Home>>கலை>>மின்னல் முரளி – திரைப்பட விமர்சனம்.
கலைகேரளாதமிழ்நாடுதிரைத்துறைமாநிலங்கள்

மின்னல் முரளி – திரைப்பட விமர்சனம்.

அசாத்திய நாயகன் கதாபாத்திரத்திற்கு உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய ஒன்றியத்தில் ஒரு பெரும் ரசிகர் வட்டமுள்ளது. Marvel Series படங்களுக்கு இங்கே தொடர்ச்சியாக கிடைக்கும் வரவேற்பே அதற்கு சான்று. அசாத்திய நாயகன் படங்கள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் ஏராளமான படங்கள் வந்துள்ள நிலையில் இந்திய ஒன்றியத்தில் ரொம்ப அரிதாகவே வருகின்றன. அதுவும் தென்னிந்திய திரை உலகில் ரொம்பவே அரிது.

அந்த குறையை போக்க மலையாளத்திரையுலகம் ஒரு அற்புதமான முயற்சி செய்துள்ளது. பொதுவாக இதுபோன்ற படங்கள் எடுப்பதற்கு பெரும் பொருட்செலவு தேவைப்படும். அந்த ஒரு காரணத்திற்காகவே இதுபோன்ற படங்களை எடுக்க பலர் துணிவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும் எளிமையும் யதார்த்தத்தையும் பின்பற்றும் மலையாளத்திரையுலகம் வெறும் 17 கோடியில் சிறப்பான ஒரு அசாத்திய நாயகன் படத்தை எடுத்து ஒட்டு மொத்த இந்திய ஒன்றிய திரைத்துறையினரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

மலையாளத்தில் எந்த வகைமையில் படம் எடுத்தாலும் அதில் ஒரு யதார்த்தமும், உண்மையும், எளிமையும் இருக்கும். அந்த வகையில் இதுபோன்று அசாத்திய நாயகன் கதாபாத்திரத்தையும் மிக யதார்த்தமாகவும், எளிமையாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் எடுத்துள்ளனர். ஆனால் மற்ற மொழி படங்களில் இல்லாத ஒரு தனித்துவத்துடன் எடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக இந்த மாதிரி அசாத்திய நாயகர்களின் படங்கள் கற்பனை என்ற ஒரு வகைமைக்குள் வந்துவிடும். அப்படினா முழுக்க முழுக்க கற்பனை என்ற கதைக்களத்துடன் ஒரு இயக்குனர் தன் மனதிற்கு தோன்றிய அனைத்தையும் படமாக எடுப்பார். இந்த படம் எங்கு நடக்கிறது, எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்ற எந்த விவரமும் இல்லமால், பூமியில் தான் இந்த கதை நடக்குதா?? இவங்க எல்லாம் மனித இனத்தை சேர்ந்தவர்கள் தானா? என்ற குழப்பம் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும். இருந்தாலும் நமக்கு தேவை ஒரு பொழுதுபோக்குப் படம். மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள் இருந்தால் போதும் கொடுத்த காசுக்கு மதிப்பு அப்படினு தான் எல்லா ரசிகர்களும் இந்த வகையான படங்களை விரும்பி பார்ப்பார்கள்.

கற்பனை படத்துக்கு என்னத்துக்கு தர்க்கம், எழவு என்றெல்லாம் Hollywood பட இயக்குனர்கள் யோசித்துதான் தன் மனதிற்கு அந்த நேரத்தில் என்ன என்ன கதாபாத்திரங்கள் தோன்றுகிறதோ அதை எல்லாம் படமாக எடுப்பார்கள் அது மணல் மனிதனாக இருக்கலாம், பல்லி மனிதனாக இருக்கலாம். அந்த கதாபாத்திரங்கள் எப்படி சாத்தியம் என்பதைப் பற்றியெல்லாம் அந்த இயக்குனர்களும் யோசிப்பதில்லை பார்வையாளர்களும் கண்டு கொள்வதில்லை. இதுநாள் வரை Super Hero படம் இப்படித்தான் வந்திருக்கிறது.

ஆனால் முதன்முறையாக ஒரு அசாத்திய நாயகன் படத்தை கற்பனை என்ற வகையில் இல்லாமல் Magical Realism என்ற ஒரு வகைமையில் மலையாள திரையுலகம் செய்து காட்டியுள்ளது. Realism என்பது உள்ளது உள்ளபடி யதார்த்த வாழ்வை காட்டுவது. கற்பனை படம் என்பது முழுக்க முழுக்க ஒரு கற்பனை உலகத்தை காட்டுவது. இது இரண்டுக்கும் மத்தியில் உள்ளதுதான் Magical Realism என்பது, ஒரு யதார்த்தமான நடைமுறை உலகத்தில், இயல்பான நடைமுறை வாழ்க்கையில் ஒரு அசாதாரணமான சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும், அந்த யதார்த்த உலகம் எப்படி அதை எதிர்கொள்ளும் என்பதை மிக தத்ரூபமாக சொல்வதுதான் Magical Realism.

பேய் படங்கள், பக்தி படங்கள் கூட இந்த வகைமையில் தான் வரும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த கதை எந்த இடத்தில் நடக்கிறது, எப்போது நடக்கிறது என்ற விவரங்கள் துல்லியமாக இருக்கும். கதை நடக்கும் இடம் மற்றும் காலக்கட்டம் இவை இரண்டும் பொதுவாக ஃபேண்டஸி படங்களில் இருக்காது. அதனால்தான் நம்மால் கதையோடு ஒன்றி அதுபோன்ற படங்களை பார்க்க முடியாது. சண்டைக் காட்சிகளுக்காகவே மட்டுமே அது போன்ற படங்கள் ரசிக்கப்படும்.

ஆனால் முதன்முறையாக வலுவான ஒரு கதையோடு, மிக அற்புதமான ஒரு திரைக்கதை வடிவத்தோடு ஒரு அசாத்திய நாயகன் படம் வந்துள்ளது. இதுநாள் வரை அசாத்திய நாயகன் என்பவர்களை ஒரு வேற்று கிரகத்து மனிதர்கள் போல சித்தரித்து வந்த நிலையில், சாதாரணமான 40 வயதில் நரைத்த முடியோடு, வயிற்று தொப்பையோடு, சவரம் பண்ணாத அழுக்கடைந்த முகத்துடன், லுங்கி அணிந்த ஒரு டீக்கடையில் வேலை பார்க்கும் குரு சோமசுந்தரம் போன்ற ஒருவரை சூப்பர் பவர் கொண்டவர் என்று யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. அதுதான் மலையாள திரை உலகம். Super Hero படத்திற்கு உண்டான இலக்கணத்தை எல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

ஒரு சராசரி மனிதன் எப்படி அசாத்திய நாயகன் ஆகிறான் என்பதற்கான அந்த காரணத்தை மிகச் சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். 700 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் வானியல் அதிசயத்தில் உருவான ஒரு மின்னல் தாக்கி இருவர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள் நரம்புமண்டலம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு இருவருக்குமே அதன்பின் பல அபூர்வ சக்திகள் உருவாகின்றன. அந்த சக்திகளை அவர்கள் தங்கள் சொந்த காரியத்திற்க்காக எப்படி பயன்படுத்துகிறார்கள், அதனால் ஊருக்குள் ஏற்படும் பிரச்சனைகள், சொந்த வாழ்க்கை பிரச்சனையால் அந்த சக்திகளை ஒருவர் பழிவாங்கும் நோக்கத்துடன் எவ்வாறு பயன்படுத்துகிறார் பின் அதை இன்னொருவர் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமான அசாத்திய நாயகன் படங்களுக்கு உண்டான கதை என்றாலும் திரைக்கதையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அசாத்திய நாயகன் ஆவதற்கு முன் அதற்கான பின்னணிக்கதையை அதன் அடித்தளத்தை மிகச்சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். கதையை 1980 களின் இறுதியில் அல்லது 90களின் ஆரம்பத்தில் நடப்பது போல அமைத்தது புத்திசாலித்தனமான ஒரு முடிவு. கதையை இன்றைய காலகட்டத்தில் நடப்பது போல காட்டி இருந்தால் இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இந்த கதையை தர்க்கம் மீறல் இல்லாமல் நகர்த்த பெரும் தடையாக இருந்திருக்கும். குறிப்பாக CCTV camera மற்றும் இணைய வளர்ச்சி. (இணைய வளர்ச்சி காதல் கோட்டை போன்ற படங்களை கூட இன்றைய காலத்தில் எடுக்க விடாமல் செய்து விடும்)

ஒருவருக்கு அசத்திய சக்தி வந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் எப்படி அதை உணர்கிறார்கள், எப்படி அந்த சக்தியை பயன்படுத்துகிறார்கள் முடிவில் எப்படி Super Hero ஆகிறார்கள் என்பதை நகைச்சுவையோடும், சோகத்தோடும் உணர்வுபூர்வமாக சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அசாத்திய நாயகன் என்றவுடன் வெறுமனே வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே வைத்து சண்டைக் காட்சிகளை நிரப்பி ஒரு படத்தை எடுக்க நினைக்காமல், நல்ல வலுவான திரைக்கதையை நம்பி எடுத்தது பாராட்டுக்குரியது.

டோவினோ தாமஸ் தான் படத்தின் நாயகன் என்றாலும் குரு சோமசுந்தரம் தான் படத்தில் கலக்கியிருக்கிறார். ஏற்கனவே ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர் படங்களில் மிக அற்புதமாக நடித்திருப்பார். மீண்டும் அவர் தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்துயுள்ளார். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு இரு கண்கள் போல வலுவை சேர்க்கின்றன. கலை இயக்கம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது. பெரும் பொருட்செலவில் காட்ட வேண்டிய காட்சிகளை மிக இயல்பாக அந்த சிறிய ஊரில் என்னென்ன பொருட்கள் இருக்குமோ அதை வைத்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள் அளவான Graphics காட்சிகளோடு.

படத்தின் இறுதி காட்சிகள் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. பல நூறு கோடி செலவு செய்து எடுக்க வேண்டிய காட்சிகளை இவ்வளவு குறைந்த செலவில் எடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளனர். எளிமையாக இருப்பதுதான் ரொம்ப கடினமான விடயம் என்பார்கள். படம் பார்த்தால் அது புரியும்.

இடைவேளைக்கு பிறகு படத்தின் வரும் காவல்துறை விசாரணை காட்சிகள் சற்று சொதப்பலாக இருந்தாலும் முழு படமாக பார்க்கும் பொழுது ஒரு நல்ல Super Hero படத்தை பார்த்த திருப்தியை நமக்கு கொடுத்துள்ளது. என்னைப் பொருத்தவரை மார்வல் படங்கள், Spiderman வகைப்படங்களுக்கு இது எவ்வளவோ மேல் என்று சொல்லலாம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசித்து பார்க்கலாம். வித்தியாசமான படங்களை விரும்புபவர்களுக்கும் ஒரு நல்ல விருந்து இந்த “மின்னல் முரளி”.

மிக நல்ல முயற்சி. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். OTTல் Netflixல் உள்ளது. தமிழிலும் மொழியிலும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் ரசிகர்களும் கண்டு மகிழலாம்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply