Home>>அரசியல்>>தோழர் நன்மாறன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தோழர் நன்மாறன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

எளிமையாக வாழ்ந்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்த – மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. நன்மாறன் அவர்களின் உடலுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வணக்கம் செலுத்தப்பட்டது.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கடந்த 12.10.2021 அன்று மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே போராட்டம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் துண்டறிக்கைகள் வழங்கிப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நன்மாறன் அவர்களிடம் துண்டறிக்கை கொடுத்து போராட்டம் குறித்து பேசினோம். அவரும் மகிழ்ச்சியுடனே தலையாட்டினார்.

அப்போது உடல் நலிவுற்ற நிலையில் இருந்ததால் அவரால் அதிகமாக பேச முடியவில்லை. அப்போதும்கூட பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் குறித்து நலம் விசாரித்தார்.

தோழர் நன்மாறன் அவர்கள் மேடைதோறும் தமது நகைச்சுவை பேச்சால் மக்களை சிந்திக்கும் படி பேசுவார். அதனால் அவர் “மேடை கலைவாணர்” என்று அழைக்கப்பட்டார்.

மேடை தோறும் முழங்கிய அந்தக் குரல் அன்றைக்கு பேச முடியாதது கண்டு நம் தோழர்களுக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடு கேட்டு கொடுத்த மனு என்ன நிலையில் இருக்கிறது? என்று கேட்டோம். “நான் மனுவை அவசரப்பட்டு கொடுத்து விட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்” என்று வேதனையோடு தெரிவித்தார்.

மிக எளிய மனிதரான அவர் பொதுவாழ்வில் பணம், வீடு, மகிழுந்து என்று எதையும் சம்பாதிக்காமல் வாழ்நாளின் இறுதிவரை தாம் தேர்ந்தெடுத்த பொதுவாழ்வுக்கு நேர்மையாகவே வாழ்ந்து மறைந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக கடந்த 28.10.2021 அன்று இயற்கை எய்தினார்.

பொதுமக்கள் இறுதி வணக்கத்திற்காக அவரது உடல் மதுரை மாவட்ட மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநகரச் செயலாளர் கதிர் நிலவன், ரெ. இராசு, விடியல் சிவா, சு. கரிகாலன் ஆகியோர் மலர் மாலை வைத்து இறுதி வணக்கம் செலுத்தினர்.


செய்தி உதவி:
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Leave a Reply