தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களின் வாக்குரிமையைப் பறித்து, வடமாநிலத்தவர்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பாசிச ஒன்றிய அரசின் சூழ்ச்சியான, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!
இந்தியத் தேர்தல் ஆணையம் , ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு, நாடு முழுவதும் அவசர கதியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்வது, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை வேர்களைச் சிதைக்கும் பாசிசப் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அப்பட்டமான சூழ்ச்சியே ஆகும். இந்த சதித்திட்டம், தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மையைக் குறிவைத்து, அதன் எதிர்காலத்தைத் தனது எதேச்சதிகாரத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR இன் இரண்டாம் கட்டப் பணி அவசரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான நோக்கம், வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில், பாசிச பாஜகவை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் சமூகங்களான சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மக்களின் வாக்குகளைப் பறிப்பதே இதன் முக்கிய நோக்கம்.
வாக்காளர்களின் பதிவுகளை 20 ஆண்டுகள் பழமையான 2002-2004ஆம் ஆண்டு பட்டியலுடன் ஒப்பிடுமாறு வற்புறுத்துவது, மற்றும் வீட்டுப் பத்திரம், பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற அரிய ஆவணங்களைக் கேட்டு மக்களை அலைக்கழிப்பது ஆகியவை, மண்ணின் மைந்தர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தானாகவே வெளியேற்றும் பாசிச வழிமுறை ஆகும்.
தமிழ்நாட்டின் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரையிலும், தொழில்துறைப் பகுதிகளிலும் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள, ஆனால் தமிழ்நாட்டின் சமூக அரசியல் அமைப்பில் ஆழமாக வேரூன்றாத வடமாநிலத்தவர்களைப் பெரிய அளவில் வாக்காளர்களாகச் சேர்ப்பதன் மூலம், பாஜக தனக்குச் சாதகமான ஒரு வாக்கு வங்கியை உருவாக்க முயற்சிக்கிறது.
போதுமான ஆவணங்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலத்தவர்களை, பாஜகவின் செல்வாக்கைப் பயன்படுத்தி எளிதாக வாக்காளர்களாகச் சேர்ப்பதற்கும், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பூர்வகுடிகளை நீக்குவதற்கும் தேர்தல் ஆணையம் துணைபோகிறதா ? என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. இதன்மூலம், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை வடமாநிலத்தவர்களின் ஆதரவு மூலம் கைப்பற்றவும், தமிழ்நாட்டின் தனித்தன்மையை சிதைக்கவும் பாசிச பாஜக துடிப்பதுத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அவசரகதியில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதும், ஜனநாயக அமைப்புகள் மீது பாஜக நடத்தும் அத்துமீறலை உறுதி செய்கிறது.
இந்த SIR நடவடிக்கையை, வாக்காளர்களைக் குடிமக்கள் அல்லாதோர் (Non-citizens) போல நடத்த முயற்சிக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆகியவற்றின் நீட்சியாகவே பார்க்கிறோம்.
இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மைக்கும், மண்ணின் மைந்தர்களின் வாக்குரிமைக்கும் விடுக்கப்பட்டிருக்கும் நேரடி அச்சுறுத்தல் ஆகும். அவசரகதியில் நடத்தப்படும் இந்தச் சீர்திருத்தம், திட்டமிட்ட நீக்கங்கள் மற்றும் பாசிசத் தலையீடுகளுக்கு வழிவகுத்து, தமிழகத்தின் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும்.
இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழ்நாட்டையும், ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்தையும் காக்க, அவசரகதியில் நடத்தப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்ற பெயரிலான பாசிச பாஜகவின் சூழ்ச்சியை, உடனடியாகத் தடுத்து நிறுத்திட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் பாகுபாடின்றி ஒன்று திரள வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
—
திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.



