Home>>கல்வி>>போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் பிணையில் விடுவிப்பு!
கல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதி

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் பிணையில் விடுவிப்பு!

பிணையை ரத்து செய்து இவ்வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றிடவும்!!

கே. பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க பெண்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யவும்!!
தமிழக டிஜிபியிடம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் கடிதம்!!

திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் தன் செல்வாக்கை பயன்படுத்தி பிணையில் விடுவித்ததை எதிர்த்தும், இந்த பிணையை ரத்து செய்து சட்டப்படியான மேல்முறையீடு நடவடிக்கைகள் செய்யவும், இவ்வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும்;

இக்கோரிக்கைகளுக்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே. பாலபாரதி, மாதர் சங்க தோழர்கள் உள்ளிட்டு 25 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11.12.2021) தமிழக டி.ஜி.பி. அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டு கடிதம் வழங்கினார்.

இக்கடிதத்தை பெற்றுக் கொண்ட தமிழக டி.ஜி.பி. அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜோதி முருகன் பிணையில் விடுவிடுக்கப்பட்டதை எதிர்த்து சட்டப்படியான மேல்முறையீடு செய்யப்படும் என்றும், கே. பாலபாரதி உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் ரத்து செய்வது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

11.12.2021

பெறுநர்
உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,
தமிழ்நாடு காவல்துறை,
மயிலாப்பூர்,
சென்னை – 600 004.

மதிப்புக்குரிய காவல்துறை இயக்குனர் அவர்களுக்கு, வணக்கம்.

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் அனுதினமும் தொடர்ந்து கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சமூக அமைப்புகளும், தமிழக அரசும், காவல்துறையும் இவைகளைத் தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் இக்கொடுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் ஏராளமான மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்கிற செய்தியின் பின்னணியில், 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. நர்சிங் கல்லூரி மாணவிகள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு நீதி கிடைக்க அரசு நிச்சயம் தலையிடும் என்று கூறியது அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த சூழலில் காவல்துறை அவரை கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் போக்சோ பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் விடுவிப்பது எளிதாக நடந்து விடக்கூடாது என்கிற அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பித்து கொண்டிருக்கின்றன. மாவட்ட குழந்தைகள் நல குழு மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் ஆகியோருக்கு தகவல் கொடுத்து அவர்களது கருத்துக்களையும் கேட்ட பின்னரே பிணை குறித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதெல்லாம் நீதிமன்ற உத்தரவுகளாக வெளிவந்துள்ளன.

தனது பதவியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி ஏராளமான மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி இவ்வளவு சுலபமாக பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் கே. பாலபாரதி தலைமையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க (AIDWA) பெண்கள் 06.12.21 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அச்சமயம் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் வழக்கறிஞர் பிரிவு தலைவர் தெய்வேந்திரன் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து, அதில் பங்கேற்ற பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி, தாக்குதல் நோக்கத்தோடு கொலை மிரட்டல் தொனியில் பேசி இயக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இது ஏ.எஸ்.பி. முன்னிலையிலேயே நடந்திருக்கிறது. பங்கேற்ற பெண்கள் உடனடியாக அவருடைய நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.

பின்னர் அது குறித்து ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி அவர்கள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாருக்கு வெறும் ரசீது மட்டுமே (CSR) அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாதர் சங்க பெண்கள் குறித்து, நடக்காததை எல்லாம் ஜோடித்து தெய்வேந்திரன் கொடுத்த பொய்யான புகார் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் மாதர் சங்க பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. (தாடிக்கொம்பு காவல்நிலைய குற்ற எண்:- 793/2021 u/s 147, 342, 294B, 323, 506(1) IPC A1 K. பாலபாரதி, A2 R. வனஜா, A3 G. ராணி A4 A. அரபுமுகமது மற்றும் 25 பேர் மீது).

சமூக அக்கறையோடு, பாதிக்கப்பட்ட இளம் மாணவிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்கள் நடத்தி வருவதை தாங்கள் அறிந்ததே. அத்தகைய அமைப்பின் மீது, குற்றவாளிக்கு ஆதரவாக ஒரு தனிநபர் கொடுத்த பொய்யான புகார் மீது வழக்கு பதிவு செய்த தாடிக்கொம்பு காவல்துறை, ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கே வந்து பெண்கள் மீது தாக்குதல் தொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தெய்வேந்திரன் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் நிராகரித்துள்ளது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, நியாயமற்றது என்பதை தங்களது கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் தங்களது உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல் ஆணையம், ஜூடிசியல் அகடாமியுடன் இணைந்து போக்சோ வழக்குகளைக் காவல்துறை முறையாக கையாளுவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியிருப்பது குறித்த பத்திரிக்கை செய்தி வெளிவந்தது; அதனை வரவேற்கிறோம். அதே கவனத்தோடும், கவலையோடும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

1) ஜோதிமுருகன் சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கை சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றிட வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாதிக்கப்படுகிற பாலியல் வழக்குகளை உள்ளூர் காவல்துறை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது.

2) திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தின் பிணை உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ய வேண்டும். எந்த செல்வாக்கை பயன்படுத்தி குற்றவாளி பாலியல் துன்புறுத்தல் செய்தாரோ, அதே பொறுப்பில், பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பது மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற உணர்வையும், மிகப்பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தும்.

3) பொய்யாகப் புனையப்பட்ட புகாரின் அடிப்படையில் கே. பாலபாரதி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை உடன் ரத்து செய்திட வேண்டும்.

4) பெண்கள் மீது தாக்குதல் தொடுத்தது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜி. ராணி அளித்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்திட தாடிக்கொம்பு காவல்நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்),
தமிழ்நாடு.

Leave a Reply