நீண்ட நாட்களாக கன்னியாகுமரியில் மலைகளை குடைந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் கன்னியாகுமரியில் இன்று (10/10/2021) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதைப்பற்றிய ஒரு பார்வை…
* தமிழ்நாட்டின் மிக முக்கிய இயற்கை வளமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளாகும், அவற்றை அழிப்பதென்பது தமிழ்நாட்டை வாழ தகுதியற்ற நிலப்பரப்பாக மாற்றிவிடும்.
* இந்த பூமியை நாம் நம் முன்னோர்களிடமிருந்து பெறவில்லை; நாம் அதை நம் வருங்கால தலைமுறையிடமிருந்து கடனாக வாங்கியுள்ளோம். எனவே, இதனை பாதுகாப்பான நிலையில் விட்டுச்செல்ல வேண்டியது நம் கடமையாகும்.
*பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. அவற்றை அழிப்பது என்பது வெறும் வளக்கொள்ளையைத் தாண்டி பெரும் பல்லுயிர் அழிப்பாகும்.
* அணுஉலை அழிவுதிட்டடம் தமிழ்நாட்டிற்கு, மீத்தேன் அழிவுத்திட்டம் தமிழ்நாட்டிற்கு, அதானி துறைமுக அழிவுத்திட்டம் தமிழ்நாட்டிற்கு, ஆனால் என் இயற்கை வளங்கள் மட்டும் எனக்கில்லை! இதுவே நம் அவலநிலை.
* அந்தந்த மாநிலத்தின் வளங்கள் அந்தந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் நிலை வர வேண்டும். இயற்கை வளங்கள் இயற்கையினிடத்திலேயே அமைவதும் வேண்டும்.
*மீட்டுருவாக்கம் செய்யமுடியாத, இயற்கை முக்கியத்துவம்வாய்ந்த வளங்கள் அழிக்கப்படுவதை ஒருபோதும் இனி சகித்துக்கொண்டிருக்க முடியாது.
*சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக கேரளாவில் குவாரிகளுக்கான அனுமதி குறைவாக வழங்கப்படுகிறது. அதே சுற்றுச்சூழல் பாதுகாப்பை நாமும் பின்பற்ற நினைப்பது பிழையா?
* வளமும் வளர்ச்சியும் கேரளாவுக்கு, கழிவும் அழிவும் தமிழ்நாட்டிற்கா?
* இயற்கை அழகையும், வளங்களையும் கேரளா தன்னகத்தே வைத்துக்கொண்டு, மருத்துவக்கழிவுகளுக்கும் வளச்சுரண்டல்களுக்கும் தமிழ்நாட்டை சீரழிப்பது எந்த விதத்தில் நியாயம்?
* சிறு சிறு குன்றுகளை விதிகளுக்கு புறம்பாக குடைந்து, கல்குவாரி என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்தவர்கள், தற்போது மேற்கு தொடர்ச்சி மலையிலேயே நேரடியாக கை வைத்துவிட்டார்கள். இதனை உடனடியாக தடுத்திட வேண்டும்.
*பாறைகள் தேவைக்குறித்து கேரள அரசு வைக்கும் கோரிக்கையை எந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது.
*கேரளாவில் இல்லாத மலைப்பாறைகளா தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. தன்னுடைய வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்கிருக்கும் அதே அக்கரைதான் எங்களுக்கும் எங்கள் மண்மீது உள்ளது.
*நாள் ஒன்றுக்கு 10 லட்சம் டன் பாறைகள் மலைகளில் இருந்து தகர்க்கப்பட்டு விழிஞ்சம் துறைமுகத்திற்கு அனுப்ப படுகிறது.இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 10 வருடங்களில் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் கன்னியாகுமரிக்கும் உள்ள தொடர்பே அறுபடும்.
*மலைகளை குடைவதையே தடுக்க வேண்டும் என்கிறோம், ஆனால் அவற்றை விதிகளுக்கு அதிகமாகவும் கடத்தும்போது உடனடியாக அதிகாரிகள் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*ஒரு மாநிலத்தின் இயற்கை வளத்தைவிட, அதனால் பாதிக்கப்படக்கூடிய வாழ்வாதரத்தைவிட கட்டுமானங்களும், துறைமுகங்களும் அவசியமா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
* மண்ணின் வளங்களை அழித்துவிட்டு, மக்கள் வாழ்வதற்கு இயலாத நிலைக்கு பூமித்தாயை சீரழித்துவிட்டு, வெறும் வளர்ச்சித் திட்டங்களையும் கட்டுமானங்களையும் வைத்து என்ன செய்யப்போகிறோம்.
*இயற்கை வளங்களை அழித்துவிட்டு நாம் நம் எதிர்கால தலைமுறையினருக்கு சாலைகளையும், கட்டிடங்களையும், துறைமுகங்களையும் தான் விட்டு செல்ல போகிறோமா!
* ஆண்டவர்களும், ஆள்பவர்களும் தமிழ்நாட்டின் கனிமவளக் கொள்ளை எனும்போது மட்டும் அதிகாரத்தின் குரலாகவே இருக்கின்றனர், சாமானியர்களை பொருட்படுத்துவதில்லை.
* மண்ணின் மீதும் மக்களின் மீதும் அக்கரைக்கொண்டவர்களின் ஆட்சியமையாத வரை கனிமவளக் கொள்ளைகள் தொடர்ந்து நடந்த வண்ணம்தான் இருக்கும்.
*கனிமவளங்கள் கடத்தப்படுவதை நாம் தமிழர் கட்சியினரே நேரடியாக பிடிக்கும் அளவுக்கு அரசு அதிகாரிகள் செயல்படாமல் இருக்கிறார்கள். இந்த மெத்தனப் போக்கினை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
*தேர்தலுக்கு முன் வளக்கொள்ளையை எதிர்த்து பேசிய திமுக இன்று அதனை அனுமதிக்கிறது, அடுத்தநிலையில் இருந்து இதனை எதிர்க்க வேண்டிய அதிமுக அமைதியாக இருக்கிறது. இரண்டு கட்சிகளுமே தமிழ்நாட்டின் வளங்களை காக்கப்போவது இல்லை.
*குமரி மாவட்ட கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லையென அமைச்சர் மனோதங்கராஜும், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை எடுத்து செல்வதை தடுக்க சட்டத்தில் இடமில்லையென அமைச்சர் துரைமுருகனும் முரணாக பதிலளிப்பதில் எது உண்மை?
* பாறைகளை வெட்டவேக்கூடாது, அதனைத் தடுங்கள் என்று கோரிக்கை விடுக்கும்போது, வெட்டி வாகனங்களில் ஏற்றிச்செல்லும்போது அவற்றைத் தடுக்க முடியாதென பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திசைதிருப்புவதன் தேவை என்ன?
*சட்டத்தைக் காரணம் காட்டி இயற்கை வளங்கள் கொள்ளைப்போவதை ஆட்சியாளர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்களானால் சட்டமியற்றும் ஆட்சியாளர்களாக அவர்கள் இருந்து என்ன பயன்.
*வளச்சுரண்டல் என்று வந்துவிட்டால் ஆட்சியாளர்களின் அதிகாரம் அடங்கிப்போகும், ஆட்சியிலிருந்தவர்களின் குரல்கள் அமைதியாகும், மண்ணுக்கானவர்கள் மட்டும் போராட்டக்களத்தில் மக்களோடு நிற்பார்கள்.
*நாம் தமிழர் கட்சி மட்டும் இந்த விடயத்தை பேசுபொருளாக்கவில்லையென்றால் அதிகார வர்க்கத்தினர் வளக்கொள்ளையில் இலாபமீட்டி இயற்கையை மொத்தமாய் சீரழித்திருப்பார்கள்.
*கனிமவள முறைப்படுத்துதலில் தனக்கிருக்கும் அதிகாரத்திற்கு உட்பட்டு முதற்கட்டமாக குமரி மலைகள் உடைக்கப்பட்டு கடத்தப்படுவதை சட்டமியற்றி தடுக்க வேண்டும்.
—
கட்டுரை,
திரு. தனபால்.


