தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள்?
சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர், சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி,
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி, கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை
என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது.
பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும்?
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
—
திரு. டிடிவி. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.



