Home>>செய்திகள்>>வடசென்னையில் பெருமழை பாதிப்பு. துயர் துடைப்புப் பணியில் பேரியக்கம்!
செய்திகள்தமிழ்நாடு

வடசென்னையில் பெருமழை பாதிப்பு. துயர் துடைப்புப் பணியில் பேரியக்கம்!

வடசென்னையில், பெருமழையால் நீர் சூழந்துள்ள புளியந்தோப்பு பகுதி குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் பெய்த பெருமழையால் பெரும்பாலான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ள நிலையில், உழைக்கும் மக்கள் பெரும்பகுதி வாழும் வடசென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால், அச்சமூட்டும் நிலையில் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி – 77ஆவது வார்டில் வரும், புளியந்தோப்பு ஒன்றாம் தெரு தொடங்கி, ராஜா தோட்டம் பின்புறம், காவாய்மேடு, குருசாமி நகர் முதல் தெரு என இவ்வாறு பல தெருக்களின் வீடுகளில், இடுப்பளவு வரை தண்ணீர் வந்த நிலையில், பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளின் மாடிகளிலும், உறவினர் வீடுகளிலும் வசிக்கின்றனர். நீர் சூழ்ந்த வீடுகளில் உள்ள முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். இத்தெருக்களின் வழியெங்கும் சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து ஓடிக் கொண்டுள்ளது.

மார்வாடி, குசராத்தி போன்ற வடவர்களெல்லாம் இதே வடசென்னையில் வளமாய் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்க, சொந்த மண்ணின் உரிமைக்காரர்களான தமிழர்கள் தங்களுக்கென சில அடி நிலம்கூட இல்லாமல், சேற்றிலும் சகதியிலும் உழன்று வருவது வேதனைக் காட்சிகளாக நெஞ்சைத் தைத்தன.

புளியந்தோப்பு பகுதியில் இதுபோல் பல தெருக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் நேற்று (10.11.2021) பிற்பகல் அங்கு சென்று நேரில் பார்வையிட்டனர். புளியந்தோப்பு பகுதி மேம்பாட்டுக்கு தொடர்ந்து செயலாற்றி வரும் சமூக செயல்பாட்டாளர் தோழர் ஜீவரத்தினம் மற்றும் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை நடத்தி வரும் அவரது இணையர் திருமதி. சுமித்ரா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், மண்ணடி செயலாளர் தோழர் நாகராசு, தானி ஓட்டுநர் தோழர் செந்தில் ஆகியோர் அப்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், மக்களுக்கு கொட்டும் மழையிலும் வீடு வீடாகச் சென்று பிரெட், நாப்கின் போன்ற துயர் துடைப்புப் பொருட்களை வழங்கினர்.

தமிழ்நாடு அரசு, இதுபோன்ற பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்தி, அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தருவதுடன், தொடர்ந்து மழைக்காலங்களில் நீர் சூழ்ந்து பாதிக்கப்படும் இப்பகுதிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் மழை நீர் வடிகால் வசதியைச் செய்துத் தர வேண்டும். இப்பகுதி குடியிருப்புகளில் தேங்கும் குப்பைகளை சுகாதாரமான முறையில் அகற்றி தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை வெள்ளத்தைப் பார்வையிட வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதுபோன்ற பகுதிகளுக்கு வருகை தந்து அம்மக்கள் நாள்தோறும் சாக்கடையிலும் சகதியிலும் சுழலுவதை நேரில் கண்ணுற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சரை சுற்றியே பணியாற்றும் அதிகாரிகள், இதுபோன்று கவனத்திற்கு வராத பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உதவ வேண்டும்.

ஒட்டுமொத்தமாக சென்னையை மழைவெள்ளத்திலிருந்து பாதுகாக்க – முறையான நகரத் திட்டமிடலும், நீர்நிலைகளைப் புதுப்பித்து பழமை மாறாமல் பாதுகாத்து முறைப்படுத்த வேண்டியதும் அவசியமானதாகும்! தமிழ்நாடு அரசு, இத்திசையில் விரைந்து செயல்படவில்லையெனில், சென்னை பெரும் அழிவுக்குள்ளாகும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் துயர் துடைப்புப் பணிக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் 9841949462, 9840848594 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply