 5: ஆரம்ப காலத்திலிருந்து “மன்னார்குடி” அரசியல் களத்தில் பிரசித்தி பெற்ற வலுவான தொகுதி. இங்கு எத்தனையோ பெரிய தலைவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து மன்னையின் அடையாளமாக இன்றளவும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய மன்னார்குடி தொகுதி மக்கள் பலரும் அறியாத மன்னையின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் ஒருவரைப் பற்றிய கட்டுரை இது.
அவர் லெட்சுமி நாராயணபுரம் கிராமத்தில் 20/09/1923 அன்று திரு. லெட்சுமணன், திருமதி. காவேரி தம்பதியருக்கு மகளாக பிறந்த உறுதியுள்ளம் படைத்த மாமனிதர் இலட்சுமணன் ராமச்சந்திரன் என்னும் இல. ரா அவர்கள்.
பள்ளியில் படிக்கும் போதே ஈ.வே. இராமசாமி அவர்கள் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைந்து சுயமரியாதை பரப்புரைகளில் ஈடுபட்டார். பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழுநேர திராவிடர் கழக பணியில் ஈடுபட்டார்.
திராவிடர் கழகத்தில் இருந்து சி.என் அண்ணாத்துரை தலைமையில் திமுக உருவான போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மிக பெரிய களப்பணியாற்றி திமுகவை இப்பகுதியில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதன்மையானவர்களில் இவரும் ஒருவராவார்.
சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு, கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. பெரும்பாலான கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி கொண்டே கட்சிப் பணியாற்றினர்கள்.
அந்தக் காலகட்டத்தில் 1952ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து இலரா அவர்கள் தேர்தல் பணியாற்றினார். இதனால் திமுக அவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கியது.
1953ம் ஆண்டு மன்னார்குடி நகர்மன்ற தேர்தலில் ஐக்கிய முன்னணி வேட்பாளராக 2வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தீவிர அரசியலில் இருந்த காரணத்தால் அவர் பணியாற்றிய கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூலகத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகள் சாமானிய மக்களுக்கு ஆதரவாக மக்களை வர்க்கமாக திரட்டி பண்ணையார்களையும் மிட்டா மிராசுகளையும் கதிகலங்க செய்து கொண்டு இருந்தனர். 1952ம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குன்னியூர் சாம்பசிவ ஐயர், இராவ்பகதூர் நெடும்பலம் சாமியப்ப முதலியார் போன்ற பெரும் பண்ணையார்களையே தோற்கடித்து பெரும்பாலான தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மாவட்டம் முழுவதும் செங்கொடி பட்டொளி வீசி பறக்க துவங்கியது.
இந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நெருக்கமாக அவர் இருந்தாலும் 1953 ஆண்டு தான் வெளிப்படையாக அதிகாரபூர்வமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பின் விவசாய சங்கத்தில் புயலென புறப்பட்டு பணியாற்றினார், பிறகு விவசாய சங்க தாலுக்கா செயலாளரானார். 1958 ஆண்டு நகர்மன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக அதே 2வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மன்னார்குடி தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அமைய முக்கிய காரண கர்த்தாவாக விளங்கினார். அந்த அளவுக்கு பண்ணையார்களின் கொத்தடிமைத்தனத்துக்கு எதிராக விவசாய தொழிலாளர்களுக்கு அவர்கள் உரிமைகளை உணர்த்தி, தன்மான, வீர உணர்வூட்டி, அவர்களோடு உறுதியாக நின்று, வாழ்நாள் முழுக்கப் போராடியவர்.
குத்தகை விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாட்டு வழக்குரைஞராக நீதிமன்றத்தில் வாதாடி நியாயம் பெற்றுக் கொடுத்தவர். (சட்டப்படிப்பு படிக்காமலே அந்த காலத்தில் நீதிமன்றத்தில் வாதாட இது போன்ற ஒரு வாய்ப்பு இருந்தது).
குத்தகை விவசாயிகள் பண்ணையாளர்களுக்கு அதிக நெல் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்ட போது, காவல்துறையின் துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், தன் தலைமையில் குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களே நிலத்தில் அறுவடை செய்து நாயமான நெல்லை பண்ணையார்களுக்கு அளித்து தமக்கு உரியதை குத்தகை விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பெற வழிவகுத்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும், சாமானிய மக்களுக்காகவும் விவசாய தொழிலாளர்களுக்காகவும் அரும்பாடுபட்ட நிலையில் 1959ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பைங்காட்டூர் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக சங்கப் பணி நிமித்தம் வாடகை காரில் சென்று வரும் வழியில் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில் மன்னார்குடி அருகே இரட்டைப்புலி என்னும் இடத்தில் கார் விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடியுடன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். சிகிச்சை பலனின்றி அக்டோபர் 5ம் தேதி உயிரிழந்தார்.
தன் சின்னஞ்சிறு பிள்ளைகளை அணைத்தபடி தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஒரு மரத்தடியில் திரு.இலரா அவர்களின் மனைவி பட்டம்மாள் அமர்ந்திருக்க, மருத்துவமனையின் உள்ளே, உலகத் தொழிலாளர்களே! ஒன்று படுங்கள்!! புரட்சி ஓங்குக!! என்று முழங்கியபடி தன் இன்னுயிரைத் துறந்தார் தோழர் இலரா.
அவரது இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். இதுவரை மன்னார்குடியில் எந்த ஒரு இறப்புக்கும் இவ்வளவு பேர் கூடியது இல்லை என்று சொல்லுமளவிற்கு விவசாயத் தொழிலாளர்கள் அவர் இறப்பை தாங்க முடியாமல் செல்லும் இடமெல்லாம் கதறி அழுதார்கள்.
அவர் இறப்புக்கு பின், அவரது புகைப்படம் இல்லாத குடிசைகளே அந்த காலத்தில் மன்னார்குடி தொகுதியில் இல்லை என்று சொல்லலாம். மேலும் 1960களில் மன்னைத் தொகுதியில் பிறந்த குழந்தைகளுக்கு அவர் நினைவாக இலரா என்று பலருக்கும் பெயர் சூட்டப்பட்டன. மேலும் அவர் இறப்பிற்குப் பிறகு விவசாயத் தொழிலாளர்கள் வயலில் வேலை செய்யும் பொழுது அவர் வரலாற்றை பாடலாக பாடிய வரலாறும் உண்டு.
அவர் இறந்து 66 ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு மனிதனின் உடலும், உயிரும் அழிந்தாலும் அவனது கொள்கை கோட்பாடுகள் பிறரால் முன்னெடுக்கப்படும் போது, அச்செயல்பாடுகளில் அம்மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
ஆம்! அன்று தஞ்சை மாவட்ட பண்ணையார்களின் கொடுமைகளிலிருந்து உழவுத் தொழிலாளர்களையும், குத்தகை உழவர்களையும் காக்க தோழர் இலரா போராடி உயிரை விட்டார். இன்று தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை, மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடிக்கும் நவீன பண்ணையார்களிடமிருந்து தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க போராடும் செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகளில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக, நலனுக்காக, தன்னலமற்று தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் இலரா இறந்த பொழுது, மூத்த மகன் இலரா மோகன் அவர்களுக்கு வயது 7 மற்றும் அவரது இளைய மகனான நம் மன்னையின் வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஐயா. மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கு வயது 2.
புகழ் வணக்கம்!! மன்னையின் மாணிக்கமே!!
–
தகவல் உதவி:
ஐயா. இலரா. மோகன்,
தோழர், கா.லெனின் பாபு,
மரு. திரு. பாரதிச் செல்வன்.



