மறைந்த ஊடகவியலாளர் ஒருவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுகிறோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். முன்களப் பணியாளர்களாக ஊடகவியாளலர்களை அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
அப்படி முன்களப் பணியாளராக அறிவிக்கப்பட்டும் ஊருக்கு உழைத்து மறைந்த ஊடகவியலாளர் ஒருவரின் மனைவி அரசு அறிவித்த முன்களப் பணியாளருக்கான நிவாரணம் கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தனது கோரிக்கை மனுவை, முதல்வரை தனியாக சந்தித்து கொடுக்க இயலாமால் மிகுந்த மனவேதனையடைதுள்ளார்.
மன்னார்குடி பகுதியில் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றியவர் செந்தில்குமார். அவர் கொரோனா பாதித்து கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு மன்னார்குடி பத்திரிகையாளர் சங்கம் அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, ரூ. 25 ஆயிரம் நிதி உதவியளித்தோம்.
அப்போது முதல்வர் அவர்கள் முன்களப் பணியாளராகப் பத்திரிகையாளர்களை அறிவித்துள்ளதை பயன்படுத்தி ரூ.10 லட்சம் நிதி உதவிக்கு ஏற்பாடு செய்கின்றோம் என்ற வாக்குறுதியையும் அளித்தோம்.
அதன்படி மறைந்த செந்தில் அவர்களின் மனைவி அனுசியா, மற்றும் மைத்துனர் சரன் மூலமாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பமும் அனுப்பப்பட்டது. ஆனால் இறப்புக்கான காரணம் நிமோனியாவால் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி உதவித்தொகை பெற தகுதியில்லை என்ற பதில் வந்துள்ளது.
தகுதி பெற்றிருந்தால் தற்போது திருவாரூர் வந்த போது கூட முதல்வர் அவர்கள் நிவாரணத் தொகைக்கான ரூ. 10 லட்சம் வழங்கியிருக்ககூடும். ஆனால் அது நிகழவில்லை.
மறைந்த செந்தில் அவர்கள் ஒரு மாத காலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சையிலிருந்து இறந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் கொரோனா உடல்கள் அடக்கம் செய்யும் விதிமுறைகள் பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இறப்புக்கான காரணம் வேறாக உள்ளதென கூறி சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரணம் பெற இயலவில்லை. எங்கு தவறு நடந்துள்ளது எனத் தெரியவில்லை.
இதுகுறித்து முதல்வர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல தனியாக முதல்வரை நேரில் சந்தித்து நிலையை விளக்கி, கோரிக்கை மனு அளிக்க முற்பட்டும் முடியாத நிலையில் மக்களோடு மக்களாக நின்று இன்று காலை முதல்வர் இடத்தில் மனு அளித்தார். அவரது மனைவி அனுசியா.
ஒரு பத்திரிகையாளர் உயிரோடு இருக்கும் வரை தனது குடும்பத்தை மறந்துவிட்டு, சுக,துக்கங்களை தள்ளி வைத்துவிட்டு இந்த சமூகத்துக்காக உழைக்கவேண்டியுள்ளது. அவர் மறைவுக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தினர் எவ்வித ஆதரவுமின்றி வீதியில் நிற்க வேண்டிய நிலை உள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்.
சக பத்திரிகையாளர்களும் தனது செய்தி வேலை காரணமாக நேரத்துக்கு உதவி செய்ய முடியாமல் போகின்றது. தனக்கு ஒரு நிலை வந்தாலும் இதே நிலைதான் என்பதை நினைவில்கொண்டே கனத்த இதயத்தோடு செய்தி சேகரிக்க வேண்டியுள்ளது.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் செய்தியாளராகப் பணியாற்றிய திரு. செந்தில்குமார் அவர்களின் குடும்பத்துக்கு முன்களப் பணியாளர் நிதி ரூ. 10 லட்சம் நிவாணரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
மறைந்த செந்தில்குமார் அவர்களின் மனைவி அனுசியாவின் கல்வித் தகுதியை கருத்தில்கொண்டு எதிர்கால நலன்கருதி அரசு வேலை வழங்க வேண்டும். அவதமிழக முதல்வர் செரது 3 வயது குழந்தையின் எதிர்கால கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் முன் வைக்கின்றோம் நன்றி.
—
இப்படிக்கு,
கோபாலகிருஷ்ணன் சிவராமலிங்கம்,
பத்திரிகையாளர் சங்கம்,
மன்னார்குடி.
—
செய்தி உதவி:
மன்னை அருண்ரவி.



