Home>>ஆன்மீகம்>>தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி – 3 )

மதத்தை ஒழிக்க முடியுமா? – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


பத்தொன்பதாம் நூற்றாண்டில், கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு சாரார், மத ஒழிப்பு பற்றிப் பேசினார்கள். அவர்களுக்கு விடையளித்த பிரடெரிக் எங்கெல்ஸ் கூறியவை கவனத்துக்கு உரியவை : “மதத்தை ஒழிக்கத் தொடங்கினால் அது புத்துயிர் பெறும்; மதம் தேவைப்படாத சமூக அமைப்பை உருவாக்கினால் காலப்போக்கில் மதத்தின் செல்வாக்கு சரியும். மதத்தின் வழியாக வரும் கொடுங்கோன்மையையும் எதேச்சாதிகாரத்தையும் தடுக்கப் போராடுவது தேவை. ரோமாபுரியின் போப்பரசர்கள் செய்த சர்வாதிகாரம், கொடுமைகள் தாங்க முடியாமல்தான் 16ஆம் நூற்றாண்டில் கிறித்துவத்தில் புரொட்டஸ்ட்டண்ட் பிரிவு பாதிரியார் மார்ட்டீன் லூதரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் எங்கெல்சு சுட்டிக்காட்டி, அதே மதத்திலிருந்தே கூட சீர்திருத்தங்கள் எழ வாய்ப்புண்டு என்றார்.

பெரியாரும் அவர்வழி வந்தோரும் இந்துக் கடவுள்களை எதிர்த்துக் கொச்சையாகவும், கடுமையாகவும் பேசப்பேச, பிராமணரல்லாத பக்தர்களிடையே பெரியார் மீது ஏற்பட்ட சீற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவா பேசும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. அமைப்புகள், பிராமணரல்லாதாரிடையே வேகமாக வளர்ந்தன.

கடவுள், மத நம்பிக்கை மக்களிடம் எப்படி இருக்கிறது என்பதை காரல் மார்க்ஸ் விளக்கினார்.

கொடுங்கோன்மையும் எதேச்சாதிகாரமும் நிலவிய காலத்தில் மக்கள் தங்கள் வறுமையை – உரிமைப் பறிப்பை – துன்ப துயரங்களைச் சொல்லி முறையிட அரசியல் கட்சிகள் இல்லை. வேறு சமூக சனநாயக இயக்கங்கள் இல்லை. கோயிலில் போய் முறையிட்டுக் கோரிக்கை வைத்தார்கள். கோயில் பூசாரிகள் அல்லது பாதிரியார்கள் இறைவன் உன் துன்ப துயரத்தை நீக்குவேன் என்று கூறி, கோயில் பிரசாதம் கொடுத்தார். (தமிழ்நாட்டில் பிராசதமும் திருநீறும் கொடுத்தனர் – பெ.ம.).

அப்போது துயரப்பட்டு வந்த மக்களுக்கு ஏற்பட்ட மன ஆறுதலைக் காரல் மார்க்ஸ் விரிவாகக் கூறியுள்ளார்.
குரலற்றவர்களின் குரலைக் கேட்கும் இடமாக, இதயமற்ற உலகத்தில் இதயமுள்ள பீடமாக, மக்களின் மனக் காயங்களுக்கு ஆறுதல்களால் மருந்து தடவும் இடமாகக் கோயில்கள் விளங்கின. நீங்கள் இறந்த பின் இவ்வுலகத் துன்பங்களுக்குப் பதிலாக சுகம் பெறுவீர்கள்; மேன்மை அடைவீர்கள் எனக் கோயில் பூசாரிகள் ஆறுதல் கூறினர். காயங்கள் வலிக்காமல் இருக்க அபின் பயன்படுவதுபோல், மத பீடங்கள் துன்பப்பட்ட மக்களின் மனக் காயங்களை மரத்துப் போகச் செய்தன என்றார் மார்க்ஸ்.

சனநாயக இயக்கங்கள் அற்ற காலத்தில் மட்டுமல்ல, இன்றும் மக்களின் உளவியல் தேவையாக கடவுள் உணர்வும், மதமும் செயல்படுகின்றன.

இவ்வாறான சமூக – உளவியல் பகுப்பாய்வுகள் எல்லாம் பெரியாரிடமும் இல்லை; பெரியாரியர்களிடமும் இல்லை. கடவுள் உணர்வு, மதம் ஆகியவை மனித உளவியலில் இருக்கிறது. அதன் புறவடிவங்கள்தாம் கோயில்கள்!

நாம் பெரியாரியர்களைக் கேட்டுக் கொள்வது இரட்டை வேடம் போடாதீர்கள் என்பதுதான்! இந்து மதத்தை ஒழித்துவிட முடியம் என்று இன்றும் நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? முதலில், பெரியாரியர்களாகிய நீங்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறவில்லை? அதற்கு சட்டத்தடை எதுவும் இல்லையே!

இரட்டை வேடம் போட்டு, இந்து மதம் – சிவனியம் – மாலியம் முதலிய சமயப்பிரிவுகளில் பிராமண ஆதிக்கத்திற்கு, பிராமண ஏகபோகத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டீர்கள்! பிராமண ஆதிக்கத்திற்கு மறைமுகமாகத் துணை போகிறீர்கள்! உங்களைக் காட்டித்தான், இந்து மதம் காக்க எங்களோடு வாருங்கள் என்று தமிழர்களை அழைத்துக் கொள்கின்றன ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ச.க.வும்!

(தொடரும்)

பகுதி – 1

பகுதி – 2


கட்டுரை உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


கட்டுரை சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply