Home>>இந்தியா>>முதல்வரிடம் மனு கொடுக்க சென்றால் கைதா??
தமிழ்நாடு சட்டமன்றம்
இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

முதல்வரிடம் மனு கொடுக்க சென்றால் கைதா??

டாஸ்மாக், அதானி துறைமுகம், ஈஷா ஆக்கிரமிப்புகள் தொடர்பாக… முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று (16.12.2021) காலை 9 மணிக்கு மனு கொடுக்க சென்ற நந்தினி மற்றும் நந்தினியின் தங்கை நிரஞ்சனா இருவரையும் ஸ்டாலின் வீட்டில் இருந்த போலீசார் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

– குணா (நந்தினியின் கணவர்)

________________
முதல்வரிடம் கொடுக்கவிருந்த மனு:
_______

அனுப்புநர்
ஆ.நந்தினி BABL,
ஆ.நிரஞ்சனா BA LLB,
த/பெ. க.ஆனந்தன்,
36, பாண்டியன் நகர்,
காந்திபுரம்,
மதுரை-7
பெறுநர்,
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்,
தமிழக முதல்வர்,
சென்னை

ஐயா,

வணக்கம். தமிழக மக்களின் நலனுக்காக கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களது கவனத்துக்கு கொண்டுவந்து தீர்வு காண விரும்புகிறோம்.

*கோரிக்கை 1:*

தமிழ்நாட்டை நாசமாக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடவேண்டும்.
உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய, மதியை மயக்கக்கூடிய போதையூட்டும் மதுவகைகளை மக்களுக்கு விற்பனை செய்து மக்களின் உடல்நலனுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது ஐபிசி செக்சன் 328-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்தை தமிழக அரசே பல ஆண்டுகளாக செய்துவருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மிக மோசமான பாலியல் குற்றங்கள் உட்பட ஏராளமான குற்றங்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் காரணமாக உள்ளன. டாஸ்மாக் உட்பட பல விதமான போதையில் சிக்கி தமிழ்நாட்டு இளைஞர்கள் அழிவுப்பாதையில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அநேகமாக தமிழ்நாட்டில் உள்ள எல்லா குடும்பங்களுமே ஏதாவது ஒரு வகையில் டாஸ்மாக்கால் பாதிக்கப்படுகின்றனர். அரசே டாஸ்மாக் மூலம் போதை விற்பதால் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பதை அரசு பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.

இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போதையின் பிடியில் சிக்கி சீரழிகிறது.

எனவே தான் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் போராடிக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக உட்பட எல்லா கட்சிகளுமே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டுவோம் என தமிழக மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். இத்தகைய வாக்குறுதிகள் வெறும் வாய் வார்த்தைகளாக இருக்கின்றனவே தவிர போதையின் கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்கான சரியான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் இதுவரை எடுக்கவில்லை. எனவே தாங்களாவது தமிழ்நாட்டை நாசமாக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

*கோரிக்கை 2.*

சென்னைக்கு வெள்ள அபாயத்தை உண்டாக்கும் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்க.

அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகளை சென்ற அதிமுக ஆட்சியில் அதானி நிறுவனம் தொடங்கியது. இதற்கு ஆரம்பம் முதலே அப்பகுதி மக்களும் மீனவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பலவேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த 09.01.2021 அன்று தாங்கள் இது தொடர்பாக விடுத்த அறிக்கையில் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை மிக தெளிவாக எடுத்து சொல்லியிருந்தீர்கள்.

“சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை விரிவுபடுத்தினால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் ஆபத்து ஏற்படும், ஒரு லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள், சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும், தமிழ்நாட்டின் பொருளாதார நலன் பாதிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி அரசு மோடியுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறது. காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும்”- என அந்த அறிக்கையில் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். (ஊடகங்களில் வெளிவந்த மேற்கண்ட அறிக்கையின் நகல் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

கடல்பகுதியில் 6110 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்தை அனுமதிப்பது மிகமோசமான பாதிப்புகளை சென்னை திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தும் என்பது தங்களுக்கு நன்கு தெரியும். சமீபத்திய வெள்ள பாதிப்புகளின் பின்னணியில் பார்க்கும் போது இப்பிரச்சனையின் தீவிரத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். எனவே காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்து உத்தரவிடுமாறு கோருகிறோம்.

*கோரிக்கை 3.*

கோவை மாவட்டத்தில் ஈஷா அமைப்பின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா அமைப்பினர் வனசட்டங்களுக்கு மாறாக யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தும் முறையான அனுமதி பெறாமலும் ஏராளமான கட்டிடங்களை கட்டியுள்ளதாக தொடர்ந்து பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த17.08.2012 அன்று அப்போதைய கோவை கோட்ட மாவட்ட வன அலுவலர் திரு.வே.திருநாவுக்கரசு IFS அவர்கள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர், சென்னை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈஷா அமைப்பின் கீழ்கண்ட முறைகேடுகளை பட்டியலிட்டுள்ளார்.

* அரசு ஆணை எண் 49 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள் 24.03.2003-ன் படி மலைதல இடமாக (Hill Area) அறிவிக்கப்பட்ட இடங்களில் எந்த கட்டுமானப்பணிகள் செய்யப்பட்டாலும் மலைதல பாதுகாப்பு குழுமத்தின் (HACA) அனுமதி பெறவேண்டும். ஆனால் ஈஷா நிறுவனம் HACA அனுமதியின்றி மலைதலமாக அரசு அறிவித்த பகுதியில் கட்டிடங்களை கட்டியுள்ளது.

* வருவாய் வாரிய நிலை ஆணை (BSO) எண் 15-35(3)- ன் படி வன எல்லைக்கும் பட்டா நிலங்களுக்கும் இடையில் 2 முதல் 3 சங்கிலி வரை இடைவெளி விட்டே கட்டிடங்கள் கட்டவேண்டும். இந்த உத்தரவையும் மீறி சுற்றுச்சுவர், முன்பக்க நுழைவு வாயிலை ஈஷா நிறுவனம் நிறுவியுள்ளது.

* ஈஷா யோகா மையத்திற்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள வனசாலையை ஈஷாவுக்கு வரும் ஏராளமான வாகனங்கள் பயன்படுத்துவதால் யானைகள் வழித்தடம் மறிக்கப்பட்டு மனித-விலங்கு(யானை) முரண்பாடு அதிக அளவில் ஏற்படுகிறது.

* வனத்துறை பல முறை எச்சரித்தும் ஈஷா யோகா மையம் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டுவதை நிறுத்தவில்லை.

* சிவராத்திரி போன்ற சமயங்களில் ஈஷா மையத்தினர் லட்சக்கணக்கில் கூடுவதால் ஏற்படும் வாகன இரைச்சல், ஒலி-ஒளி அமைப்பினால் அருகாமையில் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டு வனத்தை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது. அவ்வாறு யானைகள் வெளியேறி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் போது குறைந்த எண்ணிக்கையில் உள்ள வனப்பணியாளர்களால் தடுப்பது என்பது இயலாத காரியம்.
இவ்வாறு கோவை மாவட்ட வன அலுவலர் பல ஆண்டுகளுக்கு முன்பே ஈஷா அமைப்பின் சட்டவிரோத முறைகேடுகளை தெளிவாக பட்டியலிட்டுள்ளார்.

(இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது)

மேலும் தமிழ்நாடு நிதியமைச்சர் திரு.PTR. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஈஷா மையத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மத்திய தணிக்கை துறை (CAG) அறிக்கையில் ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

ஈஷா நிறுவனத்தின் அரசியல் செல்வாக்கு காரணமாகவே இவர்களது சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க முடியவில்லை என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. சட்டத்திற்கு மேம்பட்டவர்கள் என யாரும் இருக்க முடியாது. எனவே ஈஷா அமைப்பின் முறைகேடுகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,
ஆ. நந்தினி
ஆ. நிரஞ்சனா


செய்தி உதவி:
திரு. அரங்க குணசேகரன்,
தலைவர்,
தமிழக மக்கள் புரட்சிக் கழகம்.

Leave a Reply